தமிழில் உள்ள ஒற்றை எழுத்துச் சொற்கள்
![]() |
விக்சனரியில் பகுப்பு:ஓரெழுத்துச் சொற்கள் என்னும் சொல்லைப் பார்க்கவும். |
ஓரெழுத்தொருமொழி [1] என்றால் 'ஒற்றை எழுத்துச் சொற்கள்' என்று பொருள். அதாவது ஒற்றை எழுத்தாலான சொற்கள். எடுத்துக்காட்டாகத் 'தீ' என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் 'நெருப்பு' என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது. எனவே 'தீ' என்பது ஒரு ஓரெழுத்தொருமொழி.
பழந்தமிழ்த் தொகுப்பு[தொகு]
ஓரெழுத்தொருமொழி பெயராகவும் வினையாகவும் வரும். அடிக்குறிப்பாகத் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளில் அவற்றைக் காணலாம்
- அ, இ, உ - மூன்றும் சுட்டு எழுத்து. மொழி அன்று
- ஆ [2][3], ஈ [4], ஊ [5], ஏ [6], ஐ [7] [8], ஓ [9]
- கா [10] [11] [12] கூ [13], கை [14] [15], கோ [16], கௌ [17]
- சா[18], சீ[19], சே[20], சோ[21]
- தா[22][23], தீ[24][25], தூ[26], தே[27], தை[28][29]
- நா[30]. நீ[31]. நோ[32]
- பா[33][34], பீ[35], பூ[36][37], பே[38], பை[39], போ[40][41]
- மா[42][43] [44] [45], மை[46][47], மோ[48][49][50]
- யா[51][52][53][54]
- வா [55], வீ [56], வை [57] [58],
நன்னூல் காண்டிகை உரை [62] தொகுப்பு[தொகு]
இதுபோல் தமிழில் 52 ஒற்றை எழுத்துச் சொற்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. உலகில் வேறு எந்த வரிவடிவ மொழியிலாவது இத்தனை ஒற்றை எழுத்துச் சொற்கள் இருக்குமா என்பது ஐயமே (சந்தேகமே).[சான்று தேவை] சொல்வளம் (vocabulary) என்ற வகையில் பார்த்தால் தமிழின் பல சிறப்புகளுள் இதுவும் ஒன்று. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இந்தச் சொற்களின் முழுப் பட்டியல்லைப் பொருளுடன் காணலாம்.
- அ - 'அந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
- ஆ - மாடு.
- இ - 'இந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
- ஈ - ஒரு வகைப் பூச்சி, அழிவு.
- உ - 'உந்த' என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
- ஊ - ஊன், இறைச்சி.
- எ - 'எந்த' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
- ஏ - ஏவுதல், அம்பு.
- ஐ - நுட்பம், அழகு.
- ஓ - சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை.
- க - நெருப்பு.
- கா - சோலை.
- கு - பூமி.
- கூ - கூப்பிடு.
- கை - கரம்.
- கோ - அரசன்.
- கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.
- சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல்.
- சே - சிவப்பு.
- சோ - மதில்.
- தா - 'கொடு' என்று ஏவுதல்.
- தீ - நெருப்பு.
- து - உண் என்னும் ஏவல். துக் கொற்றா
- தூ - தூய்மை.
- தை - தையல் எனப்படும் பெண், 'தை' என்று ஏவுதல்.
- ந - சிறப்பு.
- நா - நாக்கு.
- நீ - முன்னிலை ஒருமைப் பெயர்
- நூ - எள்.
- நே - நேசம்.
- நை - நைதல்.
- நொ - மென்மை.
- நோ - வலி.
- நௌ - மரக்கலம், கப்பல்.
- பா - பாடல்.
- பி - அழகு.
- பீ - கழிவு.
- பூ - மலர்.
- பே - அச்சம்.
- பை - பசுமை.
- போ - 'செல்' என்று ஏவுதல்.
- மா - ஒரு வகை மரம்.
- மீ - மிகுதியானது.
- மூ - மூன்று.
- மே - மேன்மை.
- மை - மசி (ink).
- மோ - மொள்ளுதல்.
- யா - 'யாவை' என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
- வா - 'வா' என்று அழைத்தல்.
- வி - விசை.
- வீ - பறவை.
- வை - 'வை' என்று ஏவுதல்.
மேலே ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு சில பொருள்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர அந்த ஒவ்வொரு ஓரெழுத்தொருமொழிக்கும் தமிழ் அகரமுதலிகள் கூறும் பொருள்கள் பல உள்ளன
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
மூலம்[தொகு]
- வித்துவான் ஐயன்பெருமாள் கோனார், கோனார் தமிழ்க் கையகராதி, பழனியப்பா பிரதர்சு, சென்னை, தமிழ்நாடு.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45) - ↑ பசு (பெயர்)
- ↑ ஆதல் வினை
- ↑ பறக்கும் ஈ, ஈதல் வினை
- ↑ ஊன் என்னும் உடல் தசை
- ↑ அம்பு. ஏவுதலைக் குறிக்கும் வினை
- ↑ தலைவன்
- ↑ ஐ வியப்பு ஆகும்.(தொல்காப்பியம் 2=385)
- ↑ மதகு அடைக்கும் பலகை,
- ↑ நிறுத்தல் அளவைப் பெயர் அசைநிலைக் கிளவி (தொல்காப்பியம் 279)
- ↑ காவடி (1163. காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து)
- ↑ காப்பாற்று
- ↑ கூவு (வினைச்சொல்)
- ↑ உடலிலுள்ள கை
- ↑ அக்கையில் ஆள் குறைகிறது = அந்தப் பக்கம்
- ↑ அரசன்
- ↑ வாயால் கௌவுதல் (வினைச்சொல்)
- ↑ சாதல் வினை
- ↑ சீத்தல்(சீய்த்தல்) வினை
- ↑ எருதைக் குறிக்கும் செயர்சொல்
- ↑ அரண் (பெயர்ச்சொல்)
- ↑ தா = குற்றம்
- ↑ தா என்னும் வினைச்சொல்
- ↑ எரியும் நெருப்பைக் குறிக்கும் பெயர்சொல்
- ↑ தீய்ந்து போதலைக் குறிக்கும் வினைச்சொல்
- ↑ உண்ணுதலைக் குறிக்கும் வினைச்சொல் (துன்பறூஉம் தூவாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புஉறூஉம் இன் சொல்லவற்கு - திலுக்குறள்)
- ↑ தேன், தேயம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்ச்சொல்
- ↑ தை என்னும் மாதப் பெயர்
- ↑ தைத்தலைக் குறிக்கும் வினைச்சொல்
- ↑ நாக்கு
- ↑ முன்னிலைப் பொருளை உணர்த்தும் சொல்
- ↑ நோவுதல் வினை
- ↑ பாட்டு (பெயர்)
- ↑ பரப்பிப் பாவுதல் (வினை)
- ↑ மனிதனின் மலம்
- ↑ மலர் (பெயர்)
- ↑ மலர்தல் வினை
- ↑ மழைமேகம்
- ↑ பொருள்களை இடும் பை
- ↑ போதல் வினை
- ↑ அசைச்சொல் - “பிரியின் வாழா தென்போ தெய்ய” தொல்காப்பியமு 2-275 - தெய்வச்சிலையார் உரை மேற்கோள்
- ↑ மாமரம்
- ↑ மாமை நிறம் - எடுத்துக்காட்டு 'அம்மா அரிவை முயக்கு' (திருக்குறள்)
- ↑ 'மா' என் கிளவி வியங்கோள் அசைச்சொல். (தொல்காப்பியம் 2-273)
- ↑ `புற்கை யுண்கமா கொற்கை யோனே ' (தொல்காப்பியம், 2-273 சேனாவரையர் உரை மேற்கோள்
- ↑ கண்ணுக்குத் தீட்டும் மை
- ↑ பண்புப்பெயர் விகுதி - எடுத்துக்காட்டு கருமை, செம்மை
- ↑ முகர்தல் வினை
- ↑ முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம் 2-374
- ↑ `காமஞ் செப்பாது கண்டது மொழிமோ ' (குறுந்தொகை - 2)
- ↑ கட்டாகக் கட்டுதலைக் குறிக்கும் வினை
- ↑ பாட்டு யாத்தலைக் குறிக்கும் வினை
- ↑ அசைச்சொல் (தொல்காப்பியம் 2-279)
- ↑ யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனார்க்கு பாவலரேறு பாலசுந்தரம் தொல்காப்பியம் 2-280 உரை மேற்கோள்
- ↑ வருதல் வினை
- ↑ கீழே விழும் பூக்கள்
- ↑ கூர்மை
- ↑ 'வை' என்னும் ஏவல்
- ↑ தொல்காப்பியம் 1-44 இளம்பூரணர் உரை
- ↑ துக் கொற்றா = உண் கொற்றா
- ↑ நொக் கொற்றா = துன்புறு, துன்புறுத்து கொற்றா, (நன்னூல் மயிலைநாதர் உரை பக்கம் 72
- ↑ நன்னூல் ஆறுமுக நாவலர் காண்டிகை உரை