ஐயனாரிதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலின் ஆசிரியர் ஆவார். இவர் சேர மன்னர்களின் மரபில் தோன்றியவர். இவர் சேர மரபினராயினும் தமது நூலைத் தமிழ் வேந்தர் மூவர்க்கும் பொதுவாகவே செய்துள்ளார். ஐயனாரிதன் என்பதற்கு ஐயங்கள் தீர்க்கும் ஆசிரியர் எனப்பொருள்படும். இவர் சைவ சமயத்தைச் சார்ந்தவராயினும் திருமாலையும் உயர்வாகப் பாடியுள்ளார். தமிழ் நூல்களில் சிறந்த அறிவு படைத்தவர். தொல்காப்பியர் முதலிய பன்னிருவரால் செய்யப்பட்டது எனப்படும் பன்னிரு படலத்தை நன்கு உணர்ந்தவர். [1]

இவர் அரச மரபினராதலின் புறத்திணை ஒழுக்கத்தில் நன்கு ஈடுபாடு உடையவராய் அதனை நன்கு ஆய்ந்து உலக மக்கட்கு அவை விளங்கும் வண்ணம் வெண்பாவால் எடுத்துக்காட்டினைத் தந்து 'வெண்பாவின் வரிசை' எனும் பொருள் தரும்படியான புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலினை இயற்றினார். இவரது வெண்பாக்களின் மூலம் 'இவர் சகுனத்தில் நம்பிக்கை உடையவர்; தெய்வப்பற்றுள்ளவர்; சிறந்த மறப்பண்பு உள்ளவர்; சிறந்த உவமைகளைக் கையாளுபவர்; அறநெறிகள் அறிந்தவர்' எனபவற்றை அறியலாம். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

மேற்கோள்[தொகு]

  1. சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச்செய்த புறப்பொருள் வெண்பாமாலை, மூலமும், சாமுண்டி தேவநாயகர் இயற்றிய உரையும், டாக்டர். உ. வே. சாமிநாதையர் தொகுப்பு, S. கலியாண சுந்தரையர் பதிப்பு, ஐந்தாம் பதிப்பு, 1942, உ. வே. சா. முன்னுரை, நான் 23-12-1934, பக்கம் 2-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயனாரிதனார்&oldid=3006414" இலிருந்து மீள்விக்கப்பட்டது