ஈஷா அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈஷா யோக மையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Isha Foundation
ஈஷா அறக்கட்டளை
உருவாக்கம்1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
நிறுவனர்ஜக்கி வாசுதேவ்
வகையோகா மையம், ஆசிரமம்
நோக்கம்யோகா, சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தலைமையகம்
சேவைப் பகுதி
இந்தியா, லெபனான், அமெரிக்கா, பிரிட்டனின் ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்
முறையோகா நிகழ்ச்சிகள், தியானம், மரம் நடுதல், கிராம மேம்பாடு
வலைத்தளம்isha.sadhguru.org

ஈஷா அறக்கட்டளை ஒரு மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத, பொதுத் தொண்டு ஆன்மீக அமைப்பாகும், இது 1992 இல் இந்தியாவின் கோயம்புத்தூர் அருகே சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் நிறுவப்பட்ட நிறுவனமாகும். தற்போது உலகளவில் 150 மையங்களைக் கொண்டு மனிதநேய அமைப்பாக திகழும் இந்த அமைப்பு, நாடு மற்றும் கலாச்சாரம் போன்ற எல்லைகள் தாண்டி இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. உள்நிலை மாற்றத்திற்கான ஈஷா யோகப் பயிற்சிகளிலிருந்து, மனித சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்குமான அதன் திட்டங்கள் வரை ஈஷாவின் செயல்பாடுகள் அனைத்தும், உலகின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் அடிப்படையான ஒருங்கிணைந்து செயல்படும் பண்பாட்டைக் கொண்டதாக உள்ளது. இந்த அணுகுமுறை, உலகளவில் ஈஷாவிற்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருப்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு (ECOSOC) அமைப்பும் ஈஷா அறக்கட்டளைக்கு சிறப்பு ஆலோசகர் தகுதியை வழங்கியுள்ளது.

உலகெங்கிலுமுள்ள இதன் 150க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆதரவுடன் ஈஷா அறக்கட்டளை ஆற்றிவரும் பணிகள், மக்கள் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றிக் கொள்ளவும், உறவு முறைகள் மற்றும் தன்னிறைவு நிலைகளை மேம்படுத்திக் கொள்ளவும், தங்களுள் பொதிந்துள்ள முழு ஆற்றலை உணரவும் ஓர் உறுதுணையான சூழ்நிலையை வழங்குகின்றன.[1][2]

ஈஷா யோகா மையம்[தொகு]

நுழைவாயிலில் சர்வ மத ஸ்தம்பம்

ஈஷா அறக்கட்டளையின் கீழ் 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈஷா யோக மையம், நீலகிரி மலைத் தொடரின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைச்சாரலில், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு, ஏராளமான வன விலங்குகள் உறையும் பிரத்தியேகமான வனப்பகுதியின் அருகில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. உள்நிலை வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள புகழ் வாய்ந்த இந்த சக்தி மையம், ஒரே கூரையின் கீழ் யோகாவின் பிரிவுகளான பக்தி, ஞானம், கர்மா மற்றும் கிரியா ஆகிய அனைத்தையும் வழங்கி உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்து வருவதுடன், குரு சிஷ்ய பாரம்பரியத்தையும் புதுப்பித்து வருகிறது.

இந்த மையம், நுணுக்கமான கட்டிடக் கலைகள் கொண்ட 64,000 சதுர அடி பரப்பளவுள்ள 'ஸ்பந்தா ஹால்' மற்றும் ஆதியோகி ஆலயம் என்னும் தியான மண்டபங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் தியானலிங்கம், தீர்த்தகுண்டம், ஈஷா புத்துணர்வு மையம், ஈஷா ஹோம் ஸ்கூல், மற்றும் குடும்ப சூழ்நிலையில் வாழ்வோருக்கான வானப்பிரஸ்தா குடியிருப்புகள் ஆகியவையும் யோக மையத்தில் அமைந்துள்ளன.

ஈஷா யோகப் பயிற்சிகள்[தொகு]

சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகப் பயிற்சிகள், உடல், மனம், உணர்ச்சி ஆகியவற்றில் உள்ள எல்லைகளை உடைப்பதற்கு அரிய வாய்ப்பினை அளித்து, மனிதனின் இயல்புநிலையான விடுதலை, அன்பு, மகிழ்ச்சி இவற்றை அடைய வழி வகுக்கிறது. மேலும் ஒருவர் உயர்ந்த உடல்நலத்தையும், மன அமைதி மற்றும் மனத்தெளிவையும் அடைய வழி செய்வதுடன், தன்னை உணர்ந்த ஞானியின் வழிகாட்டுதல் மூலம் உள்நோக்கிய பயணத்திற்கான அரிய வாய்ப்பையும் வழங்குகிறது. உலகின் பல்வேறு இடங்களில் ஈஷா யோகப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஈஷாவின் சமூக நலத் திட்டங்கள்[தொகு]

பசுமைக்கரங்கள் இயக்கம் (PGH – Project GreenHands)[தொகு]

இத்திட்டம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 11.4 கோடி மரக்கன்றுகளை குறுகியகாலத்தில் நட்டு தமிழகத்தின் பசுமைப் போர்வையை 33 சதவீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த பூமி இனிவரும் தலைமுறைகள் இனிது வாழ்வதற்கேற்றபடி, சுற்றுப்புறச் சூழ்நிலையில் தீவிர அக்கறை செலுத்தக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்ககமாகக் கொண்டுள்ளது.

2006ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி அன்று ஒரேநாளில் 2 இலட்சம் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் 8,52,587 மரக்கன்றுகள் நட்டு இத்திட்டம் கின்னஸ் சாதனை படைத்தது. சுற்றுசூழல் பாதுக்காப்பிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'இந்திரா காந்தி பரியவரண் புரஸ்கார்'-ஐ ஜூன் 2010 இல், இந்திய அரசாங்கம் இத்திட்டத்திற்கு வழங்கியது.

கிராமப் புத்துணர்வு இயக்கம் (ARR – Action for Rural Rejuvenation)[தொகு]

இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாய் விளங்கும் கிராமங்களில், i இயக்கத்தை தொடங்கியது. நடமாடும் மருத்துவ ஊர்திகள் மூலமாக கிராம மக்களுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சைகள், ஈஷா கிராம மருத்துவமனைகள், யோகப் பயிற்சி வகுப்புகள், மூலிகைத் தோட்டங்கள், பெண்களுக்குத் தொழிற்பயிற்சிகள், பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டுக்கள் போன்றவை அனைத்துத் தரப்பு கிராம மக்களையும் தங்கள் வாழ்விற்கு பொறுப்பேற்கச் செய்வதுடன், தங்கள் உச்சபட்ச நலனை அடையும்படியான வாய்ப்பை நல்குகிறது.

ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வருடங்களிலேயே, இத்திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவில் 3500 கிராமங்களிலுள்ள சுமார் 17 இலட்சத்திற்கும் மேலான மக்கள் பயனடைந்துள்ளனர். ஈஷா அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் வெற்றிகரமான ஈஷா கிராமோத்சவம், கிராம மக்களின் திறமை, உற்சாகம் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தையும் நகர மக்களுக்கு வெளிப்படுத்துவதாக உள்ளது.

2005 புத்தாண்டுத் தருணத்தில் சுனாமி இயற்கைப் பேரழிவினால் பாதிப்படைந்த தமிழக கடலோர மாவட்டங்களில், இலவச நடமாடும் மருத்துவமனைகள் ஆற்றிய அரும்பணி ஒப்பிட முடியாதது. சுனாமி பேரழிவின்போது பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களுக்கு உடனடியாக இலவச மருத்துவ ஊர்திகள் அனுப்பப்பட்டதுடன், 48000க்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் இராணுவ ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிட அவர்களுக்கு மீன்பிடி வலைகள், படகுகள், மேலும் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட சுனாமி மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வீடுகள் கட்டித்தரப்பட்டன. முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோயம்பத்தூரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக 04.செப்டம்பர் 2015 ஆன்று கலந்து கொண்டார்.[3][4][5]

ஈஷா வித்யா - ஈஷா கல்வித் திட்டம்[தொகு]

கிராமக் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக, சத்குரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் உருவான கல்வித்திட்டம் ஈஷா வித்யா. உயர்தரமான கல்வியினை கிராமக் குழந்தைகளுக்கு வழங்குவதன் வாயிலாக அவர்களைப் பேணிக் காப்பதும், அவர்களது வளர்ச்சியினை முன்னெடுத்துச் செல்வதும் இப்பள்ளியின் நோக்கமாகும். இந்தப் பள்ளிகளின் முக்கிய நோக்கம் தன்னம்பிக்கை, கணிப்பொறி ஆளுமை, நவீன உலகின் சவால்களை எதிர்கொளளும் திறன், ஆகியவற்றை வெளிக்கொணர்தலே. கணிப்பொறி அறிவினையும், ஆங்கிலப் பேச்சாற்றல் மிக்க இளம் சமூகத்தினரையும் உருவாக்கிட, கணிப்பொறியினை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை இங்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தாலூக்காவிற்கு ஒன்றாக மொத்தம் 216 பள்ளிகள் துவக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் இயங்கிக்கொண்டிருக்கும் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 4050 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.

ஈஷா ஹோம் ஸ்கூல்[தொகு]

சத்குரு அவர்களின் நீண்டகாலக் கனவு மற்றும் தொலைநோக்குப் பார்வையால் ஈஷா ஹோம் ஸ்கூல் துவங்கப்பட்டுள்ளது. ஈஷா ஹோம் ஸ்கூல் தரமான கல்வியினை சவாலுடனும், ஊக்கத்துடனும், இல்லம் போன்ற சூழலில் வழங்குகிறது. குழந்தைகளின் உள்ளிருக்கும் இயல்பான திறமைகளை ஒளிரச்செய்து, கற்கவும் தெரிந்து கொள்ளவும் இப்பள்ளி ஊக்குவிக்கிறது. இது குறிப்பிட்ட எந்த மதத்தினையும், எந்த தத்துவத்தினையும், எந்த கருத்தினையும் சார்ந்திராமல், வாழ்க்கையின் அடிப்படை குறித்த உள்நிலைப் புரிதலை ஏற்படுத்தி, வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக்க ஊக்குவிக்கிறது.

அனுபவமும் சர்வதேசத் தரமும் வாய்ந்த பல தேசத்து ஆசிரியர்கள் இங்கு பணிபுரிவதால் மாணவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுதல் எளிதாகிறது. மேலும் இங்கு படிப்பறிவோடு, வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வதை ஊக்கப்படுத்துதலும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது.

திட்டங்கள்[தொகு]

அவர்களது சில திட்டங்கள்:

  • கிராம புத்துணர்விற்கு இயக்கம் (Action for Rural Rejuvenation)
  • ஈஷா வித்யா- கல்வி திட்டம்
  • பசுமை கைகள் திட்டம்[6][7]
  • வனசிறீ சூழல் மையம் (Vanashree Eco-Center)
  • ஈசா வீட்டுக் கல்வி (Isha Home School)
  • சிறைபட்டவருக்கு அக விடுதலை (Inner Freedom for the Imprisoned)
  • ஈசா புத்துணர்ச்சி (Isha Rejuvenation).

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு உடன் சிறப்பு நேர்காணல், பார்க்கப்பட்ட நாள் 2022-02-05
  2. "Isha Yoga Center Coimbatore, Tamilnadu | Dhyanalinga Temple". 123Coimbatore (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. ஈஷா கிராமோற்சவம் நிகழ்ச்சி: சச்சின் இன்று கோவை வருகிறார் தி இந்து தமிழ் பார்த்தநாள் 04 செப்டம்பர் 2015
  4. ஆரோக்கியத்துடன் வாழ விளையாடுங்கள்: கோவையில் சச்சின் அறிவுரைதி இந்து தமிழ் 05 செப்டம்பர் 2015
  5. "பழங்குடியின மக்களின் வாழ்வை மாற்ற உதவும் ஈஷா அறக்கட்டளை". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  6. Project Green Hands
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-03. பார்க்கப்பட்ட நாள் 2009-09-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஷா_அறக்கட்டளை&oldid=3544865" இலிருந்து மீள்விக்கப்பட்டது