குற்றமும் தண்டனையும்
| நூலாசிரியர் | பியோதர் தஸ்தயெவ்ஸ்கி |
|---|---|
| நாடு | உருசியம் |
| மொழி | உருசியம் |
| வகை | உளவியல் புதினம், குற்றப்புனைவு, தத்துவப் புனைவு |
| வெளியிடப்பட்டது | 1866 |
குற்றமும் தண்டனையும் (உருசியம்: Преступление и наказание) என்பது உருசியப் பேரிலக்கிய மேதை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய ஒரு பெரும் படைப்பாகும். இது முதன்முதலில் 1866-ஆம் ஆண்டு "தி ரஷ்யன் மெசஞ்சர்" எனும் இலக்கிய இதழில் தொடராக வெளிவந்தது. பின்னர் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியிடப்பட்டது. இது தஸ்தயெவ்ஸ்கியின் சைபீரியச் சிறைவாசத்திற்குப் பிறகு எழுதிய இரண்டாவது பெரிய புதினமாகும். இந்நூல் உருசிய செவ்விலக்கியங்களில் ஒரு முக்கியமான புதினமாகக் கருதப்படுகிறது.
இந்த நாவல், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த ரோடியன் ரஸ்கோல்னிகோவ் என்னும் முன்னாள் சட்டக்கல்லூரி மாணவனின் மனப் போராட்டங்களையும், அறநெறிச் சிக்கல்களையும் மையமாகக் கொண்டது. வறுமையில் வாடும் அவன், ஒரு அடகுக் கடைக்காரியைக் கொலை செய்து, அவளது பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறான். இதன் மூலம் தனது நிதிச் சிக்கல்களைத் தீர்த்து, பெரும் நன்மைகளைச் செய்ய முடியும் என நம்புகிறான். ஆனால், இந்தக் கொலைக்கான தார்மீக நியாயங்களை அவன் தேடும் அதே வேளையில், குற்ற உணர்ச்சியாலும், மன உளைச்சலாலும், தார்மீகக் குழப்பங்களாலும் சிதைந்து போகிறான். அவன் தனது செயல்களை நியாயப்படுத்த, ஒரு கோட்பாட்டை உருவாக்குகிறான். அதன்படி, சில அசாதாரணமான மனிதர்களுக்கு, சமூகத்தின் நன்மைக்காக அறநெறிக் கொள்கைகளைக் கடந்து, குற்றங்கள் செய்யவும் உரிமை உண்டு என வாதிடுகிறான். இந்தக் கோட்பாடு, நெப்போலியனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டது. ரஸ்கோல்னிகோவ், தன்னை அத்தகைய ஒரு அசாதாரண மனிதனாகக் கருதி, அடகுக் கடைக்காரியைக் கொல்வதன் மூலம் தனது கோட்பாட்டைச் சோதிக்கிறான்.

பின்னணி
[தொகு]அக்காலத்தில், தஸ்தயெவ்ஸ்கி கடன்காரர்களுக்குப் பெரும் தொகையைக் கொடுக்க வேண்டியிருந்தது, மேலும் 1864-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காலமான தனது சகோதரர் மிக்காயிலின் குடும்பத்திற்கு உதவவும் முயன்றுகொண்டிருந்தார். பிறரிடமிருந்து உதவி கிடைக்காத நிலையில், தஸ்தயெவ்ஸ்கி ஒரு கடைசி முயற்சியாக பதிப்பாளர் மிக்காயில் காத்கோவை நாடி, தாம் எழுதவிருந்த ஒரு படைப்பிற்காக முன்பணம் கோரினார். அவர் தனது கதை அல்லது குறுநாவலை (அப்போது அவர் ஒரு நாவலைப் பற்றி யோசிக்கவில்லை) காத்கோவின் மாத இதழான 'தி ரஷ்யன் மெசஞ்சரில்' வெளியிடுவதற்காக முன்மொழிந்தார். அந்த இதழ், அக்காலத்தின் ஒரு மதிப்புமிக்க வெளியீடாகவும், இவான் துர்கனேவ், லியோ டால்ஸ்டாய் ஆகிய இருவரின் படைப்புகளையும் வெளியிடும் களமாகவும் இருந்தது. 1860-களின் முற்பகுதியில் காத்கோவுடன் கடுமையான விவாதங்களில் ஈடுபட்டிருந்த தஸ்தயெவ்ஸ்கி, அதற்கு முன்பு அந்த இதழில் எதையும் வெளியிட்டதில்லை. செப்டம்பர் 1865-இல் காத்கோவுக்கு எழுதிய கடிதத்தில், தஸ்தயெவ்ஸ்கி தனது படைப்பானது, "காற்றில் மிதந்துகொண்டிருக்கும் சில விசித்திரமான, 'முற்றுப்பெறாத' கருத்துக்களுக்கு அடிபணியும் ஒரு இளைஞனைப் பற்றியது" என்று விளக்கினார். "தீவிரவாதம்" என்ற சித்தாந்தத்தின் அறநெறி மற்றும் உளவியல் அபாயங்களை ஆராய அவர் திட்டமிட்டார், மேலும் இந்த முயற்சி, பழமைவாதக் கருத்துக்கள் கொண்ட காத்கோவைக் கவரும் என்றும் அவர் நம்பினார். நவம்பர் 1865-இல் அவரால் எழுதப்பட்ட கடிதங்களில், ஒரு முக்கியமான கருத்தியல் மாற்றம் நிகழ்ந்தது: 'கதை' என்பது ஒரு 'நாவலாக' உருவெடுத்தது. அன்று முதல், "குற்றமும் தண்டனையும்" ஒரு நாவலாகவே குறிப்பிடப்படுகிறது.
சோவியத் யூனியனில் வெளியிடப்பட்ட தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்களின் முழுமையான பதிப்பில், தொகுப்பாசிரியர்கள், "குற்றமும் தண்டனையும்" நாவலுக்கான தஸ்தயெவ்ஸ்கியின் குறிப்பேடுகளை, அதன் பல்வேறு உருவாக்கக் கட்டங்களுக்கு ஏறத்தாழப் பொருந்தும் வகையில் மீண்டும் தொகுத்தனர். இதன் விளைவாக, தொடக்கத்தில் திட்டமிடப்பட்ட குறுநாவலின் ஒரு பகுதி வரைவும், மேலும் இரண்டு வேறுபட்ட வடிவங்களும் கிடைத்துள்ளன. இவை வைஸ்பேடன் பதிப்பு, பீட்டர்ஸ்பர்க் பதிப்பு மற்றும் இறுதித் திட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இறுதித் திட்டத்தில்தான், ஒரு புதுமையான மாற்றம் நிகழ்ந்தது: ஒருமையில் கதை சொல்வதிலிருந்து விலகி, மூன்றாம் நபர் கதை சொல்லி, ஆனால் தன்மை ஒருமையின் பார்வைக் கோணத்தை அடையும் ஒரு புதிய உத்தியை தஸ்தயெவ்ஸ்கி பயன்படுத்தினார். தொடக்கத்தில், தஸ்தயெவ்ஸ்கி நான்கு நபர்கள் கதைசொல்லல் வடிவங்களை யோசித்திருந்தார்: ரஸ்கோல்னிகோவ் எழுதிய நினைவுக் குறிப்பு, கொலை நிகழ்ந்து எட்டு நாட்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட அவனது ஒப்புதல் வாக்குமூலம், கொலைக்குப் ஐந்து நாட்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட அவனது நாட்குறிப்பு, மற்றும் முதல் பாதி நினைவுக் குறிப்பாகவும், இரண்டாம் பாதி நாட்குறிப்பாகவும் அமைந்த ஒரு கலவையான வடிவம். வைஸ்பேடன் பதிப்பானது, கொலைக்குப் பிறகான கதைசொல்லியின் அறநெறி மற்றும் உளவியல் ரீதியான எதிர்வினைகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறது. இது, தஸ்தயெவ்ஸ்கி தனது கடிதத்தில் காத்கோவுக்கு விவரித்த கதைக்களத்தோடு ஏறத்தாழ ஒத்துப்போகிறது, மேலும், ஒரு நாட்குறிப்பு அல்லது குறிப்பேடு வடிவில் எழுதப்பட்ட இது, முற்றுப்பெற்ற நாவலின் இரண்டாம் பகுதியாக அமைந்த உள்ளடக்கத்தோடு தொடர்புடையது.
தஸ்தயெவ்ஸ்கி தனது நூலின் ஆரம்பகட்ட வடிவத்தை ஏன் கைவிட்டார் என்பது இன்றும் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. ஜோசப் ஃபிராங்கின் கூற்றுப்படி, "ஒரு சாத்தியக்கூறு என்னவென்றால், அவரது கதாநாயகன் தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி வளரத் தொடங்கியிருக்கலாம்" என்பதாகும். 'கதைக்களம் வளர வளர, ரஸ்கோல்னிகோவின் குணாதிசயத்தில் புதிய பரிமாணங்கள் வெளிப்படுவதை தஸ்தயெவ்ஸ்கி உணர்ந்தார்’ என்பதை அவரது குறிப்பேடுகள் காட்டுகின்றன, மேலும், இந்த உருமாற்றத்திற்கு ஏற்பவே அவர் நாவலை வடிவமைத்தார். நவம்பர் 1865-இல், தஸ்தயெவ்ஸ்கி தனது நாவலைப் மூன்றாம் நபர் கோணத்தில் மாற்றி எழுத முடிவு செய்தபோதுதான், "குற்றமும் தண்டனையும்" நாவலின் இறுதி வடிவம் பிறந்தது. இந்த மாற்றம், நாவல் உருவாக்கத்தின் அனைத்து ஆரம்ப கட்டங்களிலும் நீடித்த ஒரு நீண்ட போராட்டத்தின் உச்சகட்டமாகும். இந்த முடிவை எடுத்தவுடன், தஸ்தயெவ்ஸ்கி மீண்டும் முதலில் இருந்து எழுதத் தொடங்கினார், மேலும் முந்தைய கையெழுத்துப் பிரதியின் பகுதிகளை இறுதி வடிவத்தில் எளிதாக ஒருங்கிணைக்கவும் அவரால் முடிந்தது. அவர் ராங்கலிடம் கூறியது போல், முன்பு எழுதிய அனைத்தையும் அவர் எரித்துவிடவில்லை என்று ஃபிராங்க் கூறுகிறார்.
"குற்றமும் தண்டனையும்" நாவலை சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டிய பெரும் அழுத்தத்தில் தஸ்தயெவ்ஸ்கி இருந்தார், ஏனெனில், அதே நேரத்தில், மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்த பிரபல ரஷ்ய பதிப்பாளரான ஃபியோதர் ஸ்டெல்லோவ்ஸ்கிக்காக 'சூதாடி' (The Gambler) என்ற நாவலையும் முடித்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடினமான காலகட்டத்தில், ஒரு சுருக்கெழுத்தாளராக இருந்து, பின்னர் தஸ்தயெவ்ஸ்கியின் மனைவியான அன்னா ஸ்னிட்கினா அவருக்குப் பேருதவியாக இருந்தார். "குற்றமும் தண்டனையும்" நாவலின் முதல் பகுதி, 'தி ரஷ்யன் மெசஞ்சர்' இதழின் ஜனவரி 1866 பதிப்பில் வெளிவந்தது, கடைசிப் பகுதி டிசம்பர் 1866-இல் வெளியிடப்பட்டது.
கதைச்சுருக்கம்
[தொகு]பகுதி 1
[தொகு]முன்னாள் சட்ட மாணவனான ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு மிகச் சிறிய வாடகை அறையில் கொடிய வறுமையில் வாழ்கிறான். தனிமையாலும், சமூகத்துடனான ஒவ்வாமையாலும் பீடிக்கப்பட்ட அவன், தனக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கும் முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டு, ஒரு வயதான அடகுக் கடைக்காரப் பெண்மணியைக் கொலை செய்து கொள்ளையடிக்கும் ஒரு திட்டத்தை வெறித்தனமாக மனதிற்குள் வளர்த்து வருகிறான். ஒரு கடிகாரத்தை அடகு வைப்பது போல பாசாங்கு செய்து, அவளது வீட்டிற்குச் செல்கிறான், ஆனால் அந்தச் செயலைச் செய்ய அவனால் மனதளவில் தயாராக முடியவில்லை. பின்னர், ஒரு மது விடுதியில், சமீபத்தில் தனது குடும்பத்தின் சிறு செல்வத்தையும் குடித்து அழித்த செம்யோன் சகாரோவிச் மர்மெலாதோவ் என்ற குடிகாரரைச் சந்திக்கிறான். மர்மெலாதோவ், தனது டீன் ஏஜ் மகள் சோனியா, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலாளியாக மாறிய கதையை அவனிடம் கூறுகிறார்.
மறுநாள், ரஸ்கோல்னிகோவ் தனது தாயிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறான். அதில், தனது சகோதரி துனியா, ஒரு வீட்டில் வேலைக்காரப் பெண்ணாகப் பணியாற்றும் போது, அவளது தீய எண்ணம் கொண்ட எஜமானர் ஸ்விட்ரிகைலோவால் எதிர்கொண்ட சிக்கல்கள் விவரிக்கப்பட்டிருந்தன. தனது ஆபத்தான நிலையிலிருந்து தப்பிக்கவும், தனது சகோதரனுக்கு உதவும் நம்பிக்கையிலும், துனியா ஒரு செல்வந்தரான லூசின் என்பவரை மணக்க முடிவு செய்திருக்கிறாள். அவர்கள் இருவரும் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அவனைச் சந்திக்க வரவிருக்கிறார்கள். கடிதத்தில் உள்ள விவரங்கள், லூசின் ஒரு கர்வமும், சந்தர்ப்பவாதமும் கொண்டவன் என்பதையும், துனியாவின் நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறான் என்பதையும் உணர்த்துகின்றன. சோனியா செய்ய நிர்பந்திக்கப்பட்ட தியாகத்தைப் போலவே, தனது சகோதரியின் தியாகத்தையும் கண்டு ரஸ்கோல்னிகோவ் கோபத்தில் கொந்தளிக்கிறான். தனது வறுமையையும் கையாலாகாத்தனத்தையும் வேதனையுடன் உணர்ந்த அவன், மீண்டும் தனது கொலைத் திட்டத்திற்கே திரும்புகிறான். மேலும், தொடர்ச்சியாக நடக்கும் சில அக மற்றும் புற நிகழ்வுகள், அவனை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவை நோக்கித் தள்ளுவது போல் தோன்றுகிறது.
கடும் மன இறுக்கத்துடன், ரஸ்கோல்னிகோவ் ஒரு கோடரியைத் திருடிக்கொண்டு, மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டிற்குச் செல்கிறான். அடகு வைக்க ஏதோ கொண்டு வந்திருப்பதாகப் பாசாங்கு செய்து உள்ளே நுழைகிறான், பின்னர் அவளைக் கோடரியால் தாக்கி, அவளைக் கொல்கிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக, அவளது ஒன்றுவிட்ட சகோதரி லிசவெத்தா, குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்குள் நுழைய, அவளையும் கொல்கிறான். தனது செயல்களால் அதிர்ந்துபோன அவன், சில பொருட்களையும் ஒரு சிறிய பணப்பையையும் மட்டுமே திருடுகிறான்; அடகுக் கடைக்காரியின் செல்வத்தில் பெரும்பகுதியை அப்படியே விட்டுவிடுகிறான். முற்றிலும் அதிர்ஷ்டவசமாக, அவன் அந்தக் கட்டிடத்திலிருந்து தப்பித்து, யாருக்கும் தெரியாமல் தனது அறைக்குத் திரும்புகிறான்.
பகுதி 2
[தொகு]காய்ச்சல் மற்றும் அரை மயக்க நிலையில், ரஸ்கோல்னிகோவ் திருடிய பொருட்களை மறைத்து வைத்துவிட்டு, சோர்வில் உறங்கிவிடுகிறான். மறுநாள் காலை, காவல் நிலையத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்ததும் மிகுந்த பீதியடைகிறான். ஆனால், அது அவனது வீட்டு உரிமையாளர் கொடுத்த கடன் பாக்கிக்கான அறிவிப்பு என்பது தெரியவருகிறது. காவல் நிலையத்தில் அதிகாரிகள் கொலையைப் பற்றிப் பேசத் தொடங்கியதும், ரஸ்கோல்னிகோவ் மயங்கி விழுகிறான். அவன் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டாலும், அவர்களது முகங்களைப் பார்க்கும்போது, தான் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டதை உணர்கிறான். தனது அறையில் சோதனை நடக்கலாம் என்று பயந்து, திருடிய பொருட்களை ஒரு காலி மனையில் இருந்த பெரிய கல்லுக்கு அடியில் மறைத்து வைக்கிறான். அந்தப் பணப்பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைக்கூடத் தான் பார்க்கவில்லை என்பதை அவமானத்துடன் உணர்கிறான். ஏன் என்று தெரியாமல், தனது பழைய பல்கலைக்கழக நண்பன் ரசுமீக்கினைச் சந்திக்கச் செல்கிறான். ரஸ்கோல்னிகோவ் கடுமையான நோயுடன் இருப்பது போல் தோன்றுவதாக ரசுமீக்கின் கூறுகிறான். இறுதியாக, அவன் தனது அறைக்குத் திரும்புகிறான், அங்கு அவனது நோய் முற்றி, நீண்ட மயக்க நிலைக்குச் செல்கிறான்.
பல நாட்களுக்குப் பிறகு அவன் சுயநினைவுக்கு வரும்போது, ரசுமீக்கின் அவனைக் கண்டுபிடித்து, அவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதை அறிகிறான். காய்ச்சல் குறையாத நிலையில், ரஸ்கோல்னிகோவ், ரசுமீக்கினுக்கும் மருத்துவருக்கும் இடையே நடக்கும் உரையாடலைக் பதற்றத்துடன் கேட்கிறான். அவர்கள் கொலை குறித்த காவல் துறை விசாரணையின் நிலையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்: அக்கம்பக்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த மிகோல்கா என்ற குடியானவன் கைது செய்யப்பட்டிருப்பதும், மூதாட்டியின் வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதும் தெரிகிறது. அப்போது துனியாவின் வருங்காலக் கணவன் லூசின் அங்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறான். ஆனால், ரஸ்கோல்னிகோவ் வேண்டுமென்றே அவனை அவமானப்படுத்தி, வெளியே துரத்துகிறான். கோபத்துடன் மற்றவர்களையும் வெளியேறச் சொல்லிவிட்டு, தானும் திருட்டுத்தனமாக வெளியேறுகிறான்.
அவன் கொலை பற்றிய செய்திகளைத் தேடுகிறான். மேலும், அதில் தனக்கிருக்கும் பங்கை வெளிக்காட்ட விரும்புவது போலவும் தெரிகிறது. காவல் நிலையத்தில் அவன் மயங்கி விழுந்தபோது அங்கிருந்த காவல் அதிகாரி சமியோதோவைச் சந்தித்து, அந்த இளைஞனின் சொல்லப்படாத சந்தேகங்களை வெளிப்படையாகக் கேலி செய்கிறான். அவன் குற்றச் சம்பவம் நடந்த இடத்திற்கே திரும்பிச் சென்று, அப்போது அனுபவித்த உணர்வுகளை மீண்டும் உணர்கிறான். அங்குள்ள தொழிலாளர்களிடமும், காவலாளிகளிடமும் கொலை குறித்து இயல்பாகக் கேள்விகள் கேட்டு அவர்களை எரிச்சலூட்டுகிறான், மேலும் அது குறித்துப் பேச அவர்களைத் தன்னுடன் காவல் நிலையத்திற்கு வருமாறும் அழைக்கிறான். குற்றத்தை ஒப்புக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, மர்மெலாதோவ் ஒரு வண்டியால் கொடூரமாக அடிபட்டு இறக்கும் தருவாயில் இருப்பதைக் காண்கிறான். அவன் ஓடிச் சென்று உதவி செய்து, அடிபட்டவரை அவரது குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்குத் கொண்டு சேர்க்கிறான். தன்னை மன்னிக்குமாறு சோனியாவிடம் கதறியவாறே, மர்மெலாதோவ் தனது மகளின் கைகளில் இறக்கிறார். ரஸ்கோல்னிகோவ், தனது தாய் அனுப்பிய பணத்திலிருந்து மீதமிருந்த இருபத்தைந்து ரூபிள்களை, மர்மெலாதோவின் காசநோய் பீடித்த விதவையான கத்ரீனா இவானோவ்னாவிடம், தனது நண்பனுக்குச் செலுத்த வேண்டிய கடன் என்று கூறிக்கொடுக்கிறான்.
புத்துணர்ச்சி அடைந்ததாக உணர்ந்த ரஸ்கோல்னிகோவ், ரசுமீக்கினை அழைக்கிறான். இருவரும் ரஸ்கோல்னிகோவின் வீட்டிற்குத் திரும்புகிறார்கள். தனது அறைக்குள் நுழைந்ததும், தனது தாயும், சகோதரியும் சோபாவில் அமர்ந்திருப்பதைக் கண்டு ரஸ்கோல்னிகோவ் பெரும் அதிர்ச்சி அடைகிறான். அவர்கள் அப்போதுதான் பீட்டர்ஸ்பர்க்கிற்கு வந்திருந்தனர், அவனைப் பார்த்ததில் பேரானந்தம் அடைந்தனர். ஆனால் ரஸ்கோல்னிகோவால் பேச முடியவில்லை, மயங்கிச் சரிகிறான்.
பகுதி 3
[தொகு]ரசுமீக்கின் ரஸ்கோல்னிகோவைக் கவனித்துக் கொள்கிறான், மேலும் மன உளைச்சலில் இருந்த தாயையும் சகோதரியையும் அவர்களது தங்குமிடத்திற்குத் திரும்பச் சம்மதிக்க வைக்கிறான். அவன் குடித்திருந்தாலும், துனியாவின் அழகில் மயங்கியிருந்தாலும், அவர்களுடன் செல்கிறான். மறுநாள் காலை அவர்கள் திரும்பும்போது, ரஸ்கோல்னிகோவின் உடல்நிலை தேறியிருந்தது. ஆனால், அவன் மனதளவில் இன்னும் குழப்பத்தில் இருப்பதும், அந்தச் சந்திப்பை வலுக்கட்டாயமாகச் சகித்துக்கொள்வதும் தெளிவாகத் தெரிந்தது. துனியா, லூசினுடனான திருமணத்தை முறித்துக்கொள்ள வேண்டும் என்று அவன் கோருகிறான், ஆனால் துனியா அந்தத் திருமணத்திற்கான தனது நோக்கங்களைக் கடுமையாக ஆதரித்துப் பேசுகிறாள். திருமதி ரஸ்கோல்னிகோவாவுக்கு லூசினிடம் இருந்து ஒரு குறிப்பு வருகிறது. அதில், அவர்களுக்கிடையே இனி நடக்கும் சந்திப்புகளில் தன் மகன் இருக்கக்கூடாது என்று லூசின் கோரியிருந்தான். மேலும், ரஸ்கோல்னிகோவ் 25 ரூபிள்களை "ஒழுக்கமற்ற நடத்தை கொண்ட ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு" (சோனியா) கொடுத்ததை, தான் பார்த்ததாகவும் அவன் தெரிவித்திருந்தான். லூசினும் தன் சகோதரனும் ஒருசேர இருக்கும் ஒரு சந்திப்பு கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று துனியா முடிவு செய்கிறாள். அன்று மாலை ரசுமீக்கினுடன் அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள ரஸ்கோல்னிகோவ் ஒப்புக்கொள்கிறான். ரஸ்கோல்னிகோவுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, சோனியா திடீரென்று அவன் அறைக்கதவருகே தோன்றுகிறாள். தயக்கத்துடன், அவன் நேற்று இரவு தனது விலாசத்தை அவர்களிடம் கொடுத்ததாகவும், தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அவனை அழைக்க வந்ததாகவும் விளக்குகிறாள். அவள் புறப்படும்போது, ரஸ்கோல்னிகோவ் அவளது விலாசத்தைக் கேட்டுக்கொண்டு, விரைவில் அவளைச் சந்திப்பதாகக் கூறுகிறான்.
ரஸ்கோல்னிகோவின் வேண்டுகோளின் பேரில், ரசுமீக்கின் அவனை கொலைகளை விசாரிக்கும் துப்பறிவாளர் போர்பிரி பெத்ரோவிச் என்பவரிடம் அழைத்துச் செல்கிறான். போர்பிரிக்குத் தான்தான் கொலையாளி என்று தெரியும் என்பதை ரஸ்கோல்னிகோவ் உடனடியாக உணர்கிறான். சமியோதோவுடன் இந்த வழக்கைப் பற்றி விவாதித்துவிட்டு வந்திருந்த போர்பிரி, உரையாடலின் போது ஒருவித ஏளனத் தொனியைப் பின்பற்றுகிறான். சில மாதங்களுக்கு முன்பு ரஸ்கோல்னிகோவ் எழுதிய 'குற்றம் குறித்து' என்ற கட்டுரையைப் பற்றித் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்துகிறான். அந்தக் கட்டுரையில், மனிதகுலத்தின் மேன்மையாளர்களும், மேதைகளுமான சில அரிதான நபர்களுக்கு, அவர்களது கருத்தின் வெற்றிக்குத் தடையாக இருக்கும் சட்ட அல்லது அறநெறி எல்லைகளைத் 'தாண்டிச் செல்ல' உரிமை உண்டு என்று ரஸ்கோல்னிகோவ் குறிப்பிட்டிருந்தான். ரஸ்கோல்னிகோவ் தன்னைத் திறமையாகத் தற்காத்துக் கொள்கிறான், ஆனால் போர்பிரியின் குத்தலான தொனியால் அவன் கலக்கமும் கோபமும் அடைகிறான். மறுநாள் காலை காவல் நிலையத்தில் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
ரசுமீக்கினைத் தனது தாய் மற்றும் சகோதரியுடன் விட்டுவிட்டு, ரஸ்கோல்னிகோவ் தனது வீட்டிற்குத் திரும்புகிறான். அவனுக்கு அறிமுகமில்லாத ஒரு வயதான கைவினைஞர், தன்னைப் பற்றி விசாரிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறான். ரஸ்கோல்னிகோவ் அவனுக்கு என்ன வேண்டும் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறான், ஆனால் அந்தக் கைவினைஞர் "கொலையாளி" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிடுகிறான். பேரச்சத்தில் உறைந்த ரஸ்கோல்னிகோவ், தனது அறைக்குத் திரும்பி, சிந்தனையில் ஆழ்ந்து, பின்னர் உறங்கிவிடுகிறான். மூதாட்டியைக் கொலை செய்வது போன்ற ஒரு பயங்கரமான கனவிலிருந்து அவன் விழிக்கும்போது, அங்கு மற்றொரு அந்நியன் இருப்பதைக் காண்கிறான்; இம்முறை ஒரு பிரபுத்துவத் தோற்றம் கொண்ட மனிதன். அந்த மனிதன் தன்னை அர்காடி இவானோவிச் ஸ்விட்ரிகைலோவ் என்று பணிவுடன் அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
பகுதி 4
[தொகு]ஸ்விட்ரிகைலோவ், சிநேகப்பான்மையுடன் ஆனால் தொடர்பற்ற ஒரு நீண்ட தன்னுரையாடலில் ஈடுபடுகிறான், அதற்கு ரஸ்கோல்னிகோவின் சுருக்கமான குறுக்கீடுகள் இடையிடையே முற்றுப்புள்ளி வைக்கின்றன. தனக்கு இனி துனியா மீது காதல் ஆர்வம் இல்லை என்று அவன் கூறுகிறான், ஆனால் அவள் லூசினைத் திருமணம் செய்வதைத் தடுக்க விரும்புவதாகவும், அதற்காக அவளுக்கு பத்தாயிரம் ரூபிள் தருவதாகவும் கூறுகிறான். ரஸ்கோல்னிகோவ் அவள் சார்பாகப் பணத்தை மறுத்து, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய மறுத்துவிடுகிறான். ஸ்விட்ரிகைலோவ், முந்தைய சங்கடத்தின் போது துனியாவிற்கு ஆதரவாக இருந்த தனது மனைவி, சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிட்டதாகவும், தனது உயிலில் துனியாவிற்கு 3000 ரூபிள்களை விட்டுச் சென்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறான்.
அன்று மாலை லூசினுடனான சந்திப்பு, ஸ்விட்ரிகைலோவைப் பற்றிய பேச்சில் தொடங்குகிறது; அவனது சீரழிந்த குணம், பீட்டர்ஸ்பர்க்கில் அவன் இருப்பது, அவனது மனைவியின் எதிர்பாராத மரணம் மற்றும் துனியாவிற்கு விடப்பட்ட 3000 ரூபிள்கள். துனியா தன் சகோதரனுடன் இந்த விஷயத்தைத் தீர்க்க வேண்டும் என்று வற்புறுத்தும்போது லூசின் கோபப்படுகிறான். ரஸ்கோல்னிகோவ், லூசின் தன் கடிதத்தில் எழுதிய அவதூறைச் சுட்டிக்காட்டும்போது, லூசின் நிதானமிழந்து, தனது உண்மையான குணத்தை வெளிப்படுத்துகிறான். துனியா அவனை வெளியேறி, இனி ஒருபோதும் திரும்ப வேண்டாம் என்று கூறுகிறாள். இப்போது சுதந்திரமாகவும், கணிசமான மூலதனத்துடனும், அவர்கள் உற்சாகமாக எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விவாதிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் ரஸ்கோல்னிகோவ் திடீரென்று எழுந்து வெளியேறுகிறான். இதுவே அவன் அவர்களைக் கடைசியாகப் பார்ப்பதாக இருக்கலாம் என்று கூறி, அவர்களைப் பெரும் திகைப்பில் ஆழ்த்துகிறான். குழப்பமடைந்த ரசுமீக்கினை அங்கேயே தங்கி, அவர்களை எப்போதும் கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான்.
ரஸ்கோல்னிகோவ் சோனியாவின் இடத்திற்குச் செல்கிறான். அவன் தன்னைச் சந்திக்க வந்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாலும், அவனது விசித்திரமான நடத்தையால் பயப்படுகிறாள். அவன் அவளது கொடூரமான நிலை, கத்ரீனா இவானோவ்னா மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து இரக்கமற்ற தொடர் கேள்விகளைக் கேட்கிறான். சோனியா கடவுள் மீதான நம்பிக்கையால் மட்டுமே தாக்குப் பிடிக்கிறாள் என்பதை ரஸ்கோல்னிகோவ் உணரத் தொடங்குகிறான். அவள் கொல்லப்பட்ட லிசவெத்தாவின் தோழி என்பதை வெளிப்படுத்துகிறாள். உண்மையில், லிசவெத்தா அவளுக்கு ஒரு சிலுவையையும், நற்செய்தி நூல்களின் ஒரு பிரதியையும் கொடுத்திருக்கிறாள். அவள், யோவான் நற்செய்தியிலிருந்து லாசருவை உயிர்த்தெழச் செய்த கதையை உணர்ச்சிப்பூர்வமாக அவனுக்கு வாசித்துக் காட்டுகிறாள். அவளது தந்தை அவளைப் பற்றிப் பேசியதிலிருந்து தொடங்கிய அவனுக்கிருந்த ஈர்ப்பு, மேலும் அதிகரித்து, அவர்கள் இருவரும் எதிர்காலத்தை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு செய்கிறான். புறப்படும்போது, நாளை திரும்பி வந்து, அவளது தோழி லிசவெத்தாவைக் கொன்றது யார் என்று கூறுவதாகச் சொல்கிறான்.
ரஸ்கோல்னிகோவ் தனது விசாரணைக்குச் செல்லும்போது, போர்பிரி தனது குத்தலான, ஆத்திரமூட்டும், ஏளனமான பேச்சை மீண்டும் தொடங்கி, தீவிரப்படுத்துகிறான், ஆனால் ஒருபோதும் நேரடியான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ரஸ்கோல்னிகோவின் கோபம் உச்சத்தை அடையும்போது, போர்பிரி தனது அலுவலகத்தில் உள்ள தடுப்புக்குப் பின்னால் அவனுக்காக ஒரு "சிறிய ஆச்சரியம்" இருப்பதாகக் குறிப்பாகத் தெரிவிக்கிறான். ஆனால் அந்த நேரத்தில், கதவுக்கு வெளியே ஒரு சலசலப்பு ஏற்பட்டு, ஒரு இளைஞன் (ஓவியன் மிகோல்கா) சில காவலர்களுடன் உள்ளே நுழைகிறான். போர்பிரிக்கும் ரஸ்கோல்னிகோவுக்கும் பெரும் ஆச்சரியமளிக்கும் விதமாக, மிகோல்கா கொலைகளைத் தானே செய்ததாக உரக்க ஒப்புக்கொள்கிறான். போர்பிரி அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நம்பவில்லை, ஆனாலும் அவன் ரஸ்கோல்னிகோவை விடுவிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறான். தனது அறைக்குத் திரும்பிய ரஸ்கோல்னிகோவ், அந்த வயதான கைவினைஞர் திடீரெனத் தனது கதவருகே நிற்பதைக் கண்டு திகிலடைகிறான். ஆனால் அந்த மனிதன் தலைவணங்கி மன்னிப்புக் கேட்கிறான். அவன்தான் போர்பிரியின் "சிறிய ஆச்சரியம்", மேலும் மிகோல்கா குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கேட்டிருக்கிறான். ரஸ்கோல்னிகோவ் கொலை நடந்த இடத்திற்குத் திரும்பியபோது அங்கிருந்தவர்களில் அவனும் ஒருவன், அவனது நடத்தையை போர்பிரியிடம் தெரிவித்தவனும் அவன்தான்.
பகுதி 5
[தொகு]ரஸ்கோல்னிகோவ், கத்ரீனா இவானோவ்னாவின் குடியிருப்பில் நடந்த மர்மெலாதோவின் இறுதிச் சடங்கிற்குப் பிந்தைய விருந்தில் கலந்துகொள்கிறான். விருந்தினர்கள் குடித்துவிட்டு, அரைப் பைத்தியமாக இருந்த கத்ரீனா இவானோவ்னா தனது ஜெர்மானிய வீட்டு உரிமையாளருடன் வாய்மொழித் தாக்குதலில் ஈடுபட, சூழல் மோசமடைகிறது. குழப்பம் நிலவும் போது, லூசினின் திடீர் மற்றும் அபசகுனமான தோற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. தனது குடியிருப்பிலிருந்து ஒரு 100-ரூபிள் நோட்டு காணாமல் போனதாகவும், அது, தான் ஒரு சிறிய நன்கொடை வழங்குவதற்காக அழைத்திருந்த சோனியா வந்து சென்ற அதே நேரத்தில் நடந்ததாகவும் அவன் கடுமையாக அறிவிக்கிறான். சோனியா பயத்துடன் பணத்தைத் திருடியதை மறுக்கிறாள், ஆனால் லூசின் தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்து, யாராவது அவளைச் சோதனையிட வேண்டும் என்று கோருகிறான். ஆத்திரமடைந்த கத்ரீனா இவானோவ்னா, லூசினைத் திட்டிவிட்டு, சோனியாவின் குற்றமற்ற தன்மையை நிரூபிக்க அவளது பைகளை காலி செய்யத் தொடங்குகிறாள், ஆனால் ஒரு மடிக்கப்பட்ட 100-ரூபிள் நோட்டு அவளது பைகளில் ஒன்றிலிருந்து வெளியே பறக்கிறது. அறையில் இருந்தவர்களின் மனநிலை சோனியாவுக்கு எதிராகத் திரும்புகிறது, லூசின் அவளைக் கண்டிக்கிறான், வீட்டு உரிமையாளர் குடும்பத்தை வெளியேறும்படி உத்தரவிடுகிறார். ஆனால் லூசினின் அறைத்தோழன் லெபெசியட்னிகோவ் வந்து, சோனியா புறப்படும்போது லூசின் திருட்டுத்தனமாகப் பணத்தை அவளது பையில் வைப்பதை தான் பார்த்ததாகக் கோபத்துடன் கூறுகிறான். அந்த நேரத்தில், அதை ஒரு அநாமதேய தொண்டின் உன்னத செயல் என்று தான் நினைத்ததாகக் கூறுகிறான். ரஸ்கோல்னிகோவ், லூசினின் நோக்கத்தை நம்பிக்கையுடன் அடையாளம் காட்டி லெபெசியட்னிகோவை ஆதரிக்கிறான்: சோனியாவைப் பழிவாங்குவதன் மூலம் ரஸ்கோல்னிகோவைப் பழிவாங்க வேண்டும், அதன் மூலம் அவனது குடும்பத்துடன் ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவன் நோக்கம். லூசின் அவமானப்படுத்தப்படுகிறான், ஆனால் சோனியா மனதளவில் பாதிக்கப்பட்டு, குடியிருப்பிலிருந்து ஓடிவிடுகிறாள். ரஸ்கோல்னிகோவ் அவளைப் பின்தொடர்கிறான்.
அவளது அறைக்குத் திரும்பியதும், ரஸ்கோல்னிகோவ், லூசினால் எவ்வளவு எளிதாக அவளையும், அதன் விளைவாகக் குழந்தைகளையும் அழித்திருக்க முடியும் என்பதை சோனியாவின் கவனத்திற்குக் கொண்டுவருகிறான். ஆனால் இது, நான் தான் மூதாட்டியையும் லிசவெத்தாவையும் கொன்றவன் என்ற அவனது ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ஒரு முன்னுரையாக மட்டுமே இருந்தது. வலியுடன், அந்தக் குற்றத்திற்கான தனது தத்துவார்த்த நோக்கங்களைப் புரிந்துகொள்ளாத சோனியாவுக்கு விளக்க முயற்சிக்கிறான். அவள், குற்றத்தைக் கேட்டு மட்டுமல்ல, அவனது சுய சித்திரவதையைக் கண்டும் திகிலடைந்து, அவன் காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று கூறுகிறாள். லெபெசியட்னிகோவ் தோன்றி, வீட்டு உரிமையாளர் கத்ரீனா இவானோவ்னாவை குடியிருப்பிலிருந்து வெளியேற்றிவிட்டதாகவும், அவள் புத்தி பேதலித்துப் போய்விட்டதாகவும் கூறுகிறான். அவர்கள் கத்ரீனா இவானோவ்னாவைத் தெருவில் மக்கள் சூழ்ந்திருக்கக் காண்கிறார்கள். அவள் முற்றிலும் பைத்தியமாக, பயந்துபோன குழந்தைகளைப் பணத்திற்காக நடனமாடக் கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தாள், மேலும் நோயால் மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவர்கள் அவளை சோனியாவின் அறைக்குத் திரும்ப அழைத்து வர முடிகிறது, அங்கு, மனமுடைந்து, பிதற்றியவாறே அவள் இறக்கிறாள். ரஸ்கோல்னிகோவுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, ஸ்விட்ரிகைலோவ் திடீரென்று தோன்றி, தான் துனியாவிற்காக வைத்திருந்த பத்தாயிரம் ரூபிள்களை இறுதிச் சடங்கு ஏற்பாடுகளுக்கும், குழந்தைகளை நல்ல அனாதை இல்லங்களில் சேர்ப்பதற்கும் பயன்படுத்தப்போவதாகத் தெரிவிக்கிறான். அவனது நோக்கங்கள் என்ன என்று ரஸ்கோல்னிகோவ் கேட்டபோது, அவன் ரஸ்கோல்னிகோவ், சோனியாவிடம் கொலைக்கான தனது நியாயங்களை விளக்க முயன்றபோது பேசிய வார்த்தைகளையே நேரடியாக மேற்கோள் காட்டிச் சிரிக்கிறான். ஸ்விட்ரிகைலோவ் சோனியாவின் பக்கத்து அறையில்தான் வசித்து வந்திருக்கிறான், மேலும் கொலை ஒப்புதல் வாக்குமூலத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஒட்டுக் கேட்டிருக்கிறான்.
பகுதி 6
[தொகு]ஒருவரிடமிருந்து கடிதம் வந்த பிறகு, துனியா கலக்கமாகவும், விலகியும் இருப்பதாக ரசுமீக்கின் ரஸ்கோல்னிகோவிடம் கூறுகிறான். மேலும், ரஸ்கோல்னிகோவுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, போர்பிரி இனி அவன் மீது கொலைச் சந்தேகம் கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறான். ரஸ்கோல்னிகோவ், ஸ்விட்ரிகைலோவைத் தேடிப் புறப்படவிருக்கும் போது, போர்பிரியே தோன்றி, பணிவுடன் ஒரு சிறிய உரையாடலுக்கு அழைக்கிறான். அவன் தனது முந்தைய நடத்தைக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டு, அதற்கான காரணங்களை விளக்க முற்படுகிறான். விசித்திரமாக, போர்பிரி தன்னை நிரபராதி என்று நினைக்கலாம் என்ற எண்ணத்தில் ரஸ்கோல்னிகோவ் கலக்கமடையத் தொடங்குகிறான். ஆனால் போர்பிரியின் மாறிய மனப்பான்மை, ரஸ்கோல்னிகோவ் மீதான உண்மையான மரியாதையால் உந்தப்பட்டதே தவிர, அவனது நிரபராதித்தனம் குறித்த எண்ணத்தால் அல்ல. அவன் பேச்சின் முடிவில், ரஸ்கோல்னிகோவ்தான் உண்மையான கொலையாளி என்பதில் தனக்கு முழுமையான நிச்சயம் இருப்பதாகத் தெரிவிக்கிறான். விரைவில் அவனைக் கைது செய்யப்போவதாகக் கூறி, தனக்குத்தானே எளிதாக்கிக்கொள்ள, குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறான். ரஸ்கோல்னிகோவ் போராட்டத்தைத் தொடரத் தேர்ந்தெடுக்கிறான்.
ரஸ்கோல்னிகோவ் ஒரு சத்திரத்தில் ஸ்விட்ரிகைலோவைக் கண்டுபிடித்து, துனியாவை அணுக வேண்டாம் என்று எச்சரிக்கிறான். உண்மையில் துனியாவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த ஸ்விட்ரிகைலோவ், காவல் நிலையத்திற்குச் செல்வதாக மிரட்டுகிறான், ஆனால் ரஸ்கோல்னிகோவ் அதைப் பொருட்படுத்தாமல், அவன் புறப்படும்போது பின்தொடர்கிறான். ரஸ்கோல்னிகோவ் இறுதியாக வீட்டிற்குத் திரும்பும்போது, அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த துனியா, ஸ்விட்ரிகைலோவை அணுகி, தன் சகோதரனின் ரகசியம் பற்றி அவன் கடிதத்தில் குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறாள். அவள் தயக்கத்துடன் அவனது அறைகளுக்கு உடன் செல்ல, அங்கு அவன் ஒட்டுக் கேட்டதை வெளிப்படுத்தி, அதைத் தனது ஆசைக்கு இணங்க வைக்கப் பயன்படுத்த முயற்சிக்கிறான். இருப்பினும், துனியாவிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது, அதில் அவள் அவனைச் சுடுகிறாள், மயிரிழையில் அவன் தப்புகிறான். ஸ்விட்ரிகைலோவ் மெதுவாக அவளை மீண்டும் தோட்டாவை நிரப்பி முயற்சிக்குமாறு கூறுகிறான். இறுதியில் அவள் துப்பாக்கியைக் கீழே எறிந்துவிடுகிறாள். ஆனால், அவள் தன் மீது கொண்ட வெறுப்பால் நொறுங்கிப்போன ஸ்விட்ரிகைலோவ், அவளை வெளியேறச் சொல்கிறான். அன்று மாலை அவன் சோனியாவிடம் சென்று கத்ரீனா இவானோவ்னாவின் குழந்தைகளின் ஏற்பாடுகள் குறித்துப் பேசுகிறான். அவளுக்கு 3000 ரூபிள்களைக் கொடுத்து, ரஸ்கோல்னிகோவைப் பின்தொடர்ந்து சைபீரியாவிற்குச் செல்ல விரும்பினால் இது தேவைப்படும் என்று கூறுகிறான். அவன் ஒரு மோசமான விடுதியில் இரவைக் கழித்து, மறுநாள் காலை ஒரு பொது இடத்தில் தற்கொலை செய்துகொள்கிறான்.
ரஸ்கோல்னிகோவ், உண்மையைச் சொல்லாமல், தனது தாயிடம் வேதனையுடன் விடைபெறுகிறான். துனியா அவனது அறையில் அவனுக்காகக் காத்திருக்கிறாள், அவன் கொலைகளை ஒப்புக்கொள்ளக் காவல் நிலையத்திற்குச் செல்லப்போவதாக அவளிடம் கூறுகிறான். வழியில் சோனியாவின் இடத்தில் நின்று, அவள் அவனுக்கு ஒரு சிலுவையைக் கொடுக்கிறாள். காவல் நிலையத்தில், ஸ்வி
ட்ரிகைலோவின் தற்கொலையைப் பற்றி அறிந்து, கிட்டத்தட்டத் தன் மனதை மாற்றிக்கொண்டு, கட்டிடத்தை விட்டு வெளியேறுகிறான். இருப்பினும், சோனியா (அவனைப் பின்தொடர்ந்து வந்தவள்) விரக்தியுடன் தன்னைப் பார்ப்பதைக் கண்டு, திரும்பிச் சென்று, கொலைகளுக்கு முழுமையான மற்றும் நேர்மையான ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான்.
கதாபாத்திரங்கள்
[தொகு]| பெயர்கள் - தமிழில் | பெயர்கள் - ஆங்கிலத்தில் |
|---|---|
| ரோடியன் ரோமானோவிச் ரஸ்கோல்னிகோவ் | Rodion Romanovich Raskolnikov |
| சோனியா செம்யோனோவ்னா மர்மெலாதோவா | Sonya Semyonovna Marmeladova |
| போர்பிரி பெத்ரோவிச் | Porfiry Petrovich |
| அர்காடி இவானோவிச் ஸ்விட்ரிகைலோவ் | Arkady Ivanovich Svidrigailov |
| அவ்தோத்யா ரோமானோவ்னா ரஸ்கோல்னிகோவா (துனியா) | Avdotya Romanovna Raskolnikova - Dunya |
| திமித்ரி புரோகோஃபிச் ரசுமீக்கின் | Dmitri Prokofich Razumikhin |
| பியோத்தர் பெத்ரோவிச் லூசின் | Pyotr Petrovich Luzhin |
| கத்ரீனா இவானோவ்னா மர்மெலாதோவா | Katerina Ivanovna Marmeladova |
| செம்யோன் சகாரோவிச் மர்மெலாதோவ் | Semyon Zakharovich Marmeladov |
| புல்கிரியா அலெக்ஸாந்த்ரோவ்னா ரஸ்கோல்னிகோவா | Pulcheria Alexandrovna Raskolnikova |
| அலியோனா இவானோவ்னா | Alyona Ivanovna |
| லிசவெத்தா இவானோவ்னா | Lizaveta Ivanovna |
அடிக்குறிப்புகள்
[தொகு]- Bakhtin, Mikhail (1984). Problems of Dostoevsky's Poetics. Translated by Emerson, Caryl. University of Minnesota Press. ISBN 9780816612284.
- Bourgeois, Patrick Lyall (1996). "Dostoevsky and Existentialism: An Experiment in Hermeunetics". In Mc Bride, William Leon (ed.). Existentialist Background. Taylor & Francis. ISBN 0-8153-2492-8.
- Cassedy, Steven (1982). "The Formal Problem of the Epilogue in Crime and Punishment: The Logic of Tragic and Christian Structures". Dostoevsky Centenary Conference at the University of Nottingham. Vol. 3. International Dostoevsky Society. Archived from the original on 2 October 2013.
- Church, Margaret (1983). "Dostoevsky's Crime and Punishment and Kafka's The Trial". Structure and Theme – Don Quixote to James Joyce. Ohio State University Press. ISBN 0-8142-0348-5.
- Cox, Gary (1990). Crime and Punishment: A Mind to Murder. Boston: Twayne.
- Davydov, Sergei (1982). "Dostoevsky and Nabokov: The Morality of Structure in Crime and Punishment and Despair". Dostoevsky Centenary Conference at the University of Nottingham. Vol. 3. International Dostoevsky Society. Archived from the original on 20 June 2014.
- Fanger, Donald (2006). "Apogee: Crime and Punishment". In Peace, Richard Arthur (ed.). Fyodor Dostoevsky's Crime and Punishment: A Casebook. Oxford University Press. ISBN 0-19-517562-X.
- Polhemus, Robert M.; Henkle, Roger B., eds. (1994). "The Making of Crime and Punishment". Critical Reconstructions: The Relationship of Fiction and Life. Stanford University Press. ISBN 0-8047-2243-9.
- Dostoevsky: The Miraculous Years, 1865–1871. Princeton University Press. 1995. ISBN 0-691-01587-2.
Katkov, Crime and Punishment.
- Dostoevsky: The Mantle of the Prophet, 1871–1881. Princeton University Press. 2002. Introduction. ISBN 0-691-11569-9.
- Gill, Richard (1982). "The Bridges of St. Petersburg: a Motive in Crime and Punishment". Dostoevsky Centenary Conference at the University of Nottingham. Vol. 3. International Dostoevsky Society - University of Toronto. Archived from the original on 19 September 2008.
- Hardy, James D. Jr.; Stanton, Leonard J. (1999). "Introduction". Crime and Punishment by Fyodor Dostoyevsky. Signet Classic. ISBN 0-451-52723-2.
- Hudspith, Sarah (2003). Dostoevsky and the Idea of Russianness. Routledge. ISBN 9780415304894.
- Lindenmeyr, Adele (2006). "Raskolnikov's City and the Napoleonic Plan". In Peace, Richard Arthur (ed.). Fyodor Dostoevsky's Crime and Punishment: A Casebook. Oxford University Press. ISBN 0-19-517562-X.
- McDuff, David (2002). "Introduction". Fyodor M. Dostoevsky's Crime and Punishment. Penguin Classics. ISBN 0-14-044913-2.
- Meier, Nils (2025). Dostoevskijs Studien zum autoritären Charakter: Der Roman Prestuplenie i nakazanie im Kontext der Kritischen Theorie. Ost-West-Express. Kultur und Übersetzung. Vol. 51. ISBN 978-3-7329-8776-4.
- Miller, Robin Feuer (2007). "Crime and Punishment in the Classroom". Dostoevsky's Unfinished Journey. Yale University Press. ISBN 9780300120158.
- Morris, Virginia B. (1984). "Style". Fyodor M. Dostoevsky's Crime and Punishment. Barron's Educational Series. ISBN 0-8120-3409-0.
- Ozick, Cynthia (16 February 1997). "Dostoyevsky's Unabomber". The New Yorker. p. 114. Retrieved 17 August 2008.
- Peace, Richard Arthur, ed. (2006). Fyodor Dostoevsky's Crime and Punishment: A Casebook. Oxford University Press. ISBN 0-19-517562-X.:
- Peace, Richard. "Introduction", 1–16.
- Fanger, Donald. "Apogee: Crime and Punishment", 17–35.
- Lindenmeyr, Adele. "Raskolnikov's City and the Napoleonic Plan", 37–49.
- Wasiolek, Edward. "Raskolnikov's City and the Napoleonic Plan", 51–74.
- Peace, Richard. "Motive and Symbol", 75–101.
- Rosenshield, Gary (Winter 1973). "First- Versus Third-Person Narration in Crime and Punishment". The Slavic and East European Journal 17 (4): 399–407. doi:10.2307/305635.
- Rosenshield, Gary (1978). Crime and Punishment: The Techniques of the Omniscient Author. Peter de Ridder Press. ISBN 90-316-0104-7.
- Sergeyev, Victor M. (1998). The Wild East: Crime and Lawlessness in Post-communist Russia. M.E. Sharpe. ISBN 0-7656-0231-8.
- Simmons, Ernest J. (2007). "In the Author's Laboratory". Dostoevsky – The Making of a Novelist. Read Books. ISBN 978-1-4067-6362-1.
- Wasiolek, Edward (2006). "Raskolnikov's City and the Napoleonic Plan". In Peace, Richard Arthur (ed.). Fyodor Dostoevsky's Crime and Punishment: A Casebook. Oxford University Press. ISBN 0-19-517562-X.
- Wellek, René (1980). "Bakhtin's view of Dostoevsky: 'Polyphony' and 'Carnivalesque'". Dostoevsky Studies – Form and Structure. Vol. 1. International Dostoevsky Society - University of Toronto. Archived from the original on 2 October 2013.
வெளியிணைப்புகள்
[தொகு]Criticisms