எழுத்தாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுத்தாணி

பழங்காலத்தில் பனையோலைகளில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் எழுத்தாணி எனப்படுகிறது. கூருளியும் ஊசியும் எழுத்தாணி போல் பயன்படுத்தப்பட்ட செய்தியை சங்க இலக்கியங்களும் சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. பழங்காலந் தொட்டே எழுதுவதற்கு எழுத்தாணி பயன்படுத்தப்பட்டாலும் எழுத்தாணி என்கிற சொல்லாட்சியை முதன் முதலாக ஏலாதி தான் குறிப்பிடுகிறது. அதைக் கீழ்கண்ட பாடல் மூலம் அறிய முடியும்.

ஊணோடு கூறை யெழுத்தாணி புத்தகம்
பேணோடு மெண்ணும் மெழுத்திவை- மாணோடு
கேட்டெழுதி யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து. (ஏலாதி-63)

வகைகள்[தொகு]

மடக்கெழுத்தாணி

எழுத்தாணிகள் பொதுவாக வெண்கலம், இரும்பு வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் செய்யபட்டுள்ளன. எழுத்தாணி பலவகைப்படும். அவை அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி,[1] கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, தேரெழுத்தாணி, கூரெழுத்தாணி வெட்டெழுத்தாணி என பலவகைப்படும்.

குண்டெழுத்தாணி என்பது குசிறுவர்கள் எழுதிப் பழக ஏற்றது. இது அதிகமான நீளமில்லாமல், மேல் பகுதி கனமாகவும் குண்டாகவும், அடிப்பகுதி கூர்மை சற்று குறைவாகவும் இருக்கும். இதில் எழுதும்போது எழுத்துகள் சற்று பெரியதாக வரும். கூரெழுத்தாணியை நன்கு பயின்றயு கல்வியாளர்களே பயன்படுத்துவர். இதன் முனைப்பகுதி மிகுந்த கூர்மையானது. இதைக் கொண்டு சிறியதாக எழுத இயலும். வாரெழுத்தாணி என்றபு சற்று நீளமாக இருக்கும். எழுத்தானியின் உச்சியில் ஒரு கத்தி இருக்கும். மடக்கெழுத்தாணியில் ஒரு முனையில் கத்தி இருக்கும் என்றாலும் அதை மரக் கைப்பிடிக்குள் மடக்கி வைத்துக் கொள்ளதக்கதாக இருக்கும்.[2]

மேற்கோள்[தொகு]

  1. மணி.மாறன் (22 சனவரி 2018). "ஓலைச்சுவடிகளின் காலம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2019.
  2. "ஓலைச்சுவடிகளில் எழுதிய பழங்கால எழுத்தாணி கண்டுபிடிப்பு - பெருங்கதை குறிப்பிடும் வெட்டெழுத்தாணி கிடைக்கவில்லை". Hindu Tamil Thisai. 2023-05-25. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தாணி&oldid=3726150" இலிருந்து மீள்விக்கப்பட்டது