கென்னல்வெர்த் கோட்டையகம் (ஒசூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒசூர் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒசூர் கோட்டையும் அகழியும்

ஒசூர் கோட்டை என்று பொதுவாக அழைக்கபடும் கென்னல்வெர்த் கோட்டையகம் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் தற்போது இராம் நகர் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்த கோட்டையக மாளிகையாகும்

வரலாறு[தொகு]

பிரெட் என்பவர் 1861 முதல் 1864 வரை சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் (கொஞ்ச காலம் அப்போது ஒசூர் மாவட்ட தலைநகராகவும் இருந்துள்ளது) இலண்டனிலிருந்த செல்வ சீமாட்டியான தம் மனைவியை ஒசூருக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இலண்டனிலிருந்த கென்னல் வெர்த் கோட்டையகம் போன்ற ஒரு மாளிகை ஒசூரில் இருந்தால், தான் வருவதாகப் பதில் எழுதினாளாம். அதேபெயரில் அவ்வாறே ஒரு மாளிகை கட்டினார். கெனில்வர்த் கேசில் இங்கிலாந்தின் மிகப்பெரிய மாளிகைகளில் ஒன்று. அது வார்க்விச்சயரில் இருந்தது. ஏழு ஏக்கர் பரப்புடையது. உள்நாட்டுப் போரில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அது அழிந்து விட்டது. அந்த மாளிகையின் அமைப்பையும் சிறப்பையும் சர் வால்டர் ஸ்கார்ட் தம் புதினத்தில் மிக விவரமாக்க் குறிப்பிட்டுள்ளார். அந்த புதினத்தில் காணப்படும் செய்தி களைக்கொண்டு பிரட் அழகிய மாளிகை அமைத்து, அதன் மீது இத்தாலியிலுள்ளது போன்று கூரை போட்டு. சுற்றிலும் அகழி அமைத்தார். கி.பி.1861 முதல் 1864 வரை நான்கு ஆண்டுகள் கட்டட வேலை நடந்தது. இம்மாளிகை ஹமில்டன் என்ற திறம் வாய்ந்த வெள்ளைக்கார பொறியாளரின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. இம்மாளிகையை எழுப்ப அரசு பணத்தை கையாடிய குற்றத்துக்காக ஆளுநர் பிரட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கென்னல்வொர்த் கோட்டையகத்துக்குச் சீமாட்டியும் வரவில்லை. 1871ஆம் ஆண்டு பிரட் கோட்டையைச் சென்னை மாகாண அரசுக்கு விற்றுவிட்டு இலண்டன் சென்றுவிட்டார்.[1] அதன் பின்னர் வால்டன் இல்லியட் லோக்ககார்ட் சேலம் மாவட்ட ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவரின் தலைமையிடம் ஒசூராகும். இவர் தன் மனைவியோடு இம்மாளிகையிலேயே தங்கி இருந்தார். உடல் நலம் குன்றி மாளிகையிலேயே உயிரிழந்தார். அவரது நினைவாக அவரின் மனைவி அமைத்த நினைவுச் சின்னம் இக்கோட்டை இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் இன்றும் உள்ளது. (ஒசூர் கிளை நூலகம் எதிரில்)

அழிவு[தொகு]

சென்னை அரசாங்கத்தாரால் இந்தக் கென்னல்வொர்த் கோட்டை 29.8.37 அன்று ஏலம் விடப்பட்டது டி. வி. சேசைய்யர் என்பவர் ஏலத்தில் வாங்கி, வரதராஜுலு என்பவருக்கு விற்க அவர் அந்த அழகிய மாளிகைக் கோட்டையின் மரச்சாமான்களை எல்லாம் உடைத்தெடுத்து விற்றுவிட்டார்.[2], மிஞ்சிய சுவர்களும் தற்போது இல்லை, அகழிமட்டுமே எஞ்சியுள்ளது.

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு,இரா.இராம கிருட்டிணன், பக்கம் 3
  2. தகடூர் மாவட்ட வரலாறு,இரா.இராம கிருட்டிணன்
  • "The Sunday Tribune - Spectrum". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-05.