கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாகேசுவரர், நாகநாதர்[1]
தாயார்:பெரியநாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:நாகதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்
குடந்தை நாகேசுவரசுவாமி கோயில் நடராஜ மண்டபத்தில் உள்ள ஓர் அழகிய சிற்பம்.

குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின்மீது நேராக விழுவதைக் காணமுடியும். இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27ஆவது சிவத்தலமாகும்.

தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் ஆகியன பிற நாகர் கோயில்களாகும்.

தல வரலாறு[தொகு]

அமுத குடத்துக்கு அருச்சித்த வில்வம் விழுந்த இடத்தில் சிவக்குறியொன்று தோன்றியது. அத்தலம் வில்வவனேசம் எனப்பெயர் பெற்றது. இத்தலம் நாகேசம் என்றழைக்கப்படுகிறது.[2] கும்பகோணத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இங்கு நாகராசன் பூசித்தால் இறைவன் நாகேசப்பெருமானாகத் திகழ்கின்றார். திருநாவுக்கரசர் இத்தலப் பெருமானைப் பாடும்போது குடந்தைக் கீழ்க்கோட்டம் என்கிறார். கும்பகோணம் பாஸ்கரசேத்திரம் என்று பெயர் பெற்றதற்கு இத்தலமே சான்றாகும்.

இறைவன், இறைவி[தொகு]

இத்தலத்து இறைவன் நாகேஸ்வரர். வில்வத்தில் இருந்து தோன்றியதால் வில்வனேசர் என்றும், ஆதிசேடனுக்கு அருள் செய்ததால் நாகேசுவரர் என்றும், பாதாளத்தில் இருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை. [3]

கோயில் அமைப்பு[தொகு]

இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே இடப்பக்கம் நந்தவனம், சிங்கமுக தீர்த்தக் கிணறு உள்ளது. வலப்பக்கம் பெரியநாயகி சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே சென்றால் இடது பக்கம் பதினாறு கால் மண்டபமும் வலது பக்கம் நடராஜ சபையும் உள்ளன.

நடராஜர் மண்டபம்[தொகு]

நடராஜ மண்டபம் ரத அமைப்பில் உள்ளது. இரு புறங்களிலும் உள்ள கல் (தேர்ச்) சக்கரம் உள்ளது. இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத் தேர்மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர் ’ஆனந்தத் தாண்டவ நடராஜ சபை’. இங்கு சிவகாமியம்மை நடனத்திற்குத் தாளம் போடும் பாவத்திலும், மகாவிஷ்ணு குழலூதும் பாவத்திலும் உள்ளனர்.[4]

கொடி மரம்[தொகு]

இந்த கோயிலின் முன்பு சுமார் 35 அடி உயரத்தில் இருந்த கொடிமரத்தின் மேல் பகுதி சேதமடைந்ததால் அதனை சீரமைத்து 29 ஜனவரி 2016 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.[5][6]

சிவராத்திரி தொடர்பு[தொகு]

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[7]

குடமுழுக்குகள்[தொகு]

கும்பகோணத்தில் இருந்த பாடகச்சேரி சுவாமிகள் எனப்படும் பாடகச்சேரி ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள் சிறுகச் சிறுக பொருள் சேர்த்து, இக்கோயிலை திருப்பணி செய்து 1923ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். 1923க்குப் பின்னர் 14 செப்டம்பர் 1959இலும், தொடர்ந்து 1 பிப்ரவரி 1988இலும் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றன.[4] இக்கோயிலின் குடமுழுக்கு 29 நவம்பர் 2015இல் நடைபெற்றது.[8]

வழிபடும் முறை[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 169
  2. கும்பகோணம் தலபுராண வசனம், குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் வெளியீடு, முதல் பதிப்பு 1897, இரண்டாம் பதிப்பு 1999
  3. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 (மகாமக ஆண்டு)
  4. 4.0 4.1 திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் தலவரலாற்றுச்சுருக்கம், திருக்கோயில் வெளியீடு, 1998
  5. நாகேஸ்வரர் கோவில் கொடிமரம் சீரமைப்பு பணி தீவிரம், தினத்தந்தி, 7.2.2015
  6. கும்பகோணத்தில் 2 கோயில்களில் கொடிமரங்கள் பிரதிஷ்டை, தினமணி, 30 ஜனவரி 2016
  7. கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015
  8. சோடசலிங்கங்கள் உள்பட 6 கோயில்களில் கும்பாபிஷேகம், கும்பகோணம் விழா கோலாகலம், தினகரன், 30 நவம்பர் 2015[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

கோயில் படத்தொகுப்பு[தொகு]