உலக சிட்டுக்குருவிகள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
House Sparrow, England - May 09.jpg

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

2010ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.

அழியும் குருவிகள்[தொகு]

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:

  • வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
  • எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
  • பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
  • வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
  • அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கருவளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]