எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர், இலம்பையங்கோட்டூர்
பெயர்:இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:இலம்பையங்கோட்டூர்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகரர்
தாயார்:கனக குஜாம்பிகை, தாயினும் நல்லாள், கோடேந்து முலையம்மை
தல விருட்சம்:மரமல்லிகை
தீர்த்தம்:சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம், ரம்பை தீர்த்தம், நாகதீர்த்தம், தாமரை தீர்த்தம், பூதகண தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
வரலாறு
தொன்மை:புராதனக் காலம்
தொலைபேசி எண்:9444429775 , 9444865714[1]

இலம்மையங்கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

அமைவிடம்[தொகு]

இக் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் சிறுபிள்ளை போலவும் பின்னர் முதியவர் போலவும் வழிமறித்த பின்பும் அவர் உணராததால் வெள்ளைப் பசு வடிவங் கொண்டு கோயிலை நோக்கிச் சென்று மறைந்தார் என்பது தொன்நம்பிக்கை. அரம்பர் முதலானோர் வழிபட்ட இடம் எனப்படுகிறது. மகாபிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற சிவபெருமான் தங்க அமைதியான இடம் என்று தேர்வு செய்த தலம் என்பதால் மன அமைதி தரும் தலமாக வழிபடப்படுகிறது.[1]

இத்தலத்து இறைவனின் பெயர்க்காரணங்கள்[தொகு]

தெய்வநாயகேஸ்வரர்[தொகு]

சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்திற்குக் கிளம்பிய போது தேர் சிறிது சாய்ந்தது. அப்போது அவரது தலையிலிருந்த கொன்றை மலர் பூமியில் விழுந்து சுயம்பு லிங்கமாயிற்று. அதுவே இத்தலம். தேவர்களால் வழிபடப்பட்டதால் தெய்வநாயகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.

அரம்பேஸ்வரர்[தொகு]

தேவலோகத்துப் பேரழகிகள் அரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் தங்கள் அழகையும் பொலிவையும் இழந்து வருந்த, தேவகுரு நாட்டியக்கலைகளுக்கு அதிபதியான ஸ்ரீதெய்வநாயகேஸ்வரரை 48 நாட்கள் வழிபட இழந்த பொலிவை மீண்டும் பெறலாம் என்று கூற அவ்வாறே வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்றனர் தேவலோக அரம்பையர். ஆதலால் அரம்பேஸ்வரர் என்ற பெயரை இத்தலத்து இறைவன் பெற்றார். இத்தலத்திற்கும் அரம்பாபுரி, அரம்பையங்கோட்டூர் என்றும் பெயர் வந்தது.தொண்டை நாட்டில் கோட்டூர் என்று பல பகுதிகள் இருப்பதால் வேறுபாட்டிற்காக இலம்பை என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. இலம்பை என்பதற்கு நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை என்பது பொருள்.

சந்திரசேகரர்[தொகு]

தட்சன் சாபத்திலிருந்து மீள சந்திரன் வழிபட்டு சிவபெருமான் சிரசில் பிறையாகும் பேறு பெற்ற இடம் என்பதால் சந்திரசேகரர் என்றும் இங்குள்ள சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

பரிகாரத் தலம்[தொகு]

மன இறுக்கம் உள்ளோர் திங்களன்றும் வியாழனன்றும் தெய்வநாயகேஸ்வரரையும் யோகதட்சிணாமூர்த்தியையும் 11 முறை வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட இழந்த வலிமையைப் பெறுவர் என்பது தொன்நம்பிக்கை. சர்ம சம்பந்த நோய்களுக்கும் பரிகார தலமாக உள்ளது.

மூடப்பட்ட தேவார பாடசாலை[தொகு]

ஒரு காலத்தில் இத்தலத்தில் சிறப்பாக நடைபெற்ற "ஸ்ரீதெய்வநாயகேஸ்வரர் வேத சிவாகம தேவார பாடசாலை" நிதி வசதி இல்லாததால் தற்போது செயல்படுவதில்லை.[1]

திருக்கோயில் திருப்பணிகள்[தொகு]

இத்திருக்கோயிலில் மூலவர் விமானம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மதில் அமைக்கும் பணி, விநாயகர், முருகர் சந்நதிகள் சீரமைக்கும் பணி போன்ற பல திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்த சுமார் 33 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு 2008 ஆம் ஆண்டுகளிலேயிருந்து திருப்பணிகள் நடந்து வருகின்றன.[1]

அமைவிடம்[தொகு]

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலுள்ள மேவளூர் குப்பம் எனும் ஊரிலிருந்து வலப்பக்கம் சென்று பேரம்பாக்கம் அடைந்து அங்கிருந்து ஐந்து கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் திருக்கோயில் செல்லும் வழியில் இலம்பையங்கோட்டூர் திருத்தலம் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 குமுதம் ஜோதிடம்; 19.09.2008; இன்னல்கள் தீர்த்தருளும் இலம்பையங்கோட்டூர் இறைவன்! கட்டுரை
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]