உடையார்பாளையம் பயறணீநாதசுவாமி கோயில்
| ஸ்ரீ பயறணீசுவரர் சுவாமி திருக்கோயில் | |
|---|---|
| ஆள்கூறுகள்: | 11°11′28″N 79°17′33″E / 11.1910°N 79.2924°E |
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில்,
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் சுவாமி திருக்கோயில் அருள்மிகு அங்காரகேசன் சுவாமி திருக்கோயில், அருள்மிகு வணிகேசன் சுவாமி திருக்கோயில் அருள்மிகு முற்கபுரீசுவரர் சுவாமி திருக்கோயில், அருள்மிகு பயறணீசுவரர் சுவாமி திருக்கோயில், அருள்மிகு பயறணீநாதர் சுவாமி திருக்கோயில், |
| பெயர்: | அருள்மிகு நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீசுவரர் சுவாமி திருக்கோயில் |
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | அரியலூர் மாவட்டம் |
| அமைவிடம்: | உடையார்பாளையம் |
| சட்டமன்றத் தொகுதி: | ஜெயங்கொண்டம் |
| மக்களவைத் தொகுதி: | சிதம்பரம் |
| ஏற்றம்: | 131 m (430 அடி) |
| கோயில் தகவல் | |
| மூலவர்: | முற்கபுரீஸ்வரர் (பயறணீநாதசுவாமி) |
| தாயார்: | சுகந்த குந்தளாம்பிகை (நறுமலர் பூங்குழல் நாயகி) |
| குளம்: | காண்டீப(வில்வடிவ) தீர்த்தம்,
அங்காரகேசன் தீர்த்தம், இராம தீர்த்தம் |
| சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, பங்குனி பிரம்மோற்சவம், நடராசர் அபிசேகங்கள், அன்னாபிசேக விழா, சனிப்பெயர்ச்சி விழா, குருப்பெயர்ச்சி விழா, பௌர்ணமி திருவலம் |
| உற்சவர்: | நடராஜர் |
| உற்சவர் தாயார்: | சிவகாமி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
| கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
அருள்மிகு நறுமலர் பூங்குழல் நாயகி உடனுறை ஸ்ரீ பயறணீசுவரர் சுவாமி திருக்கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைந்துள்ள பல 1,000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிவன் கோயில் ஆகும்.
இக்கோயிலின் மூலவர் பெயர் முற்கபுரீஸ்வரர் மற்றும் பயறணீசுவரர் அல்லது பயறணீமகாலிங்கசுவாமி (பயறு மாலை அணிந்த ஈசுவரர்) ஆகும்.
அம்பிகையின் திருப்பெயர் சுகந்தகுந்தளாம்பிகை அல்லது நறுமலர் பூங்குழல் நாயகி ஆகும்.
முற்கபுரி என்று வட மொழியிலும், பயறணீச்சுரம் அல்லது பயறணீமகாலிங்கபுரம் என்று தமிழிலும் புராணப் பெயர் கொண்ட இத்தலத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை பாடியுள்ளார்.
தஞ்சை பெரிய கோவிலை விடவும் தொன்மையான சிவன் கோவிலாகும்.
பயறணீமகாலிங்கசுவாமி தலபுராணம்
[தொகு]மலைநாட்டில் திவாகரபுரம் என்ற ஊரில் வசித்த ஒரு வணிகன் இருந்தான். அவன் சோழநாடு மற்றும் பிற நாடுகளுக்குச் சென்று மாடுகளின் மீது மிளகு பொதிகளை ஏற்றி வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் அவன் வியாபாரப் பயணமாக விருத்தாசலம் நோக்கி வந்தான். அந்த வழியில் ஒரு சுங்கச் சாவடி இருந்தது. அப்போது மிளகுக்கு அதிக வரி வசூலிப்பது வழக்கம்.
இதைக் கேட்டிருந்த வணிகன், அதிக வரியைத் தவிர்க்க ஒரு சூழ்ச்சி செய்தான். சுங்க அதிகாரிகள் கேட்டபோது, “இந்தப் பொதிகளில் மிளகு இல்லை, பயறு தான் இருக்கிறது” என்று பொய் கூறினான்.
அவர்கள் அதனை நம்பி, பயறுக்கான குறைந்த வரியை மட்டும் வாங்கி அவனை அனுப்பிவிட்டனர்.
வணிகன் விருத்தாசலம் சென்று பொதிகளை அவிழ்த்து பார்த்தபோது, அதில் இருந்த மிளகெல்லாம் உண்மையிலேயே பயறாக மாறியிருந்தது.
அதைக் கண்டு அவன் மிகுந்த துயரமடைந்தான்.
“நான் சொன்ன பொய்க்கு இறைவன் கொடுத்த தண்டனை இதுவோ?” என்று எண்ணி, பழமலைநாதர் திருக்கோயிலுக்கு சென்று இறைவனிடம் மனம் கலங்கி முறையிட்டான்.
அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி குரல் ஒலித்தது:
“கெட்ட இடத்தில் தேடு.”
அந்த வார்த்தையின் பொருளை உணர்ந்த வணிகன் உடனே இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை பக்தியுடன் வேண்டினான்.
இறைவனின் அருளால் அதிசயம் நிகழ்ந்தது. பயறாக மாறியிருந்த பொதிகள் மீண்டும் மிளகாக மாறின.
இந்த அற்புதத்தை நினைவுகூர்ந்து, மிளகை பயறாக மாற்றிய சிவபெருமானுக்கு “பயறணிநாதர்” என்ற திருநாமம் ஏற்பட்டது.
அதேபோல் இந்த தலம் “பயறணீச்சுரம்” என்றும் “முற்கபுரி” என்றும் அழைக்கப்பட்டது.
அபூர்வ வில் வளைத்த விநாயகர்
[தொகு]பயறணீசுவரர் ஆலயத்தின் வாயிலில் ஒரு தனித்துவமான தெய்வச் சின்னமாக “வில் வளைத்த விநாயகர்” அருள்பாலித்து காட்சி தருகிறார்.
வழிபட்டோர்
[தொகு]முற்கல முனிவர், அகத்தியர், பிரம்மன், இராமன், அங்காரகன், பஞ்சபாண்டவர்கள், செமதக்கினி முனிவர், வேதாளம் ஆகியோர் வழிபட்ட தலம்.
சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் அவர்களின் விருப்பமான ஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது. சான்று
திருக்கோவிலில் நடைபெறும் விசேஷ பூஜைகள்
[தொகு]இந்த திருக்கோவிலில் தினசரி வழிபாடுகளுடன், வாராந்திரம், மாதாந்திரம் மற்றும் வருடாந்திரம் நடைபெறும் பல்வேறு விசேஷ பூஜைகள் இடம்பெறுகின்றன.
வாராந்திர பூஜைகள் :
வியாழக்கிழமை – ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை – ஸ்ரீ துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை நடைபெறும்.
சனிக்கிழமை – ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மாதாந்திர பூஜைகள் :
பிரதோஷம் – ஸ்ரீ நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் பிரதோஷ நாயகர் ஆலய வலம் நடைபெறும்.
கார்த்திகை நாள் – ஸ்ரீ சண்முக சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தமிழ் மாத முதல் செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ சண்முக சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
சங்கடஹர சதுர்த்தி – ஸ்ரீ மகா கணபதிக்கு (பெரிய விநாயகர்) சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
சஷ்டி விரதம் – ஸ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
தேய்பிறை அஷ்டமி – ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகம் நடைபெறும்.
திருவாதிரை நட்சத்திரம் – ஸ்ரீ சக்தி லிங்க சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும்.
பௌர்ணமி வழிபாடுகள் :
பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
பௌர்ணமி மாலையில் ஸ்ரீ வில் வளைத்த விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று, அதன் பின்னர் ஆலயம் மற்றும் காண்டீப தீர்த்தக்குளத்தைச் சுற்றி திருவலம் (கிரிவலம்) நடைபெறும்.
வருடாந்திர சிறப்பு பூஜைகள்:
மார்கழி மாதம் – மஹா தனுர் விதிய பாதம் அன்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
மற்றும்
தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, தை அமாவாசை, ஆருத்ரா தரிசனம், விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
6 அபிஷேகங்கள்
[தொகு]ஆண்டு தோறும் நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடக்கும். அதன்படி சித்திரையில் திருவோணம், மார்கழியில் திருவாதிரை, ஆனியில் உத்தரம் ஆகிய நட்சத்திரங்களிலும், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் சதுர்த்தசியிலும் என வருடத்தில் 6 நாட்களில் நடராஜருக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
சங்கராச்சாரியார் தொடர்பு
[தொகு]காஞ்சி காமகோடி பீடத்தின் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மகாபெரியவர்) இக்கோயிலுக்கு அடிக்கடி வருகை தந்து தங்கியுள்ளார். அவர் குளத்தின் நடுவிலுள்ள நீராழி மண்டபத்திற்குப் படகில் சென்று தியானம் செய்வது வழக்கம்.
அமைவிடம் & போக்குவரத்து வசதிகள்
[தொகு]திருச்சி - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து மேற்கு திசையில்(திருச்சி நெடுஞ்சாலையில்) 9 கி.மீ. தொலைவில் உள்ள உடையார்பாளையம் நகரில் அருள்மிகு பயறணீநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், துறையூர்,ஜெயங்கொண்டம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவரங்கம், பழநி, கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் சென்னை ஆகிய ஊர்களிலிருந்து உடையார்பாளையத்திற்கு நேரடி பேருந்து வசதி உண்டு. [1]