உம்பற்காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்ககாலத்தில் ஆனைமலைக் காடுகள் என்று வழங்கப்படும் இடம் சங்ககாலத்தில் உம்பற்காடு எனப்பட்டது. உம்பல் என்னும் சொல்லுக்கு யானை என்பது பொருள்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பரிசு[தொகு]

இரண்டாம் பதிற்றுப்பத்து நூலின் பாடல் தலைவன் இமயத்தில் வில்லைப் பொறித்த நெடுஞ்சேரலாதன். இவன் இந்தப் பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார்க்கு இந்த உம்பற்காட்டுப் பகுதியிலிருந்த 500 ஊர்களைப் பரிசிலாக வழங்கினான் [1].

செங்குட்டுவன் பரிசு[தொகு]

கண்ணகிக்குக் கோயில் கட்டிய கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் தன்னை ஐந்தாம் பதிற்றுப்பத்தில் பாடிச் சிறப்பித்த புலவர் பரணருக்கு உம்பற்காட்டுப் பகுதியிலிருந்து கிடைக்கும் வரிப் பணத்தில் பாதியைப் பரிசிலாக வழங்கினான். அத்துடன் தன் மகன் குட்டுவன் சேரல் என்பவனையும் புலவர்க்குப் பாதுகாவலாகவும், உறுதுணையாகவும் இருக்கும்படி தானமாகக் கொடுத்தான். [2]

பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி[தொகு]

அண்ணன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் புலவர்க்குப் பரிசாக வழங்கிய உம்பற்காட்டுப் பகுதி தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் காலத்தில் தன்னாட்சி பெற முயன்றது. அதனை அடக்கிப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் உம்பற்காட்டுப் பகுதியில் தன் ஆட்சியை நிறுவினான். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து பதிகம்
  2. பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து பதிகம்
  3. பதிற்றுப்பத்து மூன்றாம் பத்து பதிகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்பற்காடு&oldid=2565123" இலிருந்து மீள்விக்கப்பட்டது