காங்கேயம் காளை


காங்கேயம் காளை (Kangayam cattle) என்பது இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாடு இனம் ஆகும். இந்த வகை இனங்கள், இந்தியாவின் பிரசித்தி பெற்ற உள்நாட்டு இனம் ஆகும். தென் இந்தியாவின் அடையாள சின்னமாக, இந்தக் காளைகள் போற்றப்படுகின்றன.[1]
காங்கேயம் காளைகள் இயல்பாக 4,000 முதல் 5,000 கிலோ எடையிலான வண்டிப் பாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. கடுமையான காலநிலைக்கும், உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்பவும் தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்சக் காலத்திலும் நொடித்து போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.[2]
காங்கேயம் பசுக்களின் பாலில் உயர்தரமான சத்துக்கள் காணப்படுகின்றது. பொதுவாகப் பால் உற்பத்தி நேரங்களில் இந்த வகையான இனங்கள் ஒரு நாளைக்கு 1.8 லிட்டரிலிருந்து 2.0 லிட்டர் பால் வரை கொடுக்கும் தன்மை கொண்டது. இன்னும் பல இன பசுக்களின் வருகையினாலும் விவசாயம் குறைந்து போனதினாலும், இந்த இனங்கள் குறைந்து கொண்டுவருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.[3] காங்கேய மாடுகள் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு வேலைக்காக விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன.
ஏற்றுமதி
[தொகு]
காங்கேயம் காளைகள் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டும் இல்லாமல் இலங்கை, பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேயா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் பிரேசில் நாட்டில் இந்த வகை காளைகள் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு, மரபு வள மையம் சார்பாக சிறப்புக்கவனம் செலுத்தப்படுகிறது.[4]
தோற்றம்
[தொகு]காங்கேயம் மாடுகள் பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும், ஆறு மாத காலத்திற்குப் பிறகு சாம்பல் நிறத்துக்கும் மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்தில் இருக்கும், திமில், முன்பகுதி, பின்கால் பகுதிகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.[5]
உட்பிரிவுகள்;
- மயிலை (வெள்ளி)
- பிள்ளை (வெண்மை)
- செவலை (சிவப்பு)
- காரி (கறுப்பு)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பண்பாட்டில் காங்கேயக் காளைகள். தி இந்து தமிழ் 05 செப்டம்பர் 2015
- ↑ [1]
- ↑ "April 12: A movement to save Kangayam cattle gaining momentum". தி இந்து. 12 April 2012. Retrieved 13 April 2012.
- ↑ http://tamil.thehindu.com/general/literature/தமிழகப்-பண்பாட்டில்-காங்கேயக்-காளைகள்/article7616519.ece?homepage=true&relartwiz=true
- ↑ ஆதி (3 பெப்ரவரி 2018). "இது நம்ம விலங்கு: தென்னிந்தியாவின் அடையாளம்". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 3 பெப்ரவரி 2018.
வெளி இணைப்புகள்
[தொகு]- Palayakottai Pattagar Cattle Farm and Research Centre
- Oklahoma State University: Kangayam