ஐங்குறுநூறு - மருதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐங்குறுநூறு என்னும் நூல் பாட்டும் தொகையுமாகிய சங்கப் பாடல்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் வரிசையில் ஐந்திணைப் பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள் உள்ளன. அவை சிறுசிறு ஆசிரியப் பாக்களின் அடுக்குகளாக உள்ளன. ஒவ்வொரு திணையிலும் 10 பாக்களைக் கொண்ட 10 அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு திணையிலுமுள்ள 100 பாடல்களையும் ஒரே புலவர் பாடியுள்ளார். இந்த நூலின் மருதத் திணைப் பாடல்களைப் பாடியவர் ஓரம்போகியார்.

வேட்கைப் பத்து[தொகு]

பொதுநல வேட்கை[தொகு]
இதில் உள்ள பத்துப் பாடல்களும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று பொல்லிவிட்டுத் தொடங்குகின்றன. இது தன் நாட்டு அரசனை வாழ்த்தும் பகுதி.

அடுத்த இரண்டாவது அடியில் தலைவி தன் விருப்பத்தைத் (வேட்கையைத்) தெரிவிக்கிறாள்.

  1. நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
  2. விளைக வயலை! வருக இரவலர்!
  3. பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!
  4. பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!
  5. பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!
  6. வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!
  7. அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!
  8. அரசு முறை செய்க! களவு இல்லாகுக!
  9. நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!
  10. மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
தன்னல வேட்கை[தொகு]
  1. ஊரன் வாழ்க! பாணன் வாழ்க!
  2. ஊரன் கேணமை வழிவழி சிறக்க!
  3. ஊரன் என்மனை வாழ்க்கை பொலிக!
  4. ஊரன் மார்பு பழவயல் போல் எனக்குப் பயன்படட்டும்.
  5. ஊரன் தேர் வாயில் கடையில் நிற்கட்டும்.
  6. ஊரன் என்னைத் திருமணம் செய்துகொள்ளட்டும்! என் தந்தையும் என்னை அவனுக்குக் கொடுக்கட்டும்!
  7. ஊரன் அழைத்துக்கொண்டு தன் ஊருக்குச் செல்லட்டும்!
  8. ஊரன் செய்த செய்த சூளுரை(சத்தியம்) பலிக்கட்டும்!
  9. ஊரனோடு எனக்குள்ள நட்பை ஊரெல்லாம் பேசட்டும்!
  10. ஊரன் என்னைக் கொண்டுசெல்லட்டும்

வேழப் பத்து[தொகு]

வேழம்[தொகு]
வேழம்
  • வேழம் என்பது ஆற்றங்கரையில் கரும்பு போல் வளரும் பேய்க்கரும்பு.

வேழத்தை வயலைக் கொடி சுற்றும். வேழம் கரும்பு போல் பூக்கும். அதன் பூ வெண்குதிரையின் பிடரிமயிர் போல இருக்கும். வேழம் வளர்ந்து அருகிலுள்ள மாந்தளிரை மடக்கும். புனலாடும் மகளிர் புணர மறைவிடமாகி உதவும். அப்போது அவர்களின் நெற்றிக் குங்குமம் அதன் வேரில் ஒட்டிக்கொள்ளும். அதன் பூ வானத்தில் பறக்கும் குருகின் சிறகு போல் இருக்கும். செருந்திப் பூவோடு வேழம் மயங்கிக் கிடக்கும். உதிர்ந்த மாம்பூ புணர்ந்தோர் உடம்பு மணம் கமழ, அதன்மேல் வேழப்பூ உதிர்ந்து மணத்தை மறைக்கும்.மாம்பூவில் மொய்க்கும் வண்டின் சிறகு போல் பூக்கும்.

செய்தி[தொகு]

வேழம் பூக்கும் ஊரன் அவன். அவனை எண்ணி என் தோள், கண் முதலான உறுப்புக்கள் நலன் இழந்தன - என்கிறாள் தலைவி.

களவன் பத்து[தொகு]

களவன் என்னும் நண்டு
  • களவன் என்பது நண்டு.

களவன் ஆம்பல் கொடியை நறுக்கும். அதன் வேரில் பதுங்கும். ஆவனும் நானும் களவனை விளையாடும்படி ஆட்டுவித்துப் பூக் கொய்து விளையாடினோம். முதலை தன் குட்டிகளையும், களவனையும் தின்னும். வயலைக் கொடி, வள்ளைக்கொடி, செந்நெல் கதிர், செந்நெல் முளை ஆகியவற்றைக் களவன் அறுக்கும். தன் வளைக்குள் நெல்லைச் சேமிக்கும். அந்த வளையில் ஓடி ஒளிந்தகொள்ளும். - என நண்டின் இயல்புகள் இங்குக் கூறப்படுகின்றன.

திருட்டுத்தனம் செய்யும் நண்டு போல் பரத்தையோடு திருட்டுத்தனம் செய்யும் ஊரனுக்காக உறுப்பு நலனை இழக்கலாமா? என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

தோழிக்கு உரைத்த பத்து[தொகு]

இதில் உள்ள 10 பாடல்களும் 'அம்ம வாழி தோழி மகிழ்நன்' என்று தொடங்கித் தலைவன் பிறரோடு மகிழ்ச்சியில் திளைப்பவனாக வாழ்வதைத் தலைவி தன் தோழிக்குச் சொல்லுவதாக அமைந்துள்ளன.

  1. 'பிரியேன்' என்று தலைவன் பரத்தையரிடம் சூளுரைக்கிறான்.
  2. பரத்தையைப் பிரிந்து தலைவன் ஒருநாள் தலைவியிடம் வந்ததற்குப் பரத்தை ஏழுநாள் அழுகிறாள்.
  3. தலைவன் பொதுப் பெண்களோடு மாலை மாற்றிக் கொண்டு நீராடுகிறான்.
  4. பசந்த என் கண் அவன் புனலாடும் கயத்துக் குவளைப் பூவின் நிறம் கொண்டன.
  5. என் மேனி மாமையும் அந்தக் குவளை நிறம் கொண்டது.
  6. அவரை நினைக்காமல் இருந்தால் அந்தக் கயத்துக் கயல்மீன் போல் இருக்கலாம்.
  7. என்னிடம் சூளுரைத்துப் பொய்தலில் வல்லவன். மிகவும் வல்லவன்.
  8. என் தளிர்மேனிக் கையைப் பிடித்ததை நினைத்தால் அழுகை வருகிறது.
  9. என் முலைமேல் கிடந்தான். பின் பிரிந்தான். நெஞ்சை விட்டுப் பிரியவில்லை.
  10. கெண்டை பாய்ந்து ஆம்பல் பூக்கும். அவன் தொட அந்தப் பெண்டிர் பூக்கின்றனர்.

புலவிப் பத்து[தொகு]

இதில் உள்ள 10 பாடல்களில் செய்திகள் உள்ளுறையாகச் சொல்லப்படுகின்றன.

  1. முதலை தன் குட்டியைத் தின்னும் பொய்கை ஊரன் தலைவன் (தலைவியைத் தின்றுவிட்டு வேறொருத்தியிடம் வாழ்பவன்)
  2. காவிரி வெள்ளம் போல் வண்டல் படிந்தது அவன் மார்பு. எனவே தலைவி தழுவாமல் விலக்கினாள்.
  3. ஆமை முதுகில் அதன் குட்டிகள் ஏறிக்கொள்வது போலத் தலைவன் மார்புப் பரண்மீது பொதுமகளிர் உறங்குவர்.
  4. ஆமைக்குட்டிகள் தாயின் முகத்தைப் பார்த்துக்கொண்டே வளர்வது போலத் தலைவி தலைவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே வாழ விரும்புகிறாள்.
  5. ஆறு குளிர் காலத்தில் கலங்கி இருக்கும். கோடையில் மணிநிறம் கொள்ளும். (தலைவன் மார்பின் மாசும், மணிநீர் போன்ற தெளிவும்)
  6. அவளோடு வாழ்தல் உனக்குமட்டுமல்ல எனக்கும் இனிது.
  7. பாணன் என்னிடம் வந்து பல்லை இளித்துக்கொண்டு தன் காதைச் சொரிகிறான். நீ விதைநெல்லைக்கூட அவள் வீட்டில் சேமிக்கிறாய்.
  8. பாணனின் பெண் வட்டியில் வரால்மீன் வறுவல் தந்தாள். நீ நம் வீட்டில் பல ஆண்டுகள் சேமித்து வைத்திருந்த பழ நெல்லை அவள் வீட்டில் சேமிக்கிறாய்.
  9. பாண்மகள் சில மீன்களை உனக்குப் போட்டுவிட்டுப் பல மூட்டை நெல்லைப் பெற்றுக்கொள்கிறாள்.
  10. உன் நெஞ்சத்தைப் பெற்றிருக்கும் இவள் அழுகிறாள். அருள் புரிக! என்று தோழி தலைவனிடம் வேண்டுகிறாள்.

தோழி-கூற்றுப் பத்து[தொகு]

  1. இவள் வயா மண் உண்ணும் ஆசை அன்று. உன் மார்பைத் தழுவும் ஆசை.
  2. இவள் வயலை மாலை கட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் முன் உன் தேர் வரட்டும்.
  3. வெள்ளம் பாயும்போது கழனித் தாமரை மலரும். நீ பாய்ந்தால் இவள் நோய் நீங்கும்.
  4. பாண்டியனின் தேனூர் போல அழகுள்ளவன் இவள். இவள் வளையலைக் கழலச் செய்யாதே.
  5. வெல்போர்ச் சோழரின் ஆமூர் போல அழகிய நெற்றியை உடைய இவளைத் தேம்ப விடாதே.
  6. ஆம்பல் பூத்த வயல்களை உடைய தேனூர் போன்ற அழகினை உடைய இவளது நலத்தைப் புலம்ப விடாதே.
  7. மூங்கில் போல் நெல் வளர்ந்திருக்கும் வயலையிடைய வள்ளல் விரானின் இரும்பை ஊரைப்போன்ற அழகுடைய இவளை அணங்கிவிட்டு பிறர் மனையில் வாழலாமா?
  8. அன்று இவளை நீ அடைய நான் மருந்தானேன். இன்று நீ இவளுக்கு மருந்தாகவில்லை.
  9. வயலில் கம்புள் கோழி தன் பெடையை அகவி அழைக்கும் உன் நாட்டை நீ நினைப்பதில்லையா? இவளது தந்தை கையில் வேல் இருப்பதை அறியாயோ?

கிழத்தி-கூற்றுப் பத்து[தொகு]

  1. மத்தி அரசனின் கழார் போன்ற அழகுடைய இவளை வதுவை-மணம் செய்துகொள்.
  2. இந்திர விழாவில் பூ கிடப்பது போன்று மங்கையர் பலர் வாழும் ஊர்களில் எந்த ஊரில் உன் தேர் நிற்கிறது? அந்த ஊரில் பெண்மான் நிழலில் உறங்குவது உனக்குத் தெரியவில்லையா? (தலைவிக்கு நின் நிழல் இல்லையே)
  3. நீர்நாய் பகலில் வாளைமீன் இரையைப் பெறும். (உனக்கு அவள் இரை கிட்டியது) இவள் தன் நலத்தை இழந்தாலும் உன்னை நெருங்கமாட்டாள்.
  4. உன்னைச் சுற்றும் ஆய மகளிரொடு நீ புதுப்புனல் ஆடுவதைக் கண்டோர் ஒருவர் இருவர் அல்லர். பலர். நீ மறைக்காதே.
ஆம்பல்
  1. கரும்பு நட்ட வயலுக்குப் பாய்ச்சும் நீரால் ஆம்பல் கொடி தன் பசியைப் போக்கிக்கொள்ளும். (அதுபோல அவள் தன் உடல்பசியைப் போக்கிக்கொள்கிறாள்.) உன் மார்பை அவள் சிதைக்கிறாள். நீ மயங்காதே.
  2. சண்டை போடமாட்டேன். சொல்லிவிடு. தேர் உருட்டி நடை பழகும் புதல்வன் அவள் வீட்டுப்பக்கம் சென்றதும் வாரி எடுதாளே அவள் யார்?
  3. இவளைத்(தலைவியைத்) தன்னோடு ஒப்பிட்டுத் தன்னைத் தருக்கிக்கொள்ளும் மகளிர் பலர் இவளைப் பசப்பேறச் செய்தனர்.
  4. நான் அடக்க அடங்காத அவள் விடிந்தும் விடியாத 'கன்னி விடியலில்' தாமரைக்கு இணையாக ஆம்பல் மலர்வது போல் மகிழ்கிறாள்.
  5. நீராடு துறையில் பூவோடு வந்த புதுவெள்ளம் தன் வண்டலை அடித்துச் சென்றுவிட்டது என்று கண் சிவப்ப அழுதுகொண்டு நின்ற உன்னவளை நான் பார்த்தது உனக்குத் தெரியாதா?
  6. நாரை மீன் அருந்த மருத மர உச்சியில் காத்திருக்கும். (அது போல நீ அவளுக்காகக் காத்திருக்கிறாய்) அவர்கள் நல்லவர்கள். தூயவர்கள். உன் குழந்தையைப் பெற்ற நான் உனக்குப் பேய் ஆகிவிட்டேன்.
பண்ணை பாய்தல்

புனலாட்டுப் பத்து[தொகு]

  1. ஞாயிற்று ஒளியை மறைக்க முடியுமா? அதுபோல நேற்று நீ அவளைத் தழுவிக்கொண்டு நீராடியதையும் மறைக்க முடியாது. - தோழி கூற்று
  2. களவுக் காலத்தில் தலைவியோடு நீராடவில்லையா? - தலைவன் கூற்று
  3. அவள் பண்ணை பாய்ந்தாள். அதனால் அவள் சூடியிருந்த குவளைப் பூ மணம் அங்கு நீராடிய என் மேலும் ஒட்டிக்கொண்டது. - தலைவன் கூற்று
  4. விரிந்த கூந்தலோடு அவள் பண்ணை பாய்ந்தது வானத்திலிருந்து மயில் இறங்குவது போல் இருந்தது.
  5. கொடி போன்றவளோடு நீ நீராடியதை ஊரே பேசுகிறதே - தோழி கூற்று
  6. உன்னோடு நீராடியவர்களின் நலம் மேம்பட்டது. அந்தர மகளிர்க்குத் தெய்வம் போல நீ அவர்களுக்கு நலம் சேர்த்தாய் - தோழி கூற்று.
  7. ஊர் பேசினால் என்ன? என்னோடு நீராட வருக - பரத்தை கூற்று.
  8. மதிலை இடிக்கும் யானை மேல் கிள்ளி இருப்பது போல் என் தோளாகிய புணையில் நீ நீராடுக - பரத்தை கூற்று.
  9. நீராடும் என்னைப் பற்றி யார் மகள் என்றாய். நீ யார் மகன்? - பரத்தை கூற்று.
  10. தன் நலத்தை உனக்குத் தந்த மகளிர்க்கு உன் தோள் புணை ஆயிற்று. அதனால் உன் கண் சிவந்துள்ளது. உன்னோடு பிணக்கிக்கொள்ள மாட்டோம். உண்மையைச் சொல். - தலைவி கூற்று.
கம்புள் பறவை

புலவி விராய பத்து[தொகு]

  • பெண் குழந்தைகளுக்கு ஆமை ஓட்டை அரைமூடி அணிகலனாகக் கட்டிவிடுவர்.
  1. என்னை நயந்தனன் என்கிறாய். தலைமகள் கேட்டால் என்ன ஆகும்? - தோழி பரத்தைக்குக் கூறியது.
  2. பரத்தையைத் தழுவி வந்த மார்பிலிருந்த அவன் மாலையிலிருந்த வண்டு தன் தலையை மொய்த்தது என்பதற்காக அவள் வண்டின் மீதே சினம் கொண்டாள். - தோழி தலைவனிடம் சொன்னாள்.
  3. நீ தலைவியைத் தழுவ வேண்டாம். தணந்து இரு. என்றாலும் ஊரார் இவளை உன் பெண்டு (=பெண்டாட்டி) என்றே சொல்வார்கள் - தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
  4. பரத்தையிடம் நீ சென்றதைச் சொல்லக் கேட்டாலே வைது கொட்டுபவள் உன்னை நேரில் கண்டால் என்ன ஆவாள்? - தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
  5. கம்புள் என்னும் காடைப் பறவை தன் துணையோடு விளையாடும் வயலை உடையவன் நீ. சிறுவர் செய்வது போல் தகாத செயல் செய்கிறாய். உன்னை பரத்தையோடு கண்டவர் சிரிக்கமாட்டார்களா? - தோழி தலைவனிடம்.
  6. குருகு எல்லா வயலிலும் மேய்வது போல் அவன் மேய்கிறான். இனி என் வீட்டுக்கு வரமாட்டான். மனைவியோடு மகிழட்டும். - பரத்தை கூற்று.
  7. கரும்பை வீசி எறிந்து மாங்கனியை உயிர்ப்பது போல் தலைவி எல்லாரிடமும் பிணங்குவாள். என்னை விட்டுவைப்பாளா? - தலைவன் பாணனிடம் சொல்கிறான்.
  8. தலைவி பரத்தையிடமிருந்து வந்த தலைவனை ஏற்றுக்கொள்கிறாள். - தோழி தலைவனுக்கு உரைத்தது.
  9. உன் பெண்டு என்று ஊரார் தன்னைச் சொல்லவேண்டும் என்று தலைவி விரும்புகிறாள். - தோழி தலைவனிடம் சொன்னது.
  10. பல பூவில் தேன் குடிக்கும் வண்டிடமிருந்து இவன் கற்றுக்கொண்டானா அல்லது வண்டு இவனிடமிருந்து கற்றுக்கொண்டதா என்று என் மகனின் தாய் வினவுகிறாள். - தலைவன் தன் பக்கம் உள்ளவரிடம் சொல்கிறான்.

எருமைப் பத்து[தொகு]

  • இந்தப் பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலின் முற்பகுதியிலும் எருமையின் செயல் உள்ளுறை உவம்மாகச் சொல்லப்பட்டுள்ளது.
எருமை
  1. பொய்கையில் இருந்தால் எருமைக்கடா தன்னை மேய்ந்துவிடும் என எண்ணி ஆம்பல் கொடியானது வயலிலுள்ள வெதிர் என்னும் செந்நெல் பயிரைச் சுற்றிக்கொள்ளுமாம். (எருமைக்கடா - பரத்தன், வெதிர் - தலைவன், ஆம்பல் - தலைவி)
  2. எருமைக் கன்று தாயிடம் பால் குடிக்கும் ஊரில் தந்தையோடு வாழும் உம் ஊருக்கு உன்னை மணந்துகொள்ள வருவேன். - தலைவன் தலைவிக்குக் கேட்குமாறு சொல்கிறான்.
  3. பச்சை மோர் போல் குளத்தில் ஆம்பல் படர்ந்திருந்தது. அதன் பூக்களை எருமைக்கடா மேய வருவதைக் கண்ட வண்டினம் குளத்து ஆம்பல் பூவை விட்டுவிட்டு வயலில் பூத்திருக்கும் ஆம்பல் பூவுக்குச் சென்றுவிட்டன. (தலைவன் பரத்தையரிடம் வருவது கண்ட காளையர் அன்றுவிட்டனர்.
  4. மள்ளரும் மகளிரும் போல எருமை தன் துணையோடு உறங்கும் கழனியில் தாமரை மலரும்.
  5. கயிற்றை அறுத்துக்கொண்டு நெற்பயிரை மேயும் எருமைக்கடா கோன்றவன் தலைவன்.
  6. எருமை புரண்ட சேற்றில் ஆம்பல் மலர்வது போல் தலைவியின் நிலை உள்ளது.
  7. பகன்றைப் பூக்களைக் கொம்புகளில் மாட்டிக்கொண்டு வரும் எருமையைப் பார்த்து அதன் கன்றே மருளுமாம்.
  8. ஆற்றுப் புனலில் ஆடும் எருமை அங்கு மிதக்கும் அம்பி போல் தோன்றும். எருமை போல் நீராடும் உன்னை(தலைவனை)த் தாய்தந்தையர் கடியமாட்டாரோ? - தோழி கூற்று.
  9. வயலில் படர்ந்த பாகல் கொடியில் மொய்த்துக்கொண்டு முயிறு எறும்பு கட்டியிருக்கும் கூட்டை எருமை மாய்க்கும் ஊர்த்தலைவன் மகளின் தோள்தான் என் நோய்க்கு மருந்து. - தலைவன் கூற்று.
  10. புனலாடும் மகளர் வைத்துள்ள அணிகலன் முகட்டில் எருமை தன் முதுகை உரசிக்கொள்ளும். அந்த ஊரில் வாழும் பாணனின் யாழ் நரம்பு போல் அவள் இனியவள். - தலைவன் கூற்று.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐங்குறுநூறு_-_மருதம்&oldid=3392874" இலிருந்து மீள்விக்கப்பட்டது