களுதாவளை பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கழுதாவளை பிள்ளையார் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிழக்கிலங்கையின் களுதாவளைப் பகுதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் ஒருங்கே, இயற்கையாக அமையப் பெற்ற திருத்தலம் களுதாவளைப் பிள்ளையார் கோயில் (kaluthavalai pillaiyar kovil) ஆகும்.

அமைவிடம்[தொகு]

களுதாவளை பிள்ளையார் கோயில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை என்ற ஊரில் அமைந்துள்ளது. கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கே மட்டுநகர் வாவியும், தெற்கே களுவாஞ்சிக்குடியும், வடக்கே தேத்தாந்தீவு குடியிருப்பும் எல்லைகளாக உள்ளன.

வரலாறு[தொகு]

தொன்மைவாய்ந்த இக்கிராமத்தில் வெற்றிலைச் சடங்கு செய்வதற்காக வேடுவ குலத் தலைவன் 'களுவன்' களுதாவளையின் வடமேற்கு மூலையில் ஆறும் சுனையும் அழகிய வயலும் சூழ்ந்த மணல் மேட்டில் பற்றைக் காடுகளை வெட்டி அகற்றினான். 'களுவன்' வணங்கிய இடத்தை 'களுதேவாலயம்' என்று அழைத்தார்கள். கதிர்காம யாத்திரிகர் இருவர் இவ்விடத்தில் தங்கி ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்பதைக் கண்டு சுனையில் நீராடி திரிலிங்க பூசை செய்தனர். அப்போது நிலமட்டத்தில் சுயம்புலிங்கம் ஒன்றைக் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல எத்தனித்த போது சிவலிங்கம் சலம் வரையில் நீண்டு சென்றது. சுயம்புலிங்கம் அடியார்களுக்கு அற்புதங் காட்டியது.

ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை "இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே" என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

கலி பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப மாதம் இரண்டாந் திகதிதனில் முகூர்த்தமிட்டு ஆலயமாக வணங்கலானார். ஆரம்பத்தில் நாகதம்பிரான், வைரவர் பரிவார மூர்த்திகளாய் இருந்தனர். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகற் பூசை நடைபெற்று வந்தது. நாகதம்பிரான் ஆலயத்துள் பெரிய குரைச்சி ஒன்றினுள் பால், பழம் கரைத்து வைக்க நாகங்கள் குடித்து வந்தன.

நாகங்களே கோவிலுக்கு காவலாகவும் இருந்தன. கோவிலின் உள்ளும் சூழவிருந்த மருத மரப் பொந்துகளிலும் அவை வாழ்ந்தன. நாகத்தின் கண்ணீரில் இருந்து பிறந்த கண்ணகை அம்மனை வைகாசித் திங்களில் குளிர்த்தியாட்ட செட்டிப்பாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு குளிர்த்திக் குரைச்சியாக இதைக் கொண்டு செல்வது சம்பிரதாயம்.

களுதாவளையில் கண்ணகை அம்மனை முன்னிறுத்தி கொம்புச் சந்தி என்ற இடத்தில் கொழும்புமுறி விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற போது சாய்ந்தமருது, நாகமுனை, சேனைக்குடி, எருவில், மகிழூர், போரேகு நிகர், நாதனை என்னும் இடங்களிலிருந்து வந்தவர்களில் பலர் இவ்வூரில் குடிபதிந்தனர்.

'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது.

அறங்காவலர் சபை[தொகு]

இவ்வூரில் வாழ்கின்ற ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் சபை யாப்பு விதிகளுக்கமைய ஆலயத்தை நிருவாகம் செய்கிறது.

திருவிழா[தொகு]

ஆனி உத்தரத்தன்று தீர்த்தம் நிகழும் வகையில் வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா ஆரம்பமாகி பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெற்று இனிதே நிறைவடையும்.

வெளிஇணைப்புக்கள்[தொகு]