ஏற்காடு

ஆள்கூறுகள்: 11°46′46″N 78°12′12″E / 11.7794°N 78.2034°E / 11.7794; 78.2034
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏற்காடு
Yercaud
—  நகரம்  —
ஏற்காடு ஏரி
ஏற்காடு ஏரி
ஏற்காடு
Yercaud
இருப்பிடம்: ஏற்காடு
Yercaud

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°46′46″N 78°12′12″E / 11.7794°N 78.2034°E / 11.7794; 78.2034
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

36,863 (2001)

96/km2 (249/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

383 சதுர கிலோமீட்டர்கள் (148 sq mi)

1,515 மீட்டர்கள் (4,970 அடி)


ஏற்காடு ஏரி

ஏற்காடு என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோடை வாழிட நகராகும்.[3] இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு வட்டத்தில் அமைந்த ஏற்காடு கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

19-ஆம் நூற்றாண்டில் சேலத்தில் தங்கியிருந்த ஆங்கிலேயர்கள் ஏற்காட்டைக் கண்டறிந்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் காக் பர்ன் இங்கு காப்பிச்செடி, ஆப்பிள் போன்ற பழ வகைகளை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மரங்களின் நிழலும் தென்றலின் சுகமும் வெயிலின் தாக்கத்தையும் மறைத்துவிடும் சூழல் கொண்ட ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சுமார் 383 சதுர கிலோ மீட்டர் கொண்ட ஏற்காட்டில் இயற்கை எழில் மிகுந்த குன்றும் அதையொட்டி அமைந்துள்ள ஏரியும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காக்களும் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள கிள்ளியூர் அருவியில் குளித்து மகிழலாம். ஏற்காடு ஏரி நிரம்பினால் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5342 அடி உயரத்தில் உள்ள மலைக் கோவில் மிகவும் பழமையான, புகழ் பெற்ற கோயிலாகும். இங்குள்ள பக்கோடா முனை எனுமிடத்திலிருந்து பார்த்தால் கீழுள்ள பகுதி மிக அழகுடன் காட்சியளிக்கிறது.

மிகக் குறைந்த செலவில் பயணம் மேற்கொண்டு நிறைந்த மகிழ்ச்சியைப் பெறலாம் என்பது சுற்றுலா பயணிகளின் எண்ணம்.

காலநிலை[தொகு]

குளிர்காலம் செப்டம்பர் மாதம் தொடங்கி, ஜனவரி மாதங்களில் முடிவுக்கு வரும். குளிர்காலத்தில், மலைகள் மூடுபனி படர்ந்திருக்கும். குளிர்காலத்தில் வெப்பநிலை 12 °C முதல் 24 °C மற்றும் கோடைகாலத்தில் 16 °C முதல் 30 °C இருக்கும். சராசரி மழை அளவு 1500-2000 மிமீ ஆகும்.

விவசாயம்[தொகு]

முக்கிய வருமான ஆதாரமாக காப்பிச்செடி தோட்டங்கள் உள்ளன. 1820 ஆம் ஆண்டு திரு MD காக்பர்ன் என்பவரால் காபி செடி ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு Grange எஸ்டேட்டில் நடவு செய்யபட்டது. பலா, நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் ஏராளமாக உள்ளன.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

தேசிய தாவரவியல் பூங்கா ஏற்காட்டில் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவு 18.4 ஹெக்டேர் ஆகும். இந்தத் தாவரவியல் பூங்காவில் 3000 வகையான மரங்களும், 1800 வகையான செடிகளும் உள்ளன. இந்தப் பூங்கா 1963ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பூச்சி தின்னும் பிட்சர் தாவரம் இந்தப் பூங்காவில் வளர்க்கப்படுகிறது. இன்னும் ஏற்காட்டின் பல பகுதிகளில் மலைக்காடுகள், விலங்கினங்கள் உள்ளன.

காட்டு விலங்குகள் காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப் பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன.

சுற்றுலா[தொகு]

ஏற்காட்டின் மரகத ஏரி

- ஏற்காடு, ஐரோப்பியர்களின் கோடைக்கால மலை வாழிடங்களில் ஒன்றாக, 1862-ஆம் ஆண்டில், ஆங்கில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இராணுவ அதிகாரியாக இருந்த டொக்ளசு ஆமில்டன் (Dougles Hamilton), சென்னை மாகாண அரசிடம் பரிந்துரைத்தார். அப்பரிந்துரையில், ஐரோப்பியர்களின் வருகையால், ஏற்காடு என்ற மலை வாழிடம், கோடை வாழிடமாக வளர்ந்துள்ளதை விளக்கியிருந்தார். அதன்பிறகு, 1863-ஆம் ஆண்டு, சேர்வராயன் மலைப் பகுதியில் இருந்த 80 சுற்றுலா இடங்களை, ஆங்கில அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பால், உலகின் பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு அதிகமாக வரத் தொடங்கினர்.

ஏற்காடு ஏரி[தொகு]

மரகத ஏரி என்றும் அழைக்கப்படும் இந்த ஏற்காடு ஏரி, தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும். ஏரியின் நடுவில் ஓர் நீருற்றும் அமைந்துள்ளது. ஏரியின் அருகே அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜப்பான் தோட்டக்கலையைப் பின்பற்றி ஒரு சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. மே மாதம் இங்கு மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

லேடி சீட்[தொகு]

ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சேலம் மாநகரைக் கண்டு ரசிக்கலாம். இரவு நேரங்களில் மலையில் இருந்து சேலம் மாநகர் ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பதையும் காணலாம். வானிலை சரியாக இருந்தால், இங்கிருந்து மேட்டூர் அணையைக் கூட காணமுடியும் என்கிறார்கள்.

கிள்ளியூர் அருவி[தொகு]

ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.

பகோடா பாயிண்ட்[தொகு]

இங்கிருந்தும் சேலம் மாநகரை காணலாம், மேலும் இங்கிருந்து காக்கம்பாடி எனும் கிராமத்தையும் காண முடியும். இங்கு வாழ்ந்த மக்கள் இங்கு கற்களால் ஒரு இராமர் கோவிலை கட்டியுள்ளனர். ஏற்காடு சென்றால் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.

சேர்வராயன் கோவில்[தொகு]

மலை உச்சியில் அடுக்கடுக்காக அமைந்துள்ளது. ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ள இக்கோயில் தேவி காவேரிக்கும் சேர்வராயன் கடவுளுக்கும் கட்டப்பட்டுள்ளது.

கரடியூர் காட்சி முனை[தொகு]

இது ஏற்காட்டில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரி அம்மன் கோவில்[தொகு]

இது ஏற்காட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நாகலூர் லலிதா திரிபுரசுந்தரி திருக்கோயில், சேலம் நாகலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

நல்லூர் அருவி[தொகு]

இது ஏற்காட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் அதிகம் கொட்டும் நேரத்தில் இங்கு செல்வது சிறந்தது.

மக்கள்தொகை[தொகு]

சேர்வராயன் மலை

ஏற்காட்டில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,000 பேர் வாழ்கிறார்கள் . பழங்குடியின மக்கள் 24.449 வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்கள்.

கோடை விழா[தொகு]

கோடை விழா மே மாதத்தில் 7நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, மூலிகை கண்காட்சி மற்றும் படகு போட்டி நடைபெறும்.

போக்குவரத்து[தொகு]

சேலத்தில் இருந்து 36 கி.மீ ஏற்காடு உள்ளது. சேலத்தில் இருந்து நாள் முழுவதும் ஏற்காட்டிற்கு பேருந்து வசதி உள்ளது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல இரண்டு சாலைகள் உள்ளன.

1) சேலம் - கோரிமேடு - அடிவாரம் – ஏற்காடு (36 கி.மீ).

2) சேலம் - அயோத்தியப்பட்டினம் - குப்பனூர் - கொட்டசேடு – ஏற்காடு (46 கி.மீ).

ஊடகங்கள்[தொகு]

  • தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத் (Botanical Survey of India) தோட்டத்தில் இருக்கும் சில முக்கியத் தாவரங்கள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cultivated plants of Yercaud
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


பக்கோடா முனையிலிருந்து அழகாகத் தெரியும் ஒரு ஊர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Tamilnadu - Yercaud – The Place for Coffee and Cardamom". Tamilnadu.com. 10 March 2014. Archived from the original on 5 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்காடு&oldid=3781999" இலிருந்து மீள்விக்கப்பட்டது