உருத்திரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருத்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் என்ற முறையில் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 274. பாலைத்திணை சார்ந்தது.

புலவர் பெயர்[தொகு]

இப் புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பாலை நிலத்தில் கொளுத்தும் வெயிலை, வெயிலின் உருத்திரத்தை இவர் புதுமையான சொற்களால் வடித்துள்ளார். 'வன்கண் ஆடவர் நீர் நசை வேட்கையின் நா மென்று தணியும்' என்பது அந்த அரிய வடிவம். நன் நாக்கைத் தானே மென்று தன் தாகத்தைத் தணித்துக்கொள்வார்களாம். இதனால் குறுந்தொகையைத் தொகுத்த ஆசிரியர் இவருக்கு உருத்திரனார் என்னும் பெயரைச் சூட்டியுள்ளர்.

பாடல் தரும் செய்தி[தொகு]

உகா மரத்தின் அடிப்பகுதி புறவு நிலம் போல இருக்கும். அதன் காய்கள் சூலுற்ற இறால் மீன்களைப் போல இருக்கும். பாலை நில ஆடவர் அந்தக் காய்களை அம்பெய்து வீழ்த்துவர். மேலும் மலை உச்சியில் ஏறி வழியில் யாராவது வருகிறார்களா என்றும் பார்ப்பர். பாலையின் கொடுமையால் அவர்களது நா வறண்டிருக்கும். நாவை நனைக்கத் தம் நாவைத் தாமே மென்றுகொள்வர். இத்தகைய கொடுமையான தன்மை கொண்டது பாலைநிலம்.

பொருள் தேடச் செல்லும் தலைவன் நினைக்கிறான். 'இத்தகைய கொடிய கானமும் இனிதுதான். எப்போது? என் இனியவளைத் தழுவிக்கொண்டு (அழைத்துக்கொண்டு) சென்றால்' - என்று நினைக்கிறான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்திரனார்&oldid=2717922" இலிருந்து மீள்விக்கப்பட்டது