ஊசல் (சங்க காலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊசல்

சங்கப் பாடல்களில் ஊசல் என்பது ஊஞ்சல். குழந்தை ஊஞ்சலில் ஆடும்போது இன்பம் கண்டு தூங்குகிறது. பெரியவர்கள் தாமே ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்.

சங்கப்பாடல்களில் வரும் சில குறிப்பிடத்தக்க செய்திகள் இங்குச் சுட்டப்படுகின்றன.

ஊசல் செய்திகள்[தொகு]

  • செயலை[1], [2] ஆல் [3] ஞாழல்[4] தாழை[5] பணை [6] [7] [8] வேங்கை[9] முதலான மரங்களில் ஊசல் கட்டி விளையாடியது பற்றிய குறிப்புகள் உள்ளன.
  • தினைப்புனம் காக்கும் மகளிர் பரண்மீது ஊசல் கட்டி விளையாடியிருக்கின்றனர். [10]
  • சிலர் வேல்களை நட்டு இடையில் கயிறு கட்டி ஆடினர் [11]
  • தாழைநார்க் கயிற்றாலும் [12] பனைநார்க் கயிற்றாலும் [13] ஊசல் கட்டி ஆடியிருக்கிறார்கள்.
  • ஊசலாடுதலை ஊசல் தூங்குதல் என வழங்கினர். விளையாட்டுத் தோழியர் பலர் சேர்ந்து ஆட்டிவிடுவது பற்றியும் [14] தானே தனியே உந்தி ஆடியது பற்றியும் [15] காதலன் ஆட்டிவிட்டு ஆடியது பற்றியும் [16] குறிப்புகள் உள்ளன.
  • பனைமரத்து ஊசலில் பலர் ஒன்றாக அமர்ந்து ஆடியது பற்றியும் [17] குறிப்புகள் உள்ளன.
  • காதலியின் முன்புறம் நின்று காதலன் ஆட்டிவிட்டது பற்றியும் [18] காதலி பொய்யாகக் காதலன்மீது விழுவது பற்றியும் [19] குறிப்புகள் உள்ளன.

ஊசல்சீர்[தொகு]

தலைவி ஊஞ்சலில் ஆடுகிறாள்.
தோழியை அவள் ஊசல்சீர் பாடுக என்கிறாள்.
தலைவியின் தோளில் கரும்பு எழுதியவன் இப்போது வாட விட்டுவிட்டான் என்று இணைந்திருக்கும் அன்றில் பறவைகள் இரவெல்லாம் அகவவில்லை என்னும் பொருள்படத் தோழி பாடுகிறாள்.[20]

அப்படி இல்லை
ஊசல்நீரை [21] அழித்து ஒன்று பாடுகிறேன்.
அன்று அவன் இரவெல்லாம் நம்மோடு இருந்தான் அல்லவா? என்று பாடுகிறாள் தவைவி. [22]

ஊசல்வரி[தொகு]

சிலப்பதிகாரத்தில் ஊசல்வரிப் பாடல்கள் மூன்று உள்ளன.
அவற்றில் ஒவ்வொன்றிரும் ஐந்து அடிகள் உள்ளன.
முதல் 4 அடிகளை ஒருத்தியும், ஐந்தாவது அடியை மற்றொருத்தியும் பாடுகின்றனர். [23]

ஊசல் பருவம்[தொகு]

பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் ஊசல்பருவம் என 10 பாடல்கள் பாடுகின்றனர்.[24]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று ஊசல் (அகம் 38)
  2. ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், (அகம் 68)
  3. அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, வளையுடை முன்கை அளைஇ, கிளைய பயில் இரும் பிணையல் பசுங்காழ்க் கோவை அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, (அகம் 385)
  4. ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, (அகம் 20)
  5. கலித்தொகை தட மலர்த் தண் தாழை வீழ் ஊசல் தூங்கப் பெறின் (131)
  6. பணை என்னும் சொல் மூங்கில், அரசமரம் ஆகியவற்றைக் குறிக்கும்
  7. இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், ஊர்ந்து இழிகயிற்றின், செலவர வருந்தி, - அகம் 372
  8. இரு பணை தொடுத்த பலர் ஆடு ஊசல்-பெரிய கிளையில் கட்டப்பெற்ற பலரும் ஆடும் ஊசலினது, ஊர்ந்து இழி கயிற்றில் செலவர வருந்தி - ஏறியும் இறங்கியும் ஆடும் கயிற்றினைப் போன்று செல்கையானும் வருகையானும் வருந்தி, - பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை - அகநானூனு 372
  9. நற்றிணை 368
  10. அகம் 368
  11. நற்றிணை 165
  12. அகம் 20
  13. நற்றிணை 90
  14. நற்றிணை 90
  15. கலித்தொகை 37
  16. அகம் 385
  17. அகம் 372
  18. அகம் 385
  19. கலித்தொகை 37
  20.  
    தன்துணை இல்லாள் வருந்தினாள் கொல் என
    இன்துணை அன்றில் இரவெல்லாம் அகவாவே – கலித்தொகை 131-27மு28.

  21. அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை (கலித்தொகை 31)
  22.  
    அருளினன்கொல் தோழி அருளினன்கொல் தோழி
    இரவெல்லாம் தோழி அருளனன் – கலித்தொகை 131 – 35மு36.

  23.  
    வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
    தென்குமரி ஆண்ட செருவில் கயல்புலியான்
    மன்பதைகாக் குங்கோமான் மன்னன் திறம்பாடி
    மின்செய் இடைநுடங்க ஆடாமோ ஊசல்
    விறல்வில் பொறிபாடி ஆடாமோ ஊசல். - சிலப்பதிகாரம் வாழ்த்துக்காதை

  24.  
    புள்ளொலி யெழக்குடி புகுந்தசுந் தரவல்லி
    பொன்னூச லாடியருளே
    புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
    பொன்னூச லாடியருளே. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஊசல்பருவம் பாடல் 1  

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசல்_(சங்க_காலம்)&oldid=3208387" இலிருந்து மீள்விக்கப்பட்டது