கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவறை நுழைவாயில்

சுமார் 500 வருடங்கள் பழைமையான கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோயில் தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் மையப் பகுதியான பெரியகடைத்தெருவில் அமைந்துள்ளது. கும்பகோணம் தோப்புத்தெருவில் இன்னொரு ராஜகோபாலசுவாமி கோயில்உள்ளது.

தல வரலாறு[தொகு]

கோயில் சிறியதாயினும் மிகவும் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. இறைவன் திருமேனியும், தாயார் திருமேனியும் அழகே உருவாக அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள கடைத்தெருவாக இருப்பதால் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலின் முக்கிய திருவிழா 12 கருடசேவையாகும்.[1]

மூலவர், தாயார்[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் ராஜகோபாலர் ஆவார். தாயார் செங்கமலவல்லி, ருக்மணி, சத்தியபாமா. மூலவராக மட்டுமன்றி உற்சவராகவும் ராஜகோபாலர் அழகு வடிவாக உள்ளார்.
‘கோ‘ என்றால் பசு. ‘பாலன்‘ என்றால் சிறுவன். ஏழை, எளியவர்களுக்கு அருள் வழங்கும் கோபாலனாக, ராஜகோபாலசுவாமி இங்கு இருக்கிறார். துணைவியரோடு என்றும் அலங்காரப் பிரியனாக ராஜ கம்பீரம் பொருந்தியவராக எண்ணற்ற அணிகலன்களுடன் இருப்பதைப் பார்ப்பதற்கு மனம் நிறைவாக இருக்கும்.[2]

தீர்த்தம்[தொகு]

பெற்றாமரை, காவிரி அரசலாறு.

கோயில் சிறப்பு[தொகு]

மன்னார்குடி இராஜகோபாலசாமி எந்தக் கோலத்தில் அருள் பாலித்து வருகிறாரோ அதே நின்ற கோலத்தில் ருக்மணி-சத்யபாமா சமேதராக இராஜகோபால ஸ்வாமி கையில் மூன்று வளைவு கொண்ட சாட்டை கயிற்றுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும் இடக்கையை சத்தியபாமாவின் தோள் மீது வைத்தும் அழகுடன் காட்சி தருகிறார். மூலவரின் அமைப்பைப் போன்றே உற்சவ மூர்த்தியும் அமைந்துள்ளது. இராஜகோபால ஸ்வாமிக்கு வலப்புறம் செங்கமலவல்லி தாயார் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார். ஸ்வாமி சன்னிதிக்கு இடப்புறம் சங்கு சக்கரத்துடன் நான்கு கரங்களுடன் ஸ்ரீநிவாசப்பெருமாள் தனி சன்னிதி கொண்டுள்ளார். கருடாழ்வார் மற்றும் ஆஞ்சனேயர் தனி சன்னிதி கொண்டு அருள்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீசந்தானகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து பிரார்த்தித்து குழந்தைப் பேறு பெறுகின்றனர்.

விழாக்கள்[தொகு]

12 கருட சேவை[தொகு]

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, [கு 1] வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.[3] [4]

பிற விழாக்கள்[தொகு]

மாத ரோகிணி நட்சத்திரம், சித்திரை அட்சயதிருதியை, ஆடிபூர திருக்கல்யாணம், ஸ்ரீஜெயந்தி, நவராத்திரி, மாசிபிரம்மோற்சவம் ஆகிய திருவிழாகள் சிறப்பாக நடைபெறுகிறது.

குடமுழுக்கு[தொகு]

இக்கோயிலில் புதிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, 16.6.2015 அன்று குடமுழுக்கிற்கான பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை காலை புனித கும்பங்கள் புறப்பட்டு, விமானத்தை அடைந்தன. அங்கு கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு, 19.6.2015 வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.[5]

பிற கோயில்கள்[தொகு]

பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

19 சூன் 2015 கும்பாபிஷேகத்திற்குப் பின் கோயில்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. கும்பகோணம் நகரில் தோப்புத்தெருவில் மற்றொரு ராஜகோபாலசுவாமி கோயில் கும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. 12 கருட சேவைக்குரிய கோயில் இந்த இரண்டில் எது என்பது உறுதி செய்யப்படவேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.
  2. தினத்தந்தி கும்பகோணம் மகாமகம் சிறப்பு மலர், 1.3.2004
  3. 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016
  4. "கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016". Archived from the original on 2018-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  5. ராஜகோபால சுவாமி கோயில்Žƒ மகா கும்பாபிஷேகம், தினமணி, 20.6.2015