ஐந்திணைகளும் உரிப்பொருளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்திணைகளும் உரிப்பொருளும் (Five landscapes and love themes) என்பது தொல்காப்பியம் முதலில் வரையறுத்த வாழிட மக்கள் சார்ந்த அகத்திணை இலக்கிய மரபு வகையினமாகும். இந்நூல் தமிழக வாழிடத்தைப் புவியியலாக ஐந்து வாழிடங்களாகப் பிரித்து அம்மக்களின் வாழ்முறைமைகளுக்கு இலக்கணம் இலக்கணம் வகுத்தது.[1][2]

திணை[தொகு]

‘திணை என்பது திட் அல்லது திண் என்னும் அடியாகப் பிறந்தது, நிலப்பரப்பு என்பது இதன் பொருள்’ என்று திணை என்னும் சொல்லுக்கு விளக்கம் தருகிறார் ந.சி.கந்தையா பிள்ளை.[3]

திணை என்ற சொல் சங்கப் பாடல்களில் குடி, குடியிருப்பு, கணம் ஆகிய பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. இப்பொழுது ‘ஒழுக்கம்’ என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.

‘ஒழுக்கத்திணைத் திணை என்பாரும், நிலத்தினை திணை என்பாரும் இருபகுதியர் ஆசிரியர்; அது பொருந்தாது. ஒழுக்கமே திணை எனப்படும்’ என்பதனால் திணை ஒழுக்கமே என்பது உறுதியாகிறது.

ஐந்திணை[தொகு]

தொல்காப்பியர் குறிப்பிடும் ஏழு அகத்திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை ஐந்திணைகளாகும்.

உரிப்பொருள்[தொகு]

அகப்பொருள் பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருளும் பயின்று வரும். இவை மூன்றில் உரிப்பொருள்(நிலத்திற்கு உரிய பொருள்) என்பதே பாடலின் அடிக்கருத்து ஆகும். இம்மூன்று பொருளும் உள்ள பாடல்களும் உண்டு. முதற்பொருளும் கருப்பொருளும் இன்றி உரிப்பொருள் மட்டுமே அமையும் பாடல்களும் உண்டு. முதலும் கருவும் இன்றிப் பாடல் அமையலாம். உரிப்பொருளின்றிப் பாடல் அமையாது. உரிப்பொருளே பாடலின் அடிப்படையாகும்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே. - தொல், அகம்', 13

என்ற நூற்பாவில் ஐந்திணைகளுக்கான உரிப்பொருளை முறைப்படுத்துகிறார் தொல்காப்பியர்.

ஐந்திணைகளும் உரிப்பொருளும்[தொகு]

குறிஞ்சியும் புணர்தலும்[தொகு]

தலைவனும் தலைவியும் தனிமையில் ஒருவரை ஒருவர் கூடி மகிழும் நிலை புணர்தல் எனப்படும்.

முல்லையும் இருத்தலும்[தொகு]

தலைவி, தலைவன் கூறிய பருவம் வரை தன் கற்புத்திறம் காத்து, அப்பருவம் வந்தவுடன் தன் தலைவனோடு இன்புற இல்லத்தில் இருக்கும் நிலை இருத்தல் ஆகும்.

மருதமும் ஊடலும்[தொகு]

தலைவன் மாறுபட்டுப் போதல் இயல்பே. அவ்வாறு மாறுபட்டுப் போகிற தலைவனைத் தன் வழிப்படுத்துவதற்காகத் தலைவி கையாளுகிற கருவி ஊடல். வயல்நிலம் வாழ்வுக்கு வேண்டிய பொருள் தந்து வளம் சேர்ப்பது போலவே ஊடலும் இன்பத்திற்கு மேலும் இன்பமூட்டி வாழ்வில் புத்தெழில் சேர்க்கிறது.

நெய்தலும் இரங்கலும்[தொகு]

கடல்மேல் சென்ற தலைவன் வராததால், அவன்நிலை குறித்து தலைவிக்கு ஏற்படும் ஏக்கம் இரங்கல் ஆகும்.

பாலையும் பிரிவும்[தொகு]

பாலை எனத் தயலம் அமையாது எல்லா நிலத்தின் திரிபாகவும் இருப்பது போன்றே பிரிவும் எல்லா நிலையிலும் அமையும். கூடிய பின் பிரிதலும், இல்லத்திலிருந்துபின் பிரிதலும், ஊடலின் காரணமாகப் பிரிதலும், பிரிவின் நிமித்தமாகவே இரங்கலும் ஏற்படுகின்ற காரணத்தினால் பிரிவு என்பது பாலை என வழங்கலாயிற்று.

திணை என்பது ஒழுக்கம் எனக் கொள்ளின் அது ஐந்திணையின் உரிப்பொருள் என்றே சிறப்பித்துச் சொல்லலாம். உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே -தொல்காப்பியர். மாறாததும் உயரியதும் மாண்பு மிக்கதாய் இருந்து தமிழரின் இன்பியல் வாழ்வின் நிலைகளை எடுத்தியம்பும் பாங்கு இவ்வைந்திணை நெறிகளுக்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம்
  2. இறையனார் அகப்பொருள் உரை
  3. திராவிட இந்தியா - த.சி.கந்தையாபிள்ளை