எம். எம். காசீம்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எம். காசீம்ஜி
பிறப்புமே 21, 1937
கல்முனைக்குடி, கல்முனை
பெற்றோர்மீ. முகையதீன் வாவாப்போடி

எம். எம். காசீம்ஜி பிறப்பு: மே 21, 1937 எம்முள் அருகிவரும் கிராமத்துப் பாடல்களையும், கிராமிய மரபுக்கலைகளையும் பாதுகாக்க பிரயத்தனப்பட்டுவரும் ஒரு சிரேஸ்ட கவிஞரும், எழுத்தாளருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கிழக்கு மாகாணம், கல்முனைக்குடி எனும் கரவாகுக் கிராமத்தில் பழைய நான்காம் குறிச்சி காசீம் ரோட்டில் மீ. முகையதீன் வாவாப்போடி மரைக்கார் வட்ட விதானை தம்பதியினரின் மகனாப் பிறந்த காசீம் தனது ஆரம்பக்கல்வியை கல்முனைக்குடி ஆண்கள் பாடசாலையிலும், சாய்ந்தமருது கனிஸ்ட ஆங்கிலப் பாடசாலையிலும் (தற்போதைய கல்முனை ஸாஹிரா தேசியப் பாடசாலை) இடைநிலைக் கல்வியை கல்முனை பாத்திமாக் கல்லூரியிலும் பெற்றார். இங்கு எஸ்.எஸ்.சி. பரீட்சையில் அதியுயர் புள்ளிகளைப் பெற்றுத் தேறினார். பின்னர் கொழும்பு ஸ்ராபோட் கல்லூரியில் சேர்ந்து ஜி.சி.ஈ. உயர் வகுப்பில் படித்தார். இவரின் மனைவி றபீக்கா வீவி இவருக்கு நான்கு பிள்ளைகளுளர்.

தொழில்[தொகு]

1960ல் ஆங்கில ஆசிரியராக நியமனம்பெற்று யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விசேட ஆங்கில ஆசிரியராக பயிற்சி பெற்றார். ஆங்கில மொழிமூலம் கல்வி கற்றவராக இருந்தாலும் தாய் மொழியாம் தமிழ் மொழியில் அதிக ஆர்வமுள்ளவராகவே இருந்தார்.

இலக்கிய ஈடுபாடு[தொகு]

மாணவப்பராயத்திலே இடதுசாரிக் கொள்கைகளில் இவர் கவரப்பட்டமையினால் ஒரு இடதுசாரியாக மாறினார். தோழரொருவருடன் சென்று ‘தேசாபிமானி’ பத்திரிகை விற்கவும் செய்தார். தேசாபிமானி பத்திரிகையில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகின. இவருக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தபின் தொழிலில் ஈடுபாடுள்ள வகையில் அதிக நேரத்தை அதில் செலவழித்தாலும் இலக்கியத்துறையிலும் ஈடுபாடு காட்டிவந்தார். இக்காலகட்டங்களில் தன்னுடைய ஆசானின் உபதேசத்திற்கமைய தான் வாழ்ந்த பிரதேசத்தில் வாய்மொழி மூலமாக நிலவிவந்த நூற்றுக்கணக்கான கிராமியப் பாடல்களையும், வாய்மொழி மரபுகளையும் சேகரித்து வந்தார். கடந்த 40வருட காலத்தில் பொழுதுபோக்காக சேகரிக்கப்பட்ட அமுத வளக்குகள் ஆங்கிலத்தில் 2000மும், தமிழில் 1000மும், பழமொழிகள் ஆங்கிலத்தில் 200உம் தமிழில் 500உம் இவர் கைவசமுள்ளன.

இந்நிலையில் 1970ஆம் ஆண்டு கல்முனையிலிருந்து வெளிவந்த 'அல்அரப்' எனும் பத்திரிகையில் இவரின் கன்னியாக்கம் ‘கொடுமை’ எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், கிராமியப் பாடல்கள், வாய்மொழி இலக்கியங்கள் என்றடிப்படையில் நூற்றுக்கணக்கான ஆக்கங்களை எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

வெளிவந்துள்ள நூல்கள்[தொகு]

காசீம்ஜீ அவர்கள் இதுவரை ஆறு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

  • ‘எம்.எஸ். காரியப்பர் கண்ட சாஹிராக் கல்லூரி’ - 1993
  • ‘கௌரவ சபாநாயகர் அல்ஹாஜ் எம்.எச்.மொஹம்மட் அவர்களின் 50ஆண்டு அரசியல் வாழ்வு’ - 1994
  • ‘தென்கிழக்கிலங்கையின் மான் மீயத்துக்கு முன்னோர் அளித்த அறிஞ்செல்வம்’ தொகுதி: 01 - 1997
  • ‘தென்கிழக்கிலங்கையின் மான் மீயத்துக்கு முன்னோர் அளித்த அறிஞ்செல்வம்’ தொகுதி: 02 - 1997

பின்பு இவ்விரு பாகங்களும் ஒன்றாக்கப்பட்டு 2002.10.23 ஆந் திகதி கொழும்பில்நடந்த உலக இஸ்லாமிய தமிழலக்கிய மகாநாட்டில் மறுபதிப்பாக வெளியீடு செய்யப்பட்டது.

  • ‘காசீம்ஜி கண்ட கரவாகு வரலாறு.’ - 2002
  • காசீம்ஜியின் ‘இரு குருவிகள்.’ கிராமியப்பாடல்கள் - 2003
  • ‘கல்முனைக்குடி கடற்கரை பள்ளி வரலாறு’ - 2007

கணனிப்படுத்தப்பட்டுள்ள நூல்கள்[தொகு]

  • காசீம்ஜியின் கவிதைகள் - 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதப்பட்டவை
  • காசீம்ஜியின் கதைகள் - 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதப்பட்டவை
  • வைத்தியர் மகள் - வரலாற்று நாவல்
  • என்று சொன்னார்கள் நபி - இஸ்லாமிய பாடல்கள்
  • இல்லமளித்த வள்ளல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ
  • இலங்கை முஸ்லிம்களின் வரலாறு

விருது[தொகு]

காசீம்ஜி அவர்களின் இத்தகைய சேவைகளைக் கருத்திற் கொண்டு 2007ம் ஆண்டில் கலாசார அமைச்சு 'கலாபூசண விருது' வழங்கி கௌரவித்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._காசீம்ஜி&oldid=3236211" இலிருந்து மீள்விக்கப்பட்டது