கு. வெ. பாலசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் கு. வெ. பாலசுப்ரமணியன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறைத் தலைவராகவும், பொறுப்புப் பதிவாளராகவும் பணியாற்றியவர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் வெங்கடாசலம் - செல்லம்மாள் தம்பதியருக்கு 06 ஏப்ரல் 1943 அன்று பிறந்தவர் கு. வெ. பாலசுப்பிரமணியன். திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்த கு. வெ. பாலசுப்பிரமணியன் தமிழில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.[1]

தஞ்சாவூர் பூண்டி திருபுட்பம் கல்லூரியில் 1968ல் இளநிலை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும், 1968-70ல் வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும் பணியாற்றினார். 1970ல் அரசுக் கல்லூரியில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பெற்றுத் திருவண்ணாமலை, திருச்சி பெரியார் கல்லூரி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் அமைந்த அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும், பொறுப்புப் பதிவாளராகவும் பணியாற்றியவர். கல்வெட்டு, சமூகப்பணி, முதியோர் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ்களும் படைப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றியவர். இவரது நூல்கள் ஆராய்ச்சிக் கட்டுரை, கவிதை, செய்யுள் –நாடகம், சிறுகதை, இளைஞர்களுக்கான வழிகாட்டி என்ற பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன. இவர் ஒரு சீரிய இலக்கிய ஆய்வறிஞர்; சிறந்த பேச்சாளர். ஆங்கில நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பேரறிவு பெற்றவர்.

இவர் பல கல்விநிறுவனங்களின் பாடநூல் குழுக்களிலும் தேர்வுக் குழுக்களில் உறுப்பினராக உள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள், கவியரங்குகள் ஆகியவற்றிலும் பங்கு பெற்று வருகின்றார். அனைத்து இந்திய வானொலியில் முப்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்குரியவர். இலக்கியப்பணி, கல்விப்பணி ஆகியவை தவிர கு.வெ.பாலசுப்பி்ரமணியன் தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியத் தலைவர்கள் மற்றும் நடுவண் அரசு அலுவலர்களுக்குத் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதுமொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். 16 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 24 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் நெறியாளராகச் செயல்பட்டுள்ளார். தற்போது கு. வெ. பாலசுப்பிரமணியன் தஞ்சாவூரில் தமிழ் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார்.

படைப்புகள்[தொகு]

கு. வெ. பாலசுப்பிரமணியனின் படைப்புகள்[2][3]:

  1. நந்தன் வெளியே நிற்கின்றான்
  2. பாரதி வாழ்கிறார்
  3. சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்
  4. காளவாய்
  5. ஆய்வியல் நெறிகள்
  6. சங்க இலக்கியம் (எட்டுத்தொகை & பத்துப்பாட்டு)
  7. சங்க இலக்கியத்தில் புறப்பொருள் (1986)
  8. சங்க இலக்கியத்தில் வாகைத்திணை
  9. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள் (1994) தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு
  10. இலக்கிய நிழல்
  11. கலம்பகத் திறன்
  12. தமிழ் வீரநிலைக் கவிதை (2006 முனைவர் க. கைலாசபதியின் முனைவர் பட்ட ஆய்வேடு மொழிபெயர்ப்பு)
  13. நிலாக்கால நினைவுகள்(கவிதைகள்)
  14. துண்டு, (சிறுகதை)
  15. நரசிம்மம்(சிறுகதை)
  16. தாயத்து(சிறுகதை)
  17. வண்டார்குழலி (காப்பியம்) தமிழக அரசின் பரிசில் பெற்றது
  18. கயற்கண்ணி (நாடகம்)
  19. தினமும் ஒரு தேவாரம்
  20. சைவ சித்தாந்த அடிப்படைகள்
  21. சிற்ப ரத்னாகரம்
  22. காவிரி தமிழகத்தின் உயிரோட்டம்
  23. அருணகிரியார்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._வெ._பாலசுப்பிரமணியன்&oldid=3637675" இலிருந்து மீள்விக்கப்பட்டது