கிருஷ்ணகிரி இலட்சுமி நரசிம்மசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பழையபேட்டை, கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நரசிம்மர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
வரலாறு
அமைத்தவர்:கரிவரத ரங்கராஜ ராஜபல்லவன்

இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியில் பழையபேட்டை என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும்.[1]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் இராசகோபுரம் கட்டும்பணி நடந்துவருகிறது. கோயிலுக்கு முன்பு இரண்டு கருடகம்பங்கள் உள்ளன. ஒன்றில் அனுமனின் உருவமும் மற்றொன்றில் கருடனின் உருவமும் அமைக்கப்டுள்ளது. பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைத் தாண்டி நுழைந்தால் கருடாழ்வார் சதாசேவை சாதித்த நிலையில் உள்ளார். இதையடுத்து அழகிய பதினாறுகால் மண்டபம் அமைந்துள்ளது. இதையடுத்து உள் மண்டபம், அர்த்த மண்டபமும் கருவறை போன்றவை அமைந்துள்ளன. கருவறை விமானமானது 50 அடி உயரத்தில் ஐந்து நிலைகளுடன், எண்கோண வடிவில் உள்ளது. கருவறையில் மூலவரான நரசிம்மர் இரண்டு அடி உயர பீடத்தில், நன்கு அடி உயரத்தில், சங்கு சக்கரதாரியாக நாற்கரங்களுடன் மகாலட்சுமியை இடது மடியில் தாங்கியபடி சாந்தமாக காட்சியளிக்கிறார். மேலும் கோயில் வளாகத்தில் நாதமுனிகள், நம்மாழ்வார், காலிங்க நர்த்தனர், வாலில் மணிகட்டிய ஆஞ்சனேயர் ஆகியோர் உள்ளனர். கோயில் வளாகத்தில் மேற்குப்பார்த்த சந்நிதியில் வேணுகோபாலர் உள்ளார். [2]

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. இதில் கோயிலுக்கு கும்மனூர் கிராமத்தில் வேதாந்த தேசிகர் என்பவர் நிலக்கொடை அளித்த கல்வெட்டு உள்ளது. இவரது காலம் 1268 முதல் 1369வரை ஆகும். இக்கோயிலை பல்லவ மரபைச் சேர்ந்த கரிவரத ரங்கராஜ ராஜபல்லவன் என்பவன் கட்டியதாக கலவெட்டுகள் வழியாக அறியப்படுகிறது.

தேர்[தொகு]

இந்தக் கோயிலின் தேரானது பிற கோயில் தேர்களில் இல்லாத வண்ணம் வெண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் குடை திருப்பதி தேவஸ்தானத்தால் அளிக்கப்பட்டதாக உள்ளது. இக்குடை திருவிழாக் காலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வழிபாடு[தொகு]

ஒவ்வொர் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் 10 நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. வைகுண்டேகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இக்கோயிலானது கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பழையபேட்டை என்ற பகுதியில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா". செய்தி. தினமணி. 11 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2018.
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 89-93.