காயகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காயகல்ப மூலிகைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும். காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது. அழுகணிச் சித்தர் பாடல்களில் இந்த காயகற்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

பாடல்[தொகு]

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமற் சார்வார் தமக்கு

இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.

தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும்.

இங்கே

பூ என்பது தாமரைப்பூ

மேனி என்பது குப்பைமேனி

தும்பி என்பது தும்பைச்செடி

கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை)

பாதம் என்பது செருப்படை

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்கு நரை, திரை, மூப்பு, பிணி அணுகாது. நீண்ட ஆயுளுடன் இந்த உலகத்தில் வாழலாம். இந்த ஐந்து மூலிகைகளிலுமுள்ள செம்பு, இரும்பு, ஈயம் போன்ற தாதுப்புக்கள் நரம்புத்தளர்ச்சி, எலும்புருக்கி மற்றும் பலகீனம் ஆகியவற்றால் ஏற்படும் ஆயுள் குறைவை நிவர்த்தி செய்யுமாகையால், முன்னோர்கள் காயகல்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியிருக்கின்றனர். நம்மில் சிலர் இந்த மூலிகைகள் பலன் கொடுக்குமா என்று சந்தேகம் கொள்ளலாம். ஆனால் பதிணெண் சித்தர்களுள் ஒருவரான தேரையர் இதில் சில மூலிகைகளைப் பற்றி பின்வருமாறு கூறியிருக்கின்றார்.

சீறுகின்ற பாம்போடு சில்விஷங்கள் சென்னிவலி

ஏறுகபம் மாந்தம் இருக்குமோ - நாறுமலர்க்

கொம்பனைய மாதே குளிர்சீத சன்னிவிடும்

தும்பையிலை யென்றொருக்கால் சொல்

தந்த மூலப்பிணி தீர்ந்திடும் புண் சர்வ விஷம்

உந்து குன்மம்வாதம் உதிர்மூலத் தினவு

சூலம் சுவாசம் தொடர்பீனிசம் கபம்போம்

ஞாலங் கொள் மேனி அதனால்

செருப்படைக்கு வாதம்போம் சேர்வான மேகம்

இருப்படிக்கொள் பொல்லாஇசிவும் விருப்படிக்கும்

சூலையொடு வாதகுன்மம் தோற்றா தொருநாளும்

வேலையொத்த கண்ணாய் விளம்பு

காயகல்ப மூலிகைகளை உபயோகிக்கும் முறை[தொகு]

வெண்தாமரைப்பூ இதழ்கள் - 840 கிராம்

குப்பைமேனி - 700 கிராம்

தும்பை சமூலம் - 560 கிராம் ( சமூலம் என்பது ஒரு செடியின் இலை, தண்டு, மலர், வேர் எல்லாவற்றையும் உலர்த்தி இடித்த பொடி)

கையாந்தகரை - 300 கிராம்

செருப்படை - 280 கிராம்

இவை அனைத்தையும் நிழலில் உலர்த்தித் தனித்தனியாக இடித்து ஒரு போத்தலில் வைத்துக் கொள்ளவும். 5 கிராம் பொடியை காலையிலும், மாலையிலும் சுத்தமான தேனில் குழைத்துச் சாப்பிட்டு, சீனாக் கற்கண்டு கலந்த பசுப்பால் 175 மில்லி லீற்றர் ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். இந்த மருந்தைச் சாப்பிடுவதற்கு முன்னர் பேதிக்குச் சாப்பிட்டு குடலைச் சுத்தமாக்கிக் கொள்ளவேண்டும்.

மருந்து சாப்பிடும்போது கைக்கொள்ள வேண்டிய பத்தியம்[தொகு]

மருந்து முடியும் வரை பாலும் சாதமும் தவிர வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. பெண்கள் சகவாசம் கூடாது. மலை வாழைப்பழம் மாத்திரம் சாப்பிடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. இயற்கை தரும் இன்மருந்துகள் - வைத்திய விசாரதை T.S. ஜனககுமாரி
  1. சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன் இயற்கை தரும் இன்மருந்துகள் - வைத்திய விசாரதை T.S. ஜனககுமாரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயகற்பம்&oldid=3407613" இலிருந்து மீள்விக்கப்பட்டது