கேரளம் - வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளம் - வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம்
அருங்காட்சியகக் கட்டட முகப்பு
Map
அமைவிடம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா

கேரளம் - வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம் (Keralam – Museum of History and Heritage), இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் கேரளாவின் 3,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய மற்றும் வரலாற்று ஆவணங்களின் ஆதாரங்களைக் கொண்டு கேரளாவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை ஆவணப்படுத்த நிறுவப்பட்டதாகும். இந்த அருங்காட்சியகம் கேரள அரசின் சுற்றுலாத்துறை மற்றும் கேரள அரசின் தொல்லியல் துறை ஆகிய இரு துறைகளின் கூட்டு முயற்சியில் அமைந்த அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் புகழ்பெற்ற நேப்பியர் அருங்காட்சியகம் மற்றும் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ள பார்க் வியூ மாளிகையில் உள்ளது. [1] [2] பயனுள்ள உள்ளடக்க விநியோகத்தையும் பயனர் தொடர்புகளையும் செயல்படுத்தும் நோக்கில் இந்த அருங்காட்சியகம் நவீன முறைகளைக் கையாண்டு வருகிறது. ஆவணப்பட வீடியோக்களை வழங்குவதற்காக கண்காட்சிகள் மற்றும் மல்டிமீடியா அமைப்புகளை தொடுதிரை முனையங்கள் போன்ற நவீன நுட்பங்களைக் கொண்டு இந்த அருங்காட்சியகம் வழங்கி வருகிறது.

ஆலோசகர் குழு[தொகு]

கேரளம் வரலாறு மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகம் பல அருங்காட்சியக வளர்ச்சிக்கான துறைகளைச் சார்ந்த, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கட்டடக்கலை நிபுணர்கள், அருங்காட்சியகக் கட்டுமானர்கள், கலைஞர்கள், பாரம்பரிய சிறப்பாளர்கள், வரலாற்று அறிஞர்கள், அருங்காட்சியக ஆலோசகர்கள், காப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசகர் குழுவினைக் கொண்டு அமைந்துள்ளது. அவர்கள் அருங்காட்சியகங்களை நவீனப் படுத்துதல் மற்றும் புதிய அருங்காட்சியகங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் உள்ளனர். [2]

முதன்மைக் காட்சிப்பொருள்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல கலைப் பொருள்களைக் காட்சிக்கு வைத்துள்ளது. அவற்றுள் பின்வருவன உள்ளிட்ட பல பொருள்கள் உள்ளன.

பங்களிப்புகள்[தொகு]

கேரளம் அருங்காட்சியகம் பல தொல்லியல் அருங்காட்சியகங்களைப் புதுப்பிக்கும் பணிகளை நெடுமங்காட்டில் உள்ள கோயிக்கால் அருங்காட்சியகம், திருப்பணித்துராவில் உள்ள ஹில் அரண்மனை, கோழிக்கோட்டில் உள்ள பழசிராசா அருங்காட்சியகம் ஆகிய தொல்லியல் அருங்காட்சியகங்களில் நவீன உத்திகளோடு செய்து வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் ஸ்ரீபாதம் அரண்மனையில் உள்ள மாவட்ட பாரம்பரிய அருங்காட்சியகம், பாஸ்டன் பங்களாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட பாரம்பரிய அருங்காட்சியகம், பழசிகுதீரத்தில் உள்ள வயநாடு மாவட்ட பாரம்பரிய அருங்காட்சியகம், கொன்னியில் உள்ள பத்தனம்திட்டா மாவட்ட பாரம்பரிய அருங்காட்சியகம், கொல்லங்கோட்டில் உள்ள திருச்சூர் மாவட்ட பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகிய மாவட்ட பாரம்பரிய அருங்காட்சியங்களை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்கினை ஆற்றியுள்ளது. ஆவணக்காப்பகத் துறையின் நிர்வாகத்தின்கீழ் கேரளாவின் முதன் முதலாக பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களின் கையொப்பங்களைக் கொண்ட சிங்னேச்சர் மியூசியம் எனப்படும் கையொப்ப அருங்காட்சியகத்தை திருவனந்தபுரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் வல்லியூர்க்காவு என்னும் இடத்தில் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னம் ஒன்றினைத் திறந்து வைத்துள்ளது. கோட்டயத்தில் வைக்கத்தில் வைக்கம் சத்தியாகிரக காந்தி அருங்காட்சியகத்தை அமைக்கும் முகத்தான் மகாத்மா காந்தியின் வெண்கல உலோகச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத் துறையில் இவை போன்ற அனுபவங்களைக் கொண்ட கேரளம் அருங்காட்சியகம் மென்மேலும் அருங்காட்சியகம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நம்பிக்கையோடு உள்ளது. [2]

பார்வையாளர் நேரம்[தொகு]

காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாளாகும். [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Keralam - Museum of History and Heritage". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
  2. 2.0 2.1 2.2 "KERALAM - Museum of history and heritage". Keralam - Museum. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.