கனக செந்திநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கனக. செந்திநாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். 1939 முதல் உபகுப்தன், பரிதி, செவ்வேல், வேல், பரதன் எனப் பல புனைபெயர்களிலும், கனக செந்திநாதன் என்ற பெயரிலும் எழுதி வந்தவர்.[2] கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை ஈழகேசரியில் அறிமுகம் செய்து புகழ் பெற்றார்.[2] "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[3]

எழுத்துலகில்[தொகு]

சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். 1939 இல் பாரதி கண்ட சகுமி பற்றி நொள்ளைக் கதைகள் சொல்லும் கள்ளச் சகுனி என்ற முதல் கட்டுரை ஈழகேசரியில் எழுதினார்.[2] மன்னிப்பு என்ற முதலாவது சிறுகதையை 1940 எழுதினார்.<ref name="chudar"> ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[3]

சமூகப் பணிகள்[தொகு]

குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இவர் பல முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார்.[3]

பட்டங்கள்[தொகு]

  • 1964 மே 19 இல் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டம் வழங்கியது.[2]
  • 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்ற பட்டம் வழங்கியது.

இவரது சில நூல்கள்[தொகு]

தளத்தில்
கனக செந்திநாதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • வெண்சங்கு (சிறுகதைகள்)
  • ஈழத்து இலக்கிய வளர்ச்சி (ஆய்வு)
  • வெறும் பானை (நாவல்)
  • விதியின் கை (நாவல்)
  • ஒருபிடி சோறு (நாடகம்)
  • ஈழம் தந்த கேசரி
  • கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
  • கலை மடந்தையின் தவப் புதல்வன்
  • நாவலர் அறிவுரை
  • கடுக்கனும் மோதிரமும்
  • திறவாத படலை

மேற்கோள்கள்[தொகு]

  1. கதிரொளியான் (20 நவம்பர் 1983). "வாழ்வும் மூச்சும் இலக்கியத்துக்காக வாழ்ந்த இரசிகமணி". ஈழநாடு. 
  2. 2.0 2.1 2.2 2.3 "கண்டோம் கருத்தறிந்தோம்". சுடர்: 8-10. சூலை 1975. 
  3. 3.0 3.1 3.2 "திரு.இரசிகமணி.கனக செந்திநாதன் அவர்கள்". குரும்பசிட்டிவெப்.கொம். பார்க்கப்பட்ட நாள் 10 மே 2014.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக_செந்திநாதன்&oldid=3238125" இலிருந்து மீள்விக்கப்பட்டது