ஏ. நேசமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமரித் தந்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏ. நேசமணி
A. Nesamony
படிமம்:நேசமணி.jpg
நாகர்கோயில் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
பதவியில்
1952–1957
பதவியில்
1962–1968
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-06-12)12 சூன் 1895
மறங்கோணம், கல்குளம், திருவிதாங்கூர்
இறப்புசூன் 1, 1968(1968-06-01) (அகவை 72)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு, இந்திய தேசிய காங்கிரஸ்
கல்விதிருவனந்தபுரம் மகாராஜா கல்லூரி
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி

மார்சல் ஏ. நேசமணி (Marshal A. Nesamony, 12 சூன் 1895 - 1 சூன் 1968) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமத்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கத் தலைமையேற்றுப் பாடுபட்டவர் இவர். இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

நேசமணி விளவங்கோடு வட்டத்தைச் சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12 சூன் 1895 ஆம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தைச் சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக உணர வாய்ப்பு கிடைத்து. நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர். திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் 1921 ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியாற்றினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் உயர் சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் கீழ்சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியால் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி்க் கொடுமையை ஒழித்தார். அதே போன்று நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் மேல்சாதி வக்கீல்களுக்கும் கீழ்சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்குச் சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார்.[1] பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார்[2][3][4][5][6]. தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் இறக்கும் வரை பணியாற்றினார்.


குமரி விடுதலைப் போராட்டம்[தொகு]

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. நேசமணி தலைமையில் இந்தப் போராட்டம் எழுச்சி பெற்றது.நீண்ட போராட்டத்துக்குப் பின், 1956 நவ.,1 இல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. அதன் பின், குமரி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது. இந்தியாவின் தென் எல்லை குமரி மாவட்டம். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது குமரிமாவட்டம் கேரளாவின் ஆளுகைக்குள் சென்றது. ஆனால் இந்த மாவட்டத்தைத் தாய் தமிழகத்துடன் சேர்க்க வேண்டும் என்று இங்குள்ள மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் நேசமணி. இதனால் மார்ஷல் நேசமணி என்று இம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகக் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது[7][8][9].

பொதுப்பணி[தொகு]

நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகப் பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். விடுபட்டுப் போன தமிழ்ப் பகுதிகளான செங்கோட்டை மேற்குப் பகுதி, தேவிக்குளம்-பீர்மேடு, நெய்யாற்றின்கரை மற்றும் சித்தூர் ஆகியவற்றைத் தமிழகத்துடன் இணைப்பதற்கு இந்தியப் நாடாளுமன்றத்தில் 3 நாட்கள் தன்னந்தனியாக நின்று போராடினார். ஆனால் அதில் வெற்றிக் கிட்டவில்லை.

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி. எஸ். மணியின் குமரித் தந்தை பட்டம்[தொகு]

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களைக் கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதைக் காணுகிறேன். நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு”.[10] பி. எஸ். மணி நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மரிய மைக்கேல், தொகுப்பாசிரியர் (30 மே 2019). நேசமணி 51வது நினைவு நாள்: குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய மார்சல் நேசமணியைப் பற்றித் தெரியுமா?. பிபிசி தமிழ். https://www.bbc.com/tamil/india-48456258. 
  2. http://books.google.co.in/books?id=4JtbP3y05UgC&pg=PA146&lpg=PA146&dq=liberation+of+the+oppressed+class+a+continuous+struggle+peter&source=bl&ots=gFxOUAXW20&sig=Uu36jI2DBxxWkOucDsIH1kxOcmc&hl=en&ei=ZuzgTJXnNseycNzX0ZcM&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CBoQ6AEwAQ#v=onepage&q&f=false
  3. Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha
  4. "Volume I, 1962 Indian general election, 3rd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-11-13.
  5. Volume I, 1967 Indian general election, 4th Lok Sabha
  6. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-11-13.
  7. "Birth anniversary of Nesamony". தி இந்து. 15 June 2006. http://www.thehindu.com/2006/06/15/stories/2006061506130400.htm. 
  8. "Marshal Nesamony remembered". தி இந்து. 2 நவம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2008-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080323063722/http://www.hindu.com/2006/11/02/stories/2006110204050300.htm. 
  9. "Contingency plan for biomedical waste management". தி இந்து. 13 சூன் 2004 இம் மூலத்தில் இருந்து 2004-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040817112451/http://www.hindu.com/2004/06/13/stories/2004061306030100.htm. 
  10. பி.எஸ். மணி 12.06.1964-ல் திரு. நேசமணிக்கு எழுதிய கடிதத்திலிருந்து

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._நேசமணி&oldid=3708242" இலிருந்து மீள்விக்கப்பட்டது