உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகத்தமிழ் நூலக அறக்கட்டளை என்பது சென்னை தியாகராயநகரில் இயங்கும் ஒரு நூலக அமைப்பாகும். இதன் நிறுவனராகவும் தலைவராகவும் உள்ளவர் முனைவர் தமிழப்பனார்.[1]

நோக்கங்கள்[தொகு]

1. தமிழ் தோன்றிய காலந்தொட்டு இன்றுவரை வந்துள்ள, இனி எதிர் காலத்தில் வெளிவர இருக்கும் தமிழ் நூல்கள், வார, திங்கள் இதழ்களையும் ஒலைச்சுவடிப் பொத்தகம் முதற்கொண்டு இன்றைய தாள் புத்தகம், ஒலி, ஒளி இழைகள், நுண்படச்சுருள், எதிர்காலக் கணிப்பொறித் தட்டமைப்பு நூல்கள் மற்றும் இவை போன்ற தொடர்பானவற்றையும் திரட்டிப் பாதுகாத்தல்.

2. தமிழ் நூல்களை மட்டுமின்றி தமிழைப் பற்றி, தமிழரைப் பற்றி, வெளிவந்துள்ள பிறமொழி நூல்களையும் ஒன்று திரட்டுதல்.

3. தமிழர்கள்] எழுதிய பிறமொழி நூல்களையும் தொகுத்து வைத்தல்.

4. முழுமையான அளவில் தமிழ் நூல்கள் அனைத்தும் உள்ள ஒரு நூலகத்தை உருவாக்குதல்.

5. தமிழறிஞர்களின் நூல்களை அவர்கள் இருக்கும் போதோ, இறந்த பிறகோ, இலவசமாகவோ, பொருள் கொடுத்தோ வாங்கிப் பாதுகாத்தல்.

6. தமிழ் அறிஞர்களை அவர்கள் உயிருடன் வாழுங்காலத்திலேயே அணுகி அவரது மறைவிற்குப் பின்னர் அவரது சொந்த நூலகத்தை அறக்கட்டளை நூலகத்துடன் இணைத்துக் கொள்ள, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

7. சில தனிப்பட்ட நூலகங்கள் யாருக்கும் பயனின்றி மூடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றை அறக்கட்டளை தன் உலகத்தமிழ் நூலகத்துடன் இணைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளுதல்.

8. வீட்டுக்கொரு நூலகம் என்பது போல தமிழ்நாட்டுகொரு நூலகம், தமிழ் மொழிக்கு ஒரு தலைமையான நூலகமாக உலகத் தமிழ் நூலகம் அமையும்.

9. உலகமெங்கிலுமுள்ள நூலாசிரியர்கள் தங்கள் நூல்களையும், தங்களிடமுள்ள நூல்களையும் உலகத்தமிழ் நூலக அறக்கட்டளைக்கு வழங்கினால், அவற்றைப் பாதுகாத்துப் பயன்படுத்துதல்.

10. தமிழ்நூலகங்களை அமைக்க விரும்பும் பிற அமைப்புகளுக்கு அறிவுரை வழங்குதல்.

11. தமிழ் நூலகங்களை அமைத்துச் சிறப்பாகப் பணியாற்றுவோரை அல்லது நிறுவனங்களைப் பாராட்டிச் சிறப்பித்தல் - ஊக்குவித்தல்.

12. தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சி ஆகியவ்ற்றிற்குப் பாடுபடுதல்.

13. வருவாய் நோக்கமின்றி அரிய நூல்கள், அறிவியல் நூல்களைப் பதிப்பித்தல், பரப்புதல், விற்பனை செய்தல்.

14. அதேபோல் தமிழறிஞர்களின் பழைய / புதிய நூல்களைப் பிழையறப் பதிப்பித்து வருவாய் நோக்கமின்றி விற்பனை செய்தல்.

15. தமிழறிஞர்களைக் கொண்டு தமிழாய்வுக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் முதலியன நடத்துதல்.

16. தகுதியுள்ள இலக்கிய/ அறிவியல் நூல்களுக்குப் பரிசுகள் வழங்குதல்.

17. ஏழைத்தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஏற்றவகையில் பொருளுதவி செய்தல்.

18. தமிழறிஞர்களின் வளர்ச்சிக்கும், தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் தொண்டு செய்தல்.

19. தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குதல்.

20. மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போட்டிகள் வைத்து, தமிழ், தமிழர் தொடர்பான கருத்துக்களைப் பரப்புதல்.

21. தமிழ்த் தொண்டாற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி ஊக்குவித்தல்.

22. பிற மொழியாளர்களோடு தொடர்பு வைத்து, தமிழ்மொழி ஏற்றத்திற்காகப் பாடுபடுதல்.

23. மைய, மாநில அரசுகள் பிற தமிழ் வளர்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து தமிழ்த் தொண்டு செய்தல்.

24. தமிழுக்காக உயர் தனிச் செம்மொழி மையம் ஒன்றை நிறுவுதல்.

25. தமிழின் சிறப்புக்களை இணையம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மூலமும் பரப்புதல்

26. சாதி, சமய வேறுபாடின்றி குறுகிய அரசியல் நோக்கம், வருவாய் நோக்கம் எதுவுமின்றி மேற்கூறிய நோக்கங்களுக்காகவும், அவை சார்ந்த பிற பணிகளுக்காகவும், நாட்டிற்கும் மொழிக்குமான நல்லன அனைத்தும் செய்தல்.

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.valaitamil.com/founder-of-the-world-library-eelam-tamizhiappanar_18451.html

வெளி இணைப்புகள்[தொகு]