கணியான் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் இனத்தினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை ஆகும். மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை[1] என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இசை[தொகு]

கணியான் கூத்தில் இசை மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். மகுடம், டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுகிறது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவர். மிகுந்த ஓசையைத் தர உச்சம். இளகிய ஓசையைத் தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைக்கப்படும். முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். ஆசிரியர் பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப் பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வரும். கர்நாடக சங்கீதம், கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும் கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறும். இந்த இசைக்கருவிகளை அடிக்கடி நெருப்பில் வாட்டி உரமேற்ற வேண்டும்.

ஒப்பனை[தொகு]

சுடலை மாடன் கோவிலில் கணியான் கூத்துக் குழுவினர் ‘வேதாள ஆட்டம்’ என்னும் நிகழ்வினை நடத்தும்போது சாமியாடுபவர்கள் விகாரமான தோற்றத்துடனான தலைப்பாகைகளை அணிந்து கொண்டு மெய்சிலிர்க்க ஆடுவதும் உண்டு. மேலும் இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். இவர்கள் நீளமான கூந்தல் கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், கேட்போரின் சோம்பலை கலைக்கும் பொருட்டு இரு கால்களிலும் சலங்கைகளையும் கட்டியிருப்பர்.

கதை[தொகு]

கணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி ஆடப்படுகிறது. சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. சிவபெருமான் இரண்டு முரடர்களைப் படைத்து பூவுலகிற்கு அனுப்பினார் என்றும் அதில் ஒருவன் சுடலைமாடனாகவும் மற்றொருவன் கணியான் ஆகவும் அழைக்கப்பெற்று, கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளில் உதவி செய்து அவன் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இது கணியான் கூத்தின் ஒரு பகுதியாக அமைந்து வருகிறது. தன் குருதி சிந்தி, சுடலைமாடனுக்கு உதவுவதைக் காட்ட, சுடலையை நோக்கி ஓடும் சுடலைமாடனுக்கு, தனது விரல் அல்லது நாக்கை அறுத்துக் குருதியை ஒர் இலையில் ஒத்திக் கொடுப்பான். வெட்டிய இடத்தில் திருநீறு பூசப்படும். அப்போது பின்வரும் பாடல் பாடப்படும். குருதி கொடுத்து மாடனுக்கு உறுதியாக உதவும் கணியான் பருதி இருக்கும் காலம் வரை இறுதி யின்றி வாழ் வானே கணியான் கூத்து நடக்கும் கோயிலின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலை மாடன் கதை, பன்றி மாடன் கதை, வண்ணாரமாடன் கதை, கருப்பசாமி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் கதை, சந்தன மாரி கதை, முத்துப்பட்டன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும். இது தவிர இராமாயணம், மகாபாரதக் கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு. வில்லுப்பாட்டுக்கும், கணியான் கூத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு கலைகளிலும் எடுத்தாளப்படும் கதைகள் ஒன்றாகவே இருக்கின்றன. வில்லுப்பாட்டில் எழுதி வைத்து பாடப்படும் கதைகள், கணியான் கூத்தில் வாய் போன போக்கில் சொல் போன போக்கில் மனதில் இருந்தே பாடப்படுகிறது. வழிவழியாக இக்கலை தொடர்கிறதே ஒழிய, முறைப்படி பயிற்றுவிக்கவோ, ஆட்டுவிக்கவோ ஏற்பாடுகள் இல்லை.

நோக்கம்[தொகு]

சிறு தெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் ‘பேயாட்டம்’, ‘அம்மன் கூத்து’ போன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம்.

கால அளவு[தொகு]

இரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் ‘சாமியாடி’ கணியானைக் கூப்பிடுகிறார். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் ‘சாமியாடி’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும். இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை

நடத்தும் முறை[தொகு]

கணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் ‘அண்ணாவி’ எனப்படுவார். இவரே குழுவுக்குத் தலைவராகவும் இருப்பார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர். மகுடம் இசைப்பவர்களில் ஒருவர் அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுக்களும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு. கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொண்டு தோற்றமளிப்பார்கள். ‘அண்ணாவி’ முதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படும். பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவருமாக நின்று இவர்கள் தங்களது கால் சலங்கைகள் ஒலிக்குமாறு தரையில் கால்களைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக, பெண் வேடதாரிகளின் நடனத்தில் பாத வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. வேகமான பாத அசைவுகளில் தேர்ந்து விளங்குகிற கலைஞர்களாக இவர்கள் இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டார் கலைகளுக்கே உரிய மண்ணின் பாவனைகள், நகைச்சுவை, பாலியல் குறியீடுகள் அனைத்துமே இக்கலையில் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.

சடங்குகள்[தொகு]

இது தெய்வவழிபாட்டோடு இசைந்த கலையாக விளங்குவதால் சில சடங்குகளும் இக்கூத்தின் வாயிலாகப் படைக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது இரத்தப்பலியிடுதல் என்னும் ‘கைவெட்டு’ நிகழ்ச்சியாகும். இவ்வகையில் ஒரு கதையானது கூத்து, சடங்கு என்னும் இருவகைப் படிநிலைகளில் கோவில் விழாவின்போது செயல்படுவதைக் காணலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியான்_கூத்து&oldid=3788467" இலிருந்து மீள்விக்கப்பட்டது