எஸ். ஏ. நடராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோ. அ. நடராஜன்
1940களில் சோ. அ. நடராஜன்
பிறப்பு(1918-03-16)மார்ச்சு 16, 1918
சோமனூத்து, தாராபுரம் வட்டம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநாடக, திரைப்பட நடிகர்
பெற்றோர்அப்பாஜி செட்டியார்
விருதுகள்கலைமாமணி விருது

எஸ். ஏ. நடராஜன் (S. A. Nadarajan) என அழைக்கப்பட்ட சோ. அ. நடராஜன் (பிறப்பு: மார்ச் 16, 1918[1] தமிழ்த் திரைப்பட, நாடக நடிகராவார். நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை தந்த பின்னர் திரைத்துறையிலும் பங்களித்தார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நடராஜனின் தந்தை அப்பாஜி செட்டியார் தாராபுரம் வட்டம் சோமனூத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர். நடராஜனுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நடராஜனுக்கு எட்டு வயதாகும் போதே தந்தை இறந்து விட்டார். நடராஜன் வாளவாடி என்ற ஊரில் இருந்த அவரது பெரிய தாயாரான அம்முலம்மா என்பவரின் வளர்ப்புப் பிள்ளையாக 13 வயது வரை வளர்ந்தார். உடுமலைப்பேட்டையிலும், மேட்டுப்ப்பாளையத்திலும் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.[1]

நாடகங்களில் நடிப்பு[தொகு]

நடராஜன் சில காலம் தனது தமையனார் வீட்டில் வசித்து வந்த போது 1933-ல் நவாப் இராஜமாணிக்கம் நாடக குழு, கோவை எடிசன் அரங்கில் நாடகங்களை நடத்தி வந்தது. அவர்களின் நாடகங்களைப் பார்த்து வந்த நடராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. தாயாரின் அனுமதி இன்றி நாடகக் குழுவில் சேர்ந்தார். 1933-ல் இவர்களது நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலான நாடகங்களில் இவர் பெண் வேடங்களிலேயே நடித்தார். 1939-ல் கும்பகோணம் முகாமில் இன்பசாகரன் நாடகத்தில் எம். என். நம்பியாருக்குப் பதிலாக உத்தமபாதன் வேடத்தில் நடித்தார்.[1]

நடராஜனுக்குத் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை வந்தது. இதனால் நாடகக் கம்பனியிலிருந்து விலகினார். ஆனாலும், திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. டி. கே. சம்பங்கி, பி. வி. எத்திராஜ் ஆகியோர் ஆரம்பித்த மங்களகான சபா, எஸ். டி. சுத்தரத்தின் தமையனார் எஸ். டி. உலகு ஆரம்பித்த சேலம் பாய்ஸ் கம்பனி ஆகியவற்றில் சேர்ந்து சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார்.[1]

திரைப்படங்களில் நடிப்பு[தொகு]

சேலம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, சேலம் மீனாட்சி பிலிம் கம்பனியின் கோவிந்தசாமி பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் டி. ஆர். சுந்தரம் இயக்கிய சதி சுகன்யா (1942) படத்தில் சிறிய வேடங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புக் கிடைக்காமல் தாராபுரம் திரும்பினார்.[1] பின்னர் ஜுபிடர் தயாரிப்பில் கே. ராம்நாத் இயக்கிய கன்னியின் காதலி படத்தில் வசந்தபுரி மன்னனாக நடித்தார்

குறிப்பிடத்தக்க நடிப்புகள்[தொகு]

மந்திரி குமாரி (1950) இவரின் மூன்றாவது திரைப்படமாகும். ராஜகுருவின் மகனாக நடித்தார்.[3]

படத்தயாரிப்பும் இயக்கமும்[தொகு]

முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடராஜன், நல்ல தங்கை (1955) என்ற படத்தைத் தனது ஃபார்வட் ஆர்ட் பிலிம்ஸ் கம்பெணி மூலம் தயாரித்து இயக்கினார். இந்த முயற்சி வெற்றிபெற்றது ஆனால் ஏ.பி. நாகராஜனின் கதை வசனத்தில் நடராஜன் தயாரித்த மாங்கல்யம் உள்ளிட்ட சில படங்கள் அவருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தின. அதனால் பொருளதார்ரீதியாக நொடித்துப்போனார்.[4]

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

  1. கன்னியின் காதலி (1949) - இது இவரின் முதலாவது திரைப்படமாகும்.[5]
  2. வேலைக்காரி (1949)
  3. மந்திரி குமாரி (1950)
  4. கைதி (1951)
  5. மர்மயோகி (1951)
  6. ஜமீந்தார் (1952)
  7. அழகி (1953)
  8. ரோஹிணி (1953)
  9. புதுயுகம் (1954)
  10. மாங்கல்யம் (1954)
  11. நல்ல தங்கை (1955)
  12. கோகிலவாணி (1956)
  13. அமுதவல்லி (1959) - இப்படத்தில் வில்லன் கதைப்பாத்திரத்தில் நடித்தார்.
  14. சங்கிலித்தேவன் (1960)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "எஸ். ஏ. நடராஜன்". பேசும் படம்: பக். 20-26. ஆகத்து 1949. 
  2. "நீர்க்குமிழி: நம்பியாரை விஞ்சிய வில்லன்!- எஸ்.ஏ.நடராஜன்". Hindu Tamil. 5 January 2018. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/114968-.html. 
  3. ராண்டார் கை (28 செப்டம்பர் 2007). "Manthrikumari (1950)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023848.ece. பார்த்த நாள்: 27 அக்டோபர் 2016. 
  4. பிரதீப் மாதவன் (5 சனவரி 2018). "நம்பியாரை விஞ்சிய வில்லன்!- எஸ்.ஏ.நடராஜன்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2018.
  5. ராண்டார் கை (10 சனவரி 2009). "Kanniyin Kaadhali 1949". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/kanniyin-kaadhali-1949/article655128.ece. பார்த்த நாள்: 27 அக்டோபர் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._நடராஜன்&oldid=3694083" இலிருந்து மீள்விக்கப்பட்டது