குருவாயூர் ஏகாதசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவாயூர் கோயில்

குருவாயூர் ஏகாதசி கேரளாவின் குருவாயூர் கோயிலில் கொண்டாடப்படும் விழா நாள்.

வெளுத்தபட்சத்தில் மலையாள விருச்சிக மாத (தமிழில் கார்த்திகை மாதம்) ஏகாதசி நாள் குருவாயூரைப் பொறுத்தவரை மிகவும் புனிதமான நாளாக குருவாயூர் ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி[தொகு]

ஏகாதசி என்று அழைக்கப்படும் நாளானது, வானத்தில் சந்திரன் பௌர்ணமி (முழு நிலவு) மற்றும் அமாவாசை இரவுகளுக்கு இடையிலே காட்சி தரும் பதினொன்றாம் நாளைக் குறிப்பதாகும். இது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு மிகவும் முக்கியமான விரத நாளாகும். வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் நிகழ்கின்றன.

குருவாயூர் ஏகாதசி நாள் மண்டல விரதமிருக்கும் காலத்தில் நிகழ்கின்றது. அதற்கு முன்வரும் ஒன்பதாவது நாளான நவமி மற்றும் பத்தாம் நாளான தசமியும் முக்கியம் வாய்ந்ததாகும்.

வழிபாட்டு முறை[தொகு]

ஏகாதசி விளக்கு[தொகு]

ஏகாதசி விளக்கு ஏற்றும் வழக்கம் ஏகாதசி விளக்கு கொண்டாடப்படும் நாளுக்கு ஒரு மாதம் முன்னாலேயே தொடங்கி விடுகிறது. மேலும் வெவ்வேறு மனிதர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் வழிபாடு செய்யும் வகையில் ஒவ்வொரு நாளும் விளக்குகளை ஏற்றி தமது வேண்டுதல்களை நிறைவேற்ற தொடங்கி விடுகின்றனர். ஒன்பதாவது நாளான நவமி அன்று, மரபார்ந்த வகையில், குடும்பத்தினர் விளக்குகளில் நெய்யை ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். பத்தாவது நாளான தசமியன்று, சமோரின் ராஜாவின் வகையாக, தற்பொழுது குருவாயூரப்பன் சங்கீர்த்தன சமாஜம் என்ற அமைப்பு, விளக்கை ஏற்றி வழிபடும் பொறுப்பை ஏற்று நிறைவேற்றி வருகிறது. இந்த நாளன்று விடியற்காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்காக கதவுகள் திறந்த பிறகு, இரு நாட்கள் கழிந்து பன்னிரண்டாம் நாள் அன்றே அதாவது துவாதசியன்று காலை 9.00 மணிக்கே மீண்டும் கதவுகள் மூடப்படுகின்றன, இப்படியாக தசமி மற்றும் ஏகாதசி நாட்கள் அன்று பக்தர்கள் அனைவரும் தரிசனம் மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.

துவாதசி பணம்[தொகு]

மேலும் துவாதசி நாளன்று துவாதசி (நன்கொடை) பணம் என்ற சடங்கின் படி குடும்பத்தின் நலனுக்காக ஒரு சிறு தொகை நன்கொடையாக கூத்தம்பலத்தில் வழங்கும் பழக்கமும் தொன்று தொட்டு இருந்து வருகிறது.

முக்கியத்துவம்[தொகு]

குருவாயூர் ஏகாதசி நாளன்று கஜராஜன் கேசவனின் நினைவு நாளாகவும் மேலும் கர்நாடக இசைமேதையான செம்பை வைத்திய நாத பாகவதரை போற்றும் வண்ணம் செம்பை சங்கீத உற்சவமும் அனைவரும் போற்றும் வண்ணம் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ வத்சம் பயணிகள் தங்குமிடத்திற்கு முன் அமைந்துள்ள கஜராஜன் கேசவனின் சிலைக்கு யானைகளின் கூட்டம் ஊர்வலமாக வந்து, யானைகளின் தலைவன் தனது தும்பிக்கையால் கேசவனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்க, இதர யானைகள் கேசவனுக்கு மரியாதை செலுத்துவது ஒரு கண்கொள்ளா காட்சியாகும்.

ஏகாதசி நாளன்று, உதயாஸ்தமன பூஜை எனப்படும் (விடியற்காலை முதல் நள்ளிரவு வரையிலான பூஜைகள்) அனைத்து பூஜைகளும் குருவாயூர் கோவில் நிர்வாகமே (தேவஸ்வம்) மேற்கொண்டு வருகிறது. சீவேலி எனப்படும் யானைகள் பங்கு கொள்ளும் கோவிலை சுற்றிவரும் உற்சவ நிகழ்ச்சிக்குப்பிறகு, அந்நாள் கீதோபதேச நாளாகவும் கொண்டாடப்படுவதால், ஏகாதசியன்று யானைகளின் ஊர்வலம் ஒன்றும் கோவிலில் இருந்து அண்மையிலுள்ள பார்த்த சாரதி கோவில் வரை சென்று வருவதை வழக்கமாக உள்ளது.

ஏகாதசி நாளன்று இரவில், இறுதியாக ஏகாதசி விளக்குகள் ஏற்றப்பட்டு, யானைகளுடைய பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்றும் நடைபெறும், அதுவே அன்றைய விழாவின் மகுடமான நிகழ்ச்சி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவாயூர்_ஏகாதசி&oldid=3877909" இலிருந்து மீள்விக்கப்பட்டது