ஔவையார் வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஔவையார் வழிபாடு அல்லது செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்பது, தமிழ்நாட்டிலுள்ள பெண்களால் மட்டுமே நடத்தப் பெறும் ஒரு இந்து சமய வழிபாடாகும். இந்த வழிபாட்டில் ஆண்கள் கலந்து கொள்ள கூடாது. [1] அதனால் ஆண்களுக்கு இந்த வழிபாட்டினை காணவும், அதன் நோக்கம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி அறிந்து கொள்ளவும் தடையுள்ளது. [2]

வேறு பெயர்கள்[தொகு]

ஔவையார் வழிபாடு என்று அழைக்கப்படும் இந்த வழிபாடு முறை பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறன. செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்றும், பாட்டி வழிபாடு என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகின்றன. அது போல இந்த வழிபாட்டிற்காக பெண்கள் கடைபிடிக்கும் விரதம் ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம் என்று வழங்கப்படுகிறது.

வழிபாட்டிற்கான காலம்[தொகு]

இந்த வழிபாட்டு முறை பொதுவாக ஆடி, தை, மாசி மாதங்களில், தொடர்ந்து ஏதேனும் மூன்று செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்படுகிறது. இந்த வழிபாட்டிற்காக "அசந்தா ஆடியிலும் தப்புனா தையிலும் மறந்தா மாசியிலும்" என்ற சொல்லாடலுடன் வழங்கிவருகிறது.

நடத்தப்பெறும் முறை[தொகு]

வயதான சுமங்கலிப் பெண்ணின் தலைமையில், நள்ளிரவில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீட்டில் இந்த வழிபாடு நடக்கும். அரிசி மாவை உப்பில்லாமல் பிசைந்துக் கொழுக்கட்டை செய்து, வேப்பிலை, புளிய இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைத்து வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டுக்குத் தலைமையேற்ற வயதான சுமங்கலிப் பெண், ஒளவையாரின் பிள்ளையார் வழிபாட்டு கதையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வார்.

நடைபெறும் காலம்[தொகு]

ஆடி மாதத்தின் செவ்வாய்க் கிழமைகளில் ஔவையார் வழிபாடு நடைபெறுகிறது. தை, மாசி மாதங்களின் செவ்வாய்க் கிழமைகளிலும் இந்த வழிபாடுகள் நடத்தப் பெறுவது உண்டு.

வழிபாட்டிற்கான நோக்கம்[தொகு]

இவ்வழிபாடு மேற்கொள்ளும் கன்னியருக்கு அவர்களின் மனம் விரும்பிய மாப்பிள்ளை கிடைப்பார் என்பது நம்பிக்கை.

ஔவையார் கொழுக்கட்டை[தொகு]

இந்த ஔவையார் வழிபாட்டில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆண்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வழிபாட்டில் பயன்படுத்தப்படும் கொழுக்கட்டையை ஔவையார் கொழுக்கட்டை எனச் சொல்வார்கள். இந்தக் கொழுக்கட்டைப் பிரசாதம் ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆண்கள் கண்ணில் பட்டால் அவர்களின் கண் கெட்டு விடும் என்று எச்சரிக்கையும் செய்யப்படுகின்றது. இதனால் பெண்கள் இதை மறைவாக வைத்துத்தான் சாப்பிடுவார்கள். சில வீடுகளில் சிறுவர்களின் தொல்லைகள் காரணமாக, ஆண் குழந்தைகளுக்கு, இந்தக் கொழுக்கட்டையை உண்ணத் தருவதுமுண்டு.

உசாத்துணை[தொகு]

  • தினமலர் ஆன்மீக மலர், 14.07.2012 (சென்னை பதிப்பு)

ஆதாரங்கள்[தொகு]

  1. அவ்வையார் நோன்பு -ஆனந்த ஜோதி தி இந்து சூலை 17, 2014
  2. உணவும் நம்பிக்கையும் கட்டுரை- பண்பாட்டு அசைவுகள் நூல் - தொ. பரமசிவன் - காலச்சுவடு பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவையார்_வழிபாடு&oldid=3855346" இலிருந்து மீள்விக்கப்பட்டது