உள்ளடக்கத்துக்குச் செல்

கமலா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலா கிருஷ்ணமூர்த்தி (Kamala Krishnamurthy, 22 சூன் 1922 – 31 திசம்பர் 2015) ஒரு கர்நாடக இசைப் பாடகர். இவர் திருவிதாங்கூர் இராச்சியத்தின் நாட்டுப் பண்ணை முதன் முதலில் பாடிய பெண் ஆவார்.[1]

இளமைக் காலம்

[தொகு]

கமலா திருவிதாங்கூர் சமத்தானத்தில் ஸ்ரீனிவாசன் – ராஜலட்சுமி இணையருக்கு மகளாக 1922 சூன் 22 அன்று பிறந்தார். தந்தை ஆர். ஸ்ரீனிவாசன் (1887-1975) திருச்சியை அடுத்த திருவரங்கம் பகுதியைச் சேர்ந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து விட்டு திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2] இவர் மேடைகளில் கதாகலாட்சேபங்களும் நடத்தி வந்துள்ளார். கமலாவும் தந்தையைப் போலவே இசையார்வம் கொண்டவராக இருந்த காரணத்தால், அவருடன் கதாகலாட்சேபங்களுக்கு ஆர்மோனியம் இசைத்துவந்த அப்பு பாகவதரை மகளுக்கு இசை கற்பிக்க ஏற்பாடு செய்தனர்.[1]

இசை வாழ்க்கை

[தொகு]

கமலா தன்னுடைய ஏழாவது வயதிலேயே ‘ராமதாஸ்’ என்ற மேடை நாடகத்தில் பாடி நடித்தார். இவர் தியாகராசர் இயற்றிய கமாஸ் ராகத்தில் அமைந்த, ‘சீதாபதி’, பூர்ணஷட்ஜம் ராகத்தில் அமைந்த லாவண்யா ராமா என்ற பாடலை மேடையில் பாடினார். இவருடைய பத்து வயதில் தியாகராசர் ஆராதனை விழாவில் தனிக் கச்சேரி செய்தார்.

வஞ்சீச மங்களம்

இயற்றியவர்எஸ். பரமேசுவர அய்யர்
சேர்க்கப்பட்டது1937
கைவிடப்பட்டது1947
இசை மாதிரி
கமலா கிருஷ்ணமூர்த்தி பாடிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாட்டுப் பண்

1938-ஆம் ஆண்டில் கமலாவின் பதினைந்தாவது வயதில் வஞ்சீச மங்களம் பாடும் வாய்ப்பு கிடைத்தது. வஞ்சீச மங்களம் என்பது சேரரின் தலைநகர் வஞ்சியின் தலைவனான திருவஞ்சிக்குளம் வஞ்சிநாதனைப் பாடுவது போல அமைந்த ஒரு பாடல் . திருவிதாங்கூர் மன்னர்கள் சேரரின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுவதால் இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாட்டுப் பண் ஆனது. இதனை இயற்றியவர் எஸ். பரமேசுவர அய்யர். இந்தப் பாடலை, மதராஸ் நகரில் கமலா பாடிப் பதிவு செய்ய முசிரி சுப்பிரமணியம் ஏற்பாடு செய்தார். அதே இசைத்தட்டில் மன்னர் சுவாதித் திருநாளின் கருணாகர மாதவா என்ற பாடலையும் கமலா பாடியுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியாவில் இணையும் வரை திருவனந்தபுரம் வானொலியில் நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பும், இரவு நிகழ்வுகளின் முடிவிலும் கமலாவின் குரலில் வஞ்சீச மங்களம் ஒலித்தது.[3] இவர் அனைத்திந்திய வானொலியிலும் பாடியுள்ளார்.[4]

இறப்பு

[தொகு]

கமலா 2015 திசம்பர் 31 அன்று தன்னுடைய 93-வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 லூயிஸ், நிவேதிதா. பாதை அமைத்தவர்கள் (1st ed.). ஹெர் ஸ்டோரிஸ். p. 104.
  2. "Soaked in musical memories". THE HINDU.
  3. "- YouTube". www-youtube-com.translate.goog. Retrieved 2025-04-05.
  4. "Kamala Krishnamurthy - Vocal South India". 2012-05-11. Retrieved 2025-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_கிருஷ்ணமூர்த்தி&oldid=4250307" இலிருந்து மீள்விக்கப்பட்டது