ஏகபாகநூற்றந்தாதி
ஏகபாகநூற்றந்தாதி ஓரடியினையே நான்கு முறை எழுதி ஒரு பாடலாக ஆக்கி, வரிதோரும் வெவ்வேறு பொருள் தரக்கூடியதாய் அமைக்கப்பெற்ற நூறு பாட்டுக்களை உடையது ஏகபாகநூற்றந்தாதி ஆகும். இந்நூல் ஆசிரியர் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் ஆவர்.
பெயர்க்காரணம்[தொகு]
ஒரு பாடலின் அந்தம் மற்றொரு பாடலின் ஆதியாக இருக்க யாக்கப்பெற்றமையால் இந்நூல் ஏகபாகநூற்றந்தாதி எனப் பெயர்பெற்றது.
உரை[தொகு]
இந்நூலுக்கு ஆசிரியராலேயே உரை எழுதப்பட்டுள்ளது. சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடத்திய ஞானசித்தி இதழில் வெளிவந்தது.
நூற்பா[தொகு]
திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே திருத்தகை யாகத்த மாலை யதணித் திலகவையே
சீர் பிரித்தல்[தொகு]
- திரு -- தகு -- ஐயா -- கத்த -- மாலையது -- அணித்து -- இல—கவ்வை -- ஏ
- திருத்த -- கை -- யாகத்த -- மாலைய -- தண் -- நித்தில -- கவ்வை -- யே
- திரு -- தகை -- ஆகத்த -- மால், ஐய—தனித்து -- இலக—வை -- ஏ
- திருத்த -- கை -- ஆகு -- அத்தம் -- ஆலைய -- தணி -- திலக—ஐயே.
பொருள்[தொகு]
- அழகிற் குரிய ஐயனே, கர்த்தனே, மாலைப் பொழுதாயிற்று ( பறவை முதலானவற்றின் ஒலியும் இலவாய் அடங்குகின்றன.
- பூரணனே ! ஒழுக்கமுள்ள வேள்வித் தலைவா! தண்ணிய முத்து மாலை அணிந்தவனே! அலரோ பரவா நின்றது.
- இலக்குமி வசிக்கும் பெரிய மார்பகத்தையுடைய விண்டுவுக்குத் தலைவா, தலைவியின் காம வேட்கையைத் தனித்து விளங்கத் தலையளி செய்க.
- அவள் வாட்டம் திருத்துக. கையின்கனுள்ள பொருளை ஒப்பாய், திருத்தணி ஆலயத்து விளங்கும் திலகம் போல்பவனே, அழகனே!
பார்வை நூல்[தொகு]
ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.