கிராபாய் பரோடேகர்
கிராபாய் பரோடேகர் ( Hirabai Barodekar ) (1905 - 1989) இவர் ஓர் கிரானா கரானாவின் இந்திய இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மேலும், இவர் உஸ்தாத் அப்துல் வாஹித் கானின் சீடராகவும் இருந்தார். [1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]
கிராபாய் சம்பாகாலி என்ற பெயருடன் கிரரானா கரானா மேதையான உஸ்தாத் அப்துல் கரீம் கான் மற்றும் தாரபாய் மானே ஆகியோருக்கு பிறந்தார். தாராபாய் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுதேச பரோடா மாநிலத்தின் "இராஜ்மாதா"வின் சகோதரரான சர்தார் மாருதி ரியோ மனேவின் மகளாவார். தாராபாய் இளமையாக இருந்தபோது பரோடாவின் சரசவையில் இசைக்கலைஞராக அப்துல் கரீம் கான் இருந்தார். இவருக்கு இசையை கற்றுக் கொடுக்கும்போது இருவரும் காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்; ஆனால் தாராபாயின் பெற்றோர் இதை மறுத்துவிட்டனர், எனவே இந்த இணை மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது (அப்துல் கரீமின் சகோதரர் உஸ்தாத் அப்துல் ஹக் கானுடன்). இந்த இணை மும்பைக்கு குடிபெயர்ந்தது, இவர்களுக்கு சுரேஷ் அல்லது அப்துல் இரகுமான் மற்றும் கிருட்டிணா என்ற இரு மகன்களும், மற்றும் சம்பகாலி, குலாப், மற்றும் சாகினே அல்லது சோட்டுட்டி என்ற மூன்று மகள்களும் இருந்தனர். அவர்களின் பிற்கால வாழ்க்கையில், ஐந்து பேரும் முறையே சுரேசுபாபு மானே, கிருட்டிணாராவ் மானே, கிராபாய் படோடேகர், கமலாபாய் படோடேகர் மற்றும் சரசுவதிபாய் இரானே என்று அறியப்பட்டனர் .
இவர் தனது சகோதரர் சுரேசுபாபு மானேவிடம் தனது ஆரம்ப பயிற்சியையும் பின்னர் கிரானா கரானாவின் முக்கிய நபரான உஸ்தாத் அப்துல் வாஹித் கானிடமிருந்து பயிற்சியையும் பெற்றார். இவர் கிராபாயின் தந்தை உஸ்தாத் அப்துல் கரீம் கானின் உறவினராக இருந்தார். (1922 ஆம் ஆண்டில், கிராபாயின் பெற்றோர் பிரிந்தனர்; இதனால் கிராபாய் தனது தந்தையிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட இசைப் பாடங்களை மட்டுமே பெற்றார்.)
இவர் அடிக்கடி தனது தங்கை சரசுவதி இரானேவுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். [2]
பாடும் தொழில்[தொகு]
கிராபாய் தனது 15 வயதில் கேசர்பாய் கெர்கரின் ஆதரவின் கீழ் தனது முதல் பொது நிகழ்ச்சியில் தோன்றினார். இவர் காயல், தும்ரி, மாரத்தி நாட்டியா சங்கீதம் மற்றும் பஜனை ஆகியவற்றில் நிபுணராக இருந்தார். மேலும், இந்துஸ்தானி இசையை மக்களிடையே பிரபலப்படுத்திய பெருமைக்குரியவராவார். இவர் இந்தியாவில் பெண் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்தார். இந்தியாவில் நுழைவுச்சீட்டு இசை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திய முதல் பெண் கலைஞர் ஆவார். இவர் எப்போதும் மேடைகளில் பிரபலமாக இருந்தார்.
மரியாதைகள்[தொகு]
இந்துஸ்தானி இசையில் கிராபாயின் பணி இவருக்கு பல மதிப்புமிக்க பாராட்டுக்களைப் பெற்றது. இவருக்கு 1965 ஆம் ஆண்டில் சங்கீத அகாதமி விருதும் [3] மற்றும் 1970 இல் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது. [4] நாடகத்துக்கான பங்களிப்புக்காக விஷ்ணுர்ஹாஸ் பவே விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
பிரித்தானிய இராச்சியத்திலிருந்து (ஆகஸ்ட் 15, 1947) இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள செங்கோட்டையில் இருந்து வந்தே மாதரம் என்ற தேசிய கீதத்தைப் பாட இவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1953 இல் ஒரு இந்திய தூதுக்குழுவின் ஒரு பகுதியாக சீனா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று வந்தார்.
குடும்பம்[தொகு]
இவர் சிறீ மணிக்ராவ் காந்தி-பரோடேகர் என்பவரை மணந்தார்.
குறிப்புகள்[தொகு]
- ↑ Sharma, Manorama (2006). Tradition of Hindustani Music. A.P.H. Publishing Corporation. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7648-999-9. https://books.google.com/books?id=YdtqrooCo-oC&printsec=frontcover#v=onepage&q=hirabai%20badodekar&f=false.
- ↑ Wade, Bonnie C. (1994). Khyāl: creativity within North India's classical music tradition. Cambridge University Press Archive. பக். 196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-25659-3. https://books.google.com/books?id=MiE9AAAAIAAJ&pg=PA196&dq=%22Saraswati+Rane%22+-inpublisher:icon&cd=2#v=onepage&q=%22Saraswati%20Rane%22%20-inpublisher%3Aicon&f=false.
- ↑ "Sangeet Natak Akademi - All Awardees". Sangeet Natak Akademi. 31 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. 15 November 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 July 2015 அன்று பார்க்கப்பட்டது.