கே. சுப்பிரமணியம்
கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் | |
|---|---|
இந்திய அஞ்சல் தலை | |
| பிறப்பு | ஏப்ரல் 20, 1904 பாபநாசம், தமிழ்நாடு, இந்தியா |
| இறப்பு | ஏப்ரல் 7, 1971 (அகவை 66) சென்னை |
| மற்ற பெயர்கள் | திரையுலக தந்தை |
| பணி | திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை வசன எழுத்தாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1931-1957 |
| பெற்றோர் | கிருஷ்ணசாமி, வேங்கடலட்சுமி |
| வாழ்க்கைத் துணை | மீனாட்சி மற்றும் எஸ். டி. சுப்புலட்சுமி |
| பிள்ளைகள் | எஸ். வி. இரமணன், பத்மா சுப்ரமணியம் |
கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் (Krishnaswami Subramaniam, ஏப்ரல் 20, 1904 – ஏப்ரல் 7, 1971) 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குநர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். இவரது இரண்டாவது மனைவி எஸ். டி. சுப்புலட்சுமி திரைப்பட நடிகை ஆவார். எஸ். வி. இரமணன் மற்றும் பத்மா சுப்ரமணியம் இவரது குழந்தைகள்.
கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பு. உ. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர்.[1]"தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார்.[2]
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசாமி ஐயர்–வேங்கடலட்சுமி தம்பதியருக்கு முதல் மகனாகப் பிறந்தார். இவருக்கு கே. விஸ்வநாதன் என்ற தம்பி உள்ளார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார்.
திரைப்படத் துறையில்
[தொகு]தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், இயக்குனருமான ராஜா சாண்டோவிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்தார். அவருடன் இணைந்து பேயும் பெண்ணும் (1930), அநாதைப்பெண் (1930), இராஜேஸ்வரி (1931), உஷாசுந்தரி (1931) ஆகிய ஊமைப் படங்களில் பணியாற்றினார். பின்னர் இராம அழகப்பச் செட்டியாருடன் இணைந்து மீனாட்சி சினிட்டோன் என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்து பவளக்கொடி என்ற தனது முதலாவது திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்திலேயே தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் அறிமுகமானார்கள். சுப்புலட்சுமியை பின்னர் கே. சுப்பிரமணியம் மணந்து கொண்டார். சாதி அமைப்பைச் சாடி பாலயோகினி (1937) என்ற திரைப்படத்தை எடுத்தார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
[தொகு]இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாய் 1939 ஆம் ஆண்டு ஏப்ரலில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தோன்றியது. அதன் முதல் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி இருந்தார்.[1]
தியாக பூமிக்கு - கல்கியின் பாராட்டு
[தொகு]1939 மே-20ல் திரைக்கு வந்த "கல்கி"யின் தியாக பூமியைப்பற்றி கல்கியின் கருத்துரை-( ஆனந்த விகடனில் உள்ளபடியே) " இயக்குநர் சுப்ரமணியத்துக்கே முழுதும் சேர வேண்டிய இந்த பெருமையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு இஷ்டமில்லை. "தியாக பூமி" கதையில் இரண்டு மூன்று இடங்களில் அப்போது தேசத்தில் நடந்து வந்த சுதந்திர இயக்கத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் ஆத்ம சக்தியினால் நாடெங்கும் நடந்து வந்த அற்புதத்தை வெகு அழகாகவும், பொருத்தமாகவும் சித்திரித்திருக்கிறார்."காந்தி மகான் தலையை அசைத்தார், தேசத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டது." [3]
இன்பசாகரன்
[தொகு]படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இப்படத்தின் படிகள் எரிந்து போயின. இதனால் இப்படம் வெளிவரவில்லை.[4] தீ விபத்துக்குப் பிறகு (எம். யூ. ஏ. சி. ஸ்டூடியோ) படப்பிடிப்பு நிலையம் கடனில் மூழ்கி, ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் எடுத்த எஸ். எஸ். வாசன் அந்த இடத்தில் செமினியை நிர்மாணித்தார்.
இயக்கிய படங்கள்
[தொகு]- பவளக்கொடி (1934)
- நவீன சதாரம் (1935)
- நவீன சாரங்கதரா (1936)
- குசேலா (1936)
- உஷா கல்யாணம் (1936)
- பாலயோகினி (1937)
- மிஸ்டர் அம்மாஞ்சி (1937)
- கௌசல்யா பிரணயம் (1937)
- சேவாசதனம் (1938)
- தியாக பூமி (1939)
- பக்த சேதா (1940)
- பிரகலாதா (1941) (மலையாளம்)
- அனந்தசயனம் (1942)
- பர்த்ருஹரி (1944)
- மானசம்ரட்சணம் (1945)
- விகடயோகி (1946)
- விசித்திர வனிதா (1947)
- கபதி அரக்ஷகாய (1948) (சிங்களம்)
- கோகுலதாசி (1948)
- கீத காந்தி (1949)
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- "தேசாபிமான" இயக்குநர் கே.சுப்ரமணியம் பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம், தினமணி, திசம்பர் 11, 2011
- "சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய சூப்பர் இயக்குநர்!". திருமலை மூர்த்தி. சிறப்பு ஒலிபரப்புச் சேவை. 27 மார்ச் 2014. Archived from the original on 2014-04-01. Retrieved 2014-03-28.
- DIRECTOR K. SUBRAHMANYAM
- யூடியூபில் நானுந்தன் த்யானம் மறவேனே - அனந்தசயனம் படத்தில் சுப்பிரமணியம் பாடிய ஓர் அரிய கானடா ராகப் பாடல்