வழுதி (பாண்டியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று.

இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும் [1] தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும் [2] போற்றப்படுகின்றனர்.

கூடல் [3][4], மருங்கை [5], கொற்கை [6] ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர்.

வழுதி பல கோட்டைகளை வென்றவன்.[7] வழுதிக்கு அரசர் பலர் திறை தந்தனர் [8] தன் வேல் கொண்டு பகைவரை ஓடச் செய்தவன் [9] புலமாண் வழுதி தன் அரசியல் சுற்றத்துடன் திருப்பரங்குன்றத்தை வழிபடச் சென்றான் [10]

வழுதி பொன்னணிகளை வாரி வழங்கும் வள்ளல்.[11] இவன் நாட்டின் சிறுகுடியில் பண்ணன் [12] வாணன் [13] என்னும் வள்ளல்கள் வாழ்ந்துவந்தனர்.

வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள்[தொகு]

  1. காய்சின வழுதி - முதற்சங்கத்தைக் கூட்டிய முதல்வன்.
  2. பெருவழுதி நாணயம் - இதில் பொறிக்கப்பட்ட மன்னர்.
  3. மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள கடலன் வழுதி
  4. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
  5. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
  6. பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
  7. பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
  8. பாண்டியன் மாறன் வழுதி
  9. கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
  10. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
  11. பெருவழுதி [14]
  12. குறுவழுதி
  13. நல்வழுதி
  14. அண்டர்மகன் குறுவழுதியார் [15]

வழுதி - ஒப்புநோக்கு[தொகு]

வழுதி என்னும் பெயர் அடைமொழியுடனும், அடைமொழி இல்லாமலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யாரைக் குறிக்கின்றன என்பத்தை நோக்குவது வரலாறு.

பெயர் பாடல் குறிப்பு
அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி நற்றிணை 150 -
பசும் பூண் வழுதி நற்றிணை 358 மருங்கூர் அரசன்
அரண் பல கடந்த, முரண் கொள் தானை, வாடா வேம்பின், வழுதி அகநானூறு 93 கூடல் அரசன்
நல் தேர் வழுதி அகநானூறு 130 கொற்கை அரசன்
நல் தேர் வழுதி அகநானூறு 204 வெற்றிக்குப் பின்னர் பாசறையில் துன்பப்பட்டவன் [16]
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை, வெல் போர் வழுதி அகநானூறு 312 வேல் வீசி வென்றவன் [17]
பெரும் பெயர் வழுதி அகநானூறு 315 கூடல் அரசன்
கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி புறநானூறு 3 பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
சினப்போர் வழுதி புறநானூறு 51 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
இயல்தேர் வழுதி புறநானூறு 52 பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
தகைமாண் வழுதி புறநானூறு 59 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
அண்ணல் யானை வழுதி புறநானூறு 388 தென்னவன் மறவன் எனப் போற்றப்படும் சிறுகுடிகிழான் பண்ணன்

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநூனூறு 52
  2. புறநானூறு 59
  3. பெரும்பெயர் வழுதி கூடல் அகநானூறு 315
  4. நக்கீரர் அடுபோர்ச் சோழர் உறந்தை, வேம்பின் வழுதி கூடல், நெடுந்தேர்க் கோதை கருவூர் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார் அகநானூறு 93
  5. பசும்பூண் வழுதி மருங்கை நற்றிணை 358
  6. நல்தேர் வழுதி கொற்கை முன் துறை அகநானூறு 130
  7. அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி நற்றிணை 150
  8. கலித்தொகை 141
  9. வெல்போர் வழுதி அகநானூறு 312
  10. பரிபாடல் 19
  11. இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப், பொலம் சொரி வழுதியின், புனல் இறை பரப்பி பரிபாடல் 10
  12. அண்ணல் யானை வழுதியின் மருகன் சிறுகுடி கிழான் பண்ணன் என்னும் வள்ளல் புறநானூறு 388
  13. தகைமாண் வழுதியின் சிறுகுடியில் வாழ்ந்த வள்ளல் வாணன் அகநானூறு 204
  14. நற்றிணை 55, 56 பாடல்கள் பாடிய புலவர்
  15. அகம் 150, 228, குறுந்தொகை 345, புறம் 346 பாடல்களைப் பாடியவர்
  16. வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை (அகநானூறு 204)
  17. செல் சமத்து உயர்த்த அடு புகழ் எஃகம் (அகநானூறு 312)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுதி_(பாண்டியர்)&oldid=3104142" இலிருந்து மீள்விக்கப்பட்டது