உள்ளடக்கத்துக்குச் செல்

உடுமலை சங்கர் கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடுமலை சங்கர் கொலை வழக்கு என்பது உடுமலைப்பேட்டை சங்கர் என்பவர் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டதற்காகக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்காகும்.

பட்டியலின இளைஞரான சங்கரும், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகளான கௌசல்யாவும் காதலித்துச் சாதிமறுப்புத் திருமணம் செய்தனர். 2016 மார்ச் 13 இல் உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கௌசல்யாவுடன் சங்கர் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டுத் தப்பியோடினர்.[1] இந்தக் காணொளிக் காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதில் சங்கர் உயிரிழந்தார், படுகாயங்களோடு கவுசல்யா உயிர் தப்பினார். மனவேதனையினால் கௌசல்யா மே 12 ஆம் நாள் தற்கொலை முயற்சி செய்து நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார்.[2]

திருப்பூர் நீதிமன்றத் தீர்ப்பு

[தொகு]

வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்றது. படுகொலையில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளில் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு 2017 டிசம்பர் 13இல் தீர்ப்பு வெளியானது.[3] அதில் 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சின்னசாமி(கௌசல்யாவின் தந்தை), ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகிய 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜூக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்தும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா. மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.[4]

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு

[தொகு]

இந்த தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது 22 சூன், 2020இல் வெளியானது. இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள ஜெகதீசன், பழனி எம். மணிகண்டன், பி. செல்வக்குமார், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய ஐந்து பேரின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.[5]

மறுவாழ்வு

[தொகு]

கௌசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியமும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்குச் சத்துணவுத் துறையில் வேலையும் தமிழக அரசு வழங்கியது.[6] மார்ச் 13 2018 இல் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை என்ற பெயரில் தனிப்பயிற்சி மையத்தை கௌசல்யா தொடங்கினார்[7] 2018 டிசம்பர் 9 ஆம் நாள் சக்தி என்பவரைக் கௌசல்யா மறுமணம் செய்துகொண்டார்.[8]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு; நீதியை நிலைநாட்டிய கோர்ட்". தினகரன். Archived from the original on 2018-01-15. Retrieved 6 மார்ச் 2018.
  2. "தன் தற்கொலை முயற்சிக்கு காரணம் சொல்கிறார் கெளசல்யா!". விகடன். Retrieved 6 மார்ச் 2018.
  3. "இந்தியாவிலேயே முதல் முறையாக ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு". தினமணி. Retrieved 6 மார்ச் 2018.
  4. "பார்வை: ஆணவக் கொலை ஒழிக்கும் ஆயுதம்". தமிழ் இந்து. Retrieved 6 மார்ச் 2018.
  5. "உடுமலை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு]]". பாலிமர் (22 சூன், 2020)
  6. "'போராடாமல் இங்கு எதுவும் கிடைத்துவிடாது!' - கலங்கும் கவுசல்யா". விகடன். Retrieved 6 மார்ச் 2018.
  7. "காதல் திருமணம் செய்தவர்களுக்காக போராடுவேன் - உடுமலை சங்கர் மனைவி பேச்சு". மாலைமலர். https://www.maalaimalar.com/News/District/2018/03/14095155/1150800/udumalpet-shankar-wife-says-I-will-fight-for-love.vpf. பார்த்த நாள்: 1 January 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார்; கவுசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம்: தியாகு, கொளத்தூர் மணி நடத்திய விசாரணையில் முடிவு". இந்து தமிழ் திசை. https://tamil.thehindu.com/tamilnadu/article25875739.ece. பார்த்த நாள்: 1 January 2019.