காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் கங்கணேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கங்கணேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கங்கணேஸ்வரர்.
தீர்த்தம்:கங்கணதீர்த்தம்

காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் (கங்கணேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இச்சந்நிதியின் மூலவர் அறை சுமார் 15-அடி பாதாளத்தில் உள்ளதால், மக்கள் இச்சிவலிங்கத்தை பாதாளீஸ்வரர் என்று வழங்குகின்றனர். மேலும், இவ்விறைவரை அம்பிகை வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

தல பெருமை[தொகு]

பெரிய காஞ்சிபுரம் சின்னகம்மாளத் தெருவில் கிழக்கு பார்த்த சன்னதியாக உள்ள இது, பாதாளேஸ்வரர் கோவில் என வழங்கப்படுகிறது. இது காமாட்சி அம்மையார் ஏகாம்பரநாதரை வழிபடுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்ட தலமாகும். கங்கணதீர்த்தம் (குளம்) எதிரில் மறைக்கப்பட்டிருக்கிறது.[2]

தல வரலாறு[தொகு]

அம்பிகை சிவபெருமானை வழிபட வேண்டி, காஞ்சியை அடைந்து, சிவலிங்கப் பிரதிட்டை செய்து, அவ்விறைவனை வழிபட்டு, பொன்னாலான காப்புநாணை (கங்கணம்) அணிந்து கொண்டார். அதுவே கங்கணேசம் எனப் பெயர் பெற்றதாக வரலாறு.[3]

தல பதிகம்[தொகு]

  • பாடல்: (கங்கண தீர்த்தம் கங்கணேச்சரம்)
அலங்கொளிக் கரத்துச் செம்பொற் காப்புநாண் அணிந்து மூவா
இலிங்கம்ஆண் டிருவிப் பூசை இயற்றினாள் அனைய தீர்த்தம்
நலங்கெழு காப்புத் தீர்த்த மெனப்பெயர் நவில்வர் சேர்ந்தார்
குலங்களோ டுய்யச் செய்யும் இலிங்கமுங் கொள்ளும் அப்பேர்.
  • பொழிப்புரைகள்:
பேரொளி விளங்கும் திருக்கை யிறையில் செம்பொற் காப்புக் கயிற்றை
அணிந்து மாறுபடாத சிவலிங்கத்தை அங்குத் தாபித்துப் பூசனையைப்
புரிந்தனர். அத்தீர்த்தத்தினை நன்மை கெழுமிய காப்புத் தீர்த்தமெனக் கூறுவர்.
சார்ந்து தரிசித்தோர் மரபோடு முய்யச் செய்யும்
அங்கு வழிபாடு செய்த சிவலிங்கமும் கங்கணேச்சரம் எனப்பெயர் பெறும்.[4]

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் சின்னகம்மாளத் தெருவில் கங்கணேசம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி இறவாதீசுவரர் கோயிலுக்கு செல்லும் சாலையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]