மால்கம் ரஞ்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கர்தினால் மால்கம் ரஞ்சித் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மேதகு
ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன்
கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்; சான் லொரேன்சோ இன் லுச்சீனா-வின் கர்தினால்-குரு
கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித்
சபைகத்தோலிக்க திருச்சபை
உயர் மறைமாவட்டம்கொழும்பு, இலங்கை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்கொழும்பு
ஆட்சி பீடம்கொழும்பு உயர்மறைமாவட்டம், இலங்கை
ஆட்சி துவக்கம்16 சூன் 2009
(14 ஆண்டுகள், 286 நாட்கள்)
முன்னிருந்தவர்ஒசுவல்ட் கோமிசு
பிற பதவிகள்
  • கொழும்பு உயர்மறைமாவட்டத் துணை ஆயர் (1991-1995)
  • இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் (1995-2001)
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுசூன் 29, 1975
திருத்தந்தை ஆறாம் பவுல்-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுசூன் 17, 1991
பேராயர் நிக்கோலாஸ் மாற்கஸ் பெர்னாண்டோ-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுநவம்பர் 20, 2010
கர்தினால் குழாம் அணிகுருக்கள் அணி; சான் லொரேன்சோ இன் லுச்சீனா-வின் கர்தினால்-குரு
பிற தகவல்கள்
பிறப்புநவம்பர் 15, 1947 (1947-11-15) (அகவை 76)
பொல்காவலை, குருநாகலை
குடியுரிமைஇலங்கை இலங்கை
சமயம்கத்தோலிக்க திருச்சபை
இல்லம்கொழும்பு, இலங்கை
பெற்றோர்வில்லியம் டொன்,
மேரி வினிஃப்ரீடா
குறிக்கோளுரைஇலத்தீன்: Verbum caro factum est
(வாக்கு மனிதர் ஆனார்)

ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) அல்லது சுருக்கமாக மால்கம் ரஞ்சித் (பிறப்பு: நவம்பர் 15, 1947), இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினாலும் ஆவார்.[1]

இவர் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங்கையின் முதல் கர்தினாலாக இருந்தவர் தோமாஸ் கூரே (கர்தினால்: 1965-1988).[2]

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

மால்கம் ரஞ்சித் இலங்கையில் பொல்காவலை பகுதியில் குருநாகலையில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் டொன் வில்லியம் என்பவருக்கும் மேரி வினிஃப்ரீடா என்பவருக்கும் ஒரே மகனாகப் பிறந்தார்.

கொழும்பு முகத்துவாரத்தில் (Mutwal) தெலசால் கல்லூரியில் பயின்றபின் 1965இல் பொறளை புனித அலோசியுஸ் குருமடம் புகுந்தார். 1966-1970 ஆண்டுகளில் கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். அப்போது கொழும்பு பேராயராக இருந்த தோமாஸ் கூரே மால்கம் ரஞ்சித்தை மேல்படிப்புக்காக உரோமை நகருக்கு அனுப்பினார்.

உரோமை திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் ரஞ்சித் இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1975ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவருக்குக் குருப்பட்டம் அளித்தார். அந்நிகழ்ச்சி உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்தது.

விவிலியப் படிப்பில் தேர்ச்சிபெறுவதற்காக மால்கம் ரஞ்சித் உரோமை திருத்தந்தை விவிலியப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1978இல் மேல்நிலைப் பட்டம் பெற்றார்.

தொடக்க காலப் பணிகள்[தொகு]

உரோமையில் படிப்பை முடித்தபின் இலங்கை திரும்பிய மால்கம் ரஞ்சித் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பங்குகளில் மறைப்பணி ஆற்றினார். 1983இல் மறைபரப்பு நிறுவனங்களின் தேசிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ஆயராக நியமனம்[தொகு]

1991, சூன் மாதம் 17ஆம் நாள் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் பெற்று, அதே ஆண்டு ஆகத்து 31ஆம் நாள் திருப்பொழிவு பெற்றார். திருப்பொழிவு நிகழ்த்தியவர் அப்போது கொழும்பு பேராயராக இருந்த நிக்கோலாஸ் மாற்கஸ் பெர்னாண்டோ ஆவார். அவருக்குத் துணையாக நின்று ஆயர் தோமாஸ் சவுந்தரநாயகமும் ஒசுவல்ட் கோமிசும் திருப்பொழிவு நிகழ்த்தினார்கள்.

இரத்தினபுரி முதல் ஆயர்[தொகு]

புதிதாக ஏற்படுத்தப்பட்ட இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மால்கம் ரஞ்சித் 1995 நவம்பர் 2ஆம் நாள் பொறுப்பேற்றார்.

உரோமை மறைபரப்பு பேராயத்தில் பதவி[தொகு]

1995-2001 காலகட்டத்தில் இரத்தினபுரி ஆயராகப் பணிபுரிந்தபின், 2001 அக்டோபர் முதல் நாள் உரோமை மறைபரப்பு பேராயத்தில் துணைச்செயலராக நியமனம் பெற்றார்.

திருத்தந்தையின் தூதுவர்[தொகு]

2004 ஏப்பிரல் 29இலிருந்து டிசம்பர் 2005 வரை இந்தோனேசியா, கிழக்கு தீமோர் நாடுகளில் திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் பேராயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

திருவழிபாட்டுப் பேராயச் செயலர்[தொகு]

மால்கம் ரஞ்சித் உரோமை திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் நெறிமுறைக்கான பேராயத்தின் செயலராக 2005 டிசம்பர் 10ஆம் நாள் நியமனம் பெற்றார். அங்கு அவருடைய நான்கு ஆண்டுப் பணிக்காலத்தின்போது, மால்கம் ரஞ்சித் கத்தோலிக்க வழிபாடு பண்டைக்கால மரபுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றும், புதிய அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்[தொகு]

2009ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மால்கம் ரஞ்சித்தை கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு சூன் 29ஆம் நாள் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கைகளிலிருந்து பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய "கம்பளித் தோள்பட்டை" (Pallium) பெற்றார்.

கொழும்பு உயர்மறைமாவட்டப் பொறுப்பை 2009, ஆகத்து 5ஆம் நாள் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர்[தொகு]

பேராயர் மால்கம் ரஞ்சித் 2010 ஏப்ரல் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்தினால் பதவி[தொகு]

2010, அக்டோபர் 20ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 24 புதிய கர்தினால்களை நியமிக்கப்போவதாக அறிவித்தார். அவர்களுள் ஒருவர் பேராயர் மால்கம் ரஞ்சித். அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புதிய கர்தினால்களை உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த கர்தினால் குழுக் கூட்டத்தின்போது நியமித்து, வழக்கம்போல அவர்களுக்குப் பதவிச் சின்னங்களாகிய சிவப்புநிற மண்டையொட்டுத் தொப்பியும் (skull cap), நான்முகத் தொப்பியும் (biretta) அளித்தார்.

அதுவரை இலங்கையிலிருந்து ஒரே கர்தினால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இலங்கையின் முதல் கர்தினால் தோமாஸ் கூரே கொழும்பு பேராயராக இருந்தபோது 1965இல் கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் 1988 அக்டோபர் 29ஆம் நாள் இறந்தார்.

அதன் பிறகு, 22 ஆண்டுகள் தாண்டிய பின்னரே இலங்கையிலிருந்து இரண்டாம் கர்தினாலாக மால்கம் ரஞ்சித் பதவி உயர்வு பெற்றார்.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_ரஞ்சித்&oldid=2761403" இலிருந்து மீள்விக்கப்பட்டது