இரதிந்திரநாத் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரதிந்திரநாத் தாகூர்
இரதிந்திரநாத் தாகூர்
இரதிந்திரநாத் தாகூர்
பிறப்புஇரதிந்திரநாத் தாகூர்
(1888-11-27)27 நவம்பர் 1888
தாகூர் மாளிகை, ஜோரசங்கோ, கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரிட்டிசு இந்தியா
இறப்பு3 சூன் 1961(1961-06-03) (அகவை 72)
மித்தாலி, தேராதூன், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம்பிரிட்டிசு இந்தியா (1888–1947)
இந்தியன் (1947–1961)
படித்த கல்வி நிறுவனங்கள்இல்லினாய்ஸ் மாநிலப் பல்கலைக்கழகம், அமெரிக்கா
பெற்றோர்இரவீந்திரநாத் தாகூர் (தந்தை)
மிருனாளிணி தேவி]] (தாயார்)
துணைவர்மீரா சட்டோபாத்யா
வாழ்க்கைத்
துணை
பிரதிமா தேவி
பிள்ளைகள்நந்தினி (தத்தெடுத்தவர்)
ஜெயபிரதா சட்டோபாத்யா (வளர்ப்பு)

இரதிந்திரநாத் தாகூர் (Rathindranath Thakur) (1888 நவம்பர் 27 - 1961 சூன் 3) இவர் ஓர் இந்திய கல்வியாளரும் மற்றும் வேளாண் விஞ்ஞானியுமாவார். இவர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக பணியாற்றினார். இது இவரது தந்தை இரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இரதிந்திரநாத்தின் பல்கலைக்கழக பதவிக்காலம் நிதி முறைகேடு மற்றும் திருமணத்திற்கு புறம்பான விவகாரம் ஆகிய குற்றச்சாட்டுகளால் சிதைக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1909 இல் இரதிந்திரநாத் தாகூர் (இடமிருந்து இரண்டாவது) இவரது தந்தை (மையம்), மனைவி பிரதிமா (வலமிருந்து இரண்டாவது), மற்றும் இரண்டு சகோதரிகளுடன்

இரதிந்திரநாத் 1888 நவம்பர் 27 அன்று இரவீந்திரநாத் தாகூர் மற்றும் மிருணாளினி தேவி ஆகியோருக்கு பிரிட்டிசு இந்தியாவின் வங்காள மாகாணத்தின் கல்கத்தாவிலுள்ள ஜோரசங்கா தாகூர் மாளிகையில் பிறந்தார். [1]

சாந்திநிகேதனில் உள்ள பிரம்மச்சாரிய ஆசிரமத்தில் முதல் ஐந்து மாணவர்களில் இவரும் ஒருவராவார். [2] பள்ளிப்படிப்பை முடித்ததும், இவரும் இவரது வகுப்பு தோழர் சந்தோசு சந்திர மசூம்தாரும் 1906 இல் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து, இவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று 1909 இல் இல்லினாய்ஸ் மாநில பல்கலைக்கழகத்தில் வேளாண்மை அறிவியலில் பட்டம் பெற்றனர். [1] [3]

திருமணம்[தொகு]

1910 ஆம் ஆண்டில் இரதிந்திரநாத் இந்தியாவுக்குத் திரும்பினார். இவரது தந்தையின் வேண்டுகோளின் பேரில், சிலெய்தாவிலுள்ள குடும்ப ஜமீந்தாரியை கவனித்துக் கொள்ளச் சென்றார். அடுத்த மாதங்களில், இவரது தந்தை இவரை கிராம வாழ்க்கைக்கு அறிமுகப்படுத்தினார். அதே நேரத்தில் இவர் பல்கலைக்கழகத்தில் தான் கற்றதை தனது தந்தைக்கு கற்பித்தார். [1] இரதிந்திரநாத் தாகூர் பின்னர் நினைவு இவ்வாறு நினைவு கூர்ந்தார்; "தந்தை-மகன் உறவு தங்களுக்குள் 1910 இல் இருந்த அளவுக்கு நெருக்கமாக இருந்ததில்லை".

இரதிந்திரநாத் சிலெய்தாவில் பல விவசாய நிலங்களை உருவாக்கினார். இவர் ஒரு மண் பரிசோதனை ஆய்வகத்தை கட்டினார். தாவர விதைகளை இறக்குமதி செய்தார். உழவு இயந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களைக் கொண்டு அப்பகுதியின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக்கொண்டார். [1]

1910 சனவரி 27, அன்று, இரதிந்திரநாத் தன்னைவிட ஐந்து வயது இளையவரும் விதவையுமான பிரதிமா என்பவரை மணந்தார். தாகூர் குடும்பத்தில் விதவை மறுமணம் செய்து கொண்ட முதல் நிகழ்வு இதுவாகும். [1] இவரது தனிப்பட்ட கடிதங்களிலிருந்து, இந்த காலகட்டத்தில் இரதிந்திரநாத் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என்று ஊகிக்க முடியும்.

விஸ்வபாரதி[தொகு]

திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, தந்தையின் வேண்டுகோளின் பேரில், இரதிந்திரநாத் பிரதிமாவை சிலெய்தாவிலேயே விட்டுவிட்டு, விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு உதவ சாந்திநிகேதனுக்குச் சென்றார். [1] இரதிந்திரநாத்துக்கும் பிரதிமாவுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்படாத கடிதங்கள் மூலமும், தூரம் ஆகியவையும் தம்பதியினரிடையே ஒரு பிளவை உருவாக்கியது என்பதையும் இவர்கள் ஒருவருக்கொருவர் பிரிந்தே இருந்ததையும் காட்டுகிறது. 1922 ஆம் ஆண்டில், இவர்கள் நந்தினி என்ற மகளை தத்தெடுத்தனர். பிரதிமா தனது கணவர் மற்றும் மாமியார் ஆகியோருடன் இங்கிலாந்து, ஐரோப்பா உட்பட பல தொலைதூர இடங்களுக்கு சென்றார். [4]

வெளிநாட்டில் கல்வி பயின்று திரும்பிய பிறகு, இரதிந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் சுமார் நாற்பதாண்டுகள் கழித்தார். விஸ்வபாரதிக்கு சேவை செய்தார். வெவ்வேறு காலங்களில் இவர், கர்மா சசிவா, சாந்திநிகேதன் சசிவா மற்றும் சிறீநிகேதன் ஆகியவற்றின் பொறுப்பை ஏற்று நடத்தினார். மேலும், இரவீந்திரநாத் தாகூர் நினைவு மற்றும் காப்பகங்களை அபிவிருத்தி செய்வதில் மகத்தான பங்களிப்பை வழங்கினார். [5] விஸ்வ பாரதியில், தாகூர் ஆரம்பத்தில் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். பின்னர் அதன் தலைவராக ஆனார். பிற்காலத்தில், குறிப்பாக 1941இல் இரவீந்திரநாத் தாகூர் இறந்த பிறகு, இவர் இந்தப்பணி தனது எண்ணங்களை நிறைவேற்றவில்லை என்று கண்டறிந்தார். ஆர்தர் எஸ். ஆப்ராம்சன் இரதிந்திரநாத்தின் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், அது அவர் மீது செலுத்தப்பட்ட ஒரு தார்மீக சுமை என்று கூறினார். [1]

1951 ஆம் ஆண்டில், இரதிந்திரநாத் விஸ்வபாரதி ஒரு மத்திய பல்கலைக்கழகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் துணைவேந்தர் ஆனார். [1] தேவையற்ற அதிகாரத்துவம் என்று இவர் கருதியதைச் சேர்த்ததால், இந்த மாற்றத்தை இரதிந்திரநாத் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. நிதி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் பின்னர் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டபோது, நீதிமன்ற விசாரணையில் கூட கலந்து கொள்ள இவர் தயங்கினார். இச்சம்பவம் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஜவகர்லால் நேருவை எரிச்சலூட்டியது. [6] இறுதியில், குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.

திருமணத்திற்கு புறம்பான விவகாரம்[தொகு]

தனது பதவிக் காலத்தில், இரதிந்திரநாத், தாகூர் பேராசிரியரான நிர்மல்சந்திரா சட்டோப்பாத்யா என்பவரின் மனைவியான முப்பத்தோறு வயதான மீரா என்பவரிடம் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். [1] இந்தக் காலகட்டத்தில், இரதிந்திரநாத்துக்கும் பிரதிமாவுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவிழந்தது. அவர்கள் சாந்திநிகேதனில் ஒரே வீட்டில் தங்கியிருந்தாலும் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதில்லை. [7]

இரதிந்திரநாத், தனது குடும்பத்தினரிடமிருந்தும், சாந்திநிகேதனில் வசிப்பவர்களிடமிருந்தும் சில விமர்சனங்களை மீறி மீரா மற்றும் நிர்மல்சந்திராவுடனன தனது நட்பைத் தொடர்ந்தார். [6] [7] நேரு, நிர்மல்சந்திராவையும் மீராவையும் சாந்திநிகேதனிலிருந்து "வெளியேறச்" சொன்னபோது, இவர் தான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தார். இதனால் "உடல்நலக்குறைவு" என்று கூறி பதவியைத் துறந்தார். 1953 ஆகத்து 22 ஆம் தேதி இவர் விஸ்வபாரதியின் பொறுப்புகளிலிருந்து விடுபட்ட நாள் என்று கூறினார். [1]

தேராதூன்[தொகு]

விஸ்வபாரதியிலிருந்து வெளியேறிய பின்னர், தாகூர் தேராதூனுக்குச் செல்ல திட்டமிட்டார். மீராவை தன்னிடம் அனுப்பக் கோரி இவர் நிர்மல்சந்திராவுக்கு கடிதம் எழுதினார்; நிர்மல்சந்திராவும் இதை ஏற்றுக்கொண்டு, மீராவையும் தனது 2 வயது மகன் ஜெயப்பிரதாவுடன் தாகூருடன் தேராதூன் அனுப்பினார். [1] தேராதூன் புறப்படுவதற்கு முன், தாகூர் பிரதிமாவுக்கு இவ்வாறு எழுதினார்; "நான் ரகசியமாக செல்லவில்லை. மீரா என்னுடன் இருப்பதாக அனைவருக்கும் தெரிவித்தேன்." அதற்கு பிரதிமா "அவர் மகிழ்ச்சியாக இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று பதிலளித்தார்.

தேராதூனில், தாகூர் ராஜ்பூர் சாலையில் "மிதாலி" என்ற வீட்டைக் கட்டினார். இது சாந்திநிகேதனில் உள்ள அவரது அசல் வீட்டின் பிரதியாக வடிவமைக்கப்பட்டது. [1] [8] மீராவுக்கு ஒரு தேதியிடப்படாத கடிதத்தில், தாகூர் தனது மீதமுள்ள நாட்களை அவருடன் நிம்மதியாகக் கழிக்க விருப்பத்தை வெளிப்படுத்தியதோடு, "மீரா" மட்டுமே தனக்கு முக்கியமானவர் என்று கூறினார். மீராவுக்கு ஆரோக்கியக்குறை இருந்தபோதிலும், தாகூர் இறக்கும் வரை இவர்கள் எட்டு ஆண்டுகள் தேராதூனில் ஒன்றாக இருந்தனர். இந்த காலகட்டம் முழுவதும், தாகூர் பிரதிமாவுடன் தொடர்ந்து கடிதங்களைப் பரிமாறிக்கொண்டார். மேலும் அடிக்கடி நிர்மல்சந்திரா இவர்களை நேரில் வந்து சந்தித்தார்.

இறப்பு[தொகு]

1961 சூன் 3 அன்று, தாகூர் தனது சொந்த வீட்டில் இறந்தார். இவரது இறுதி சடங்குகளை நிர்மல்சந்திரா மற்றும் பத்து வயது ஜெயபிரதா ஆகியோர் நிகழ்த்தினர்.

நினைவு[தொகு]

ரதிந்திரநாத் தாகூரின் நினைவாக 2013 ஆம் ஆண்டில் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ஒரு அருங்காட்சியகத்தை அமைத்தது. இவரால் கட்டப்பட்ட ஒரு வீடு அருங்காட்சியகத்தை கொண்டுள்ளது. [9]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 কবিপুত্র [Kabiputra]. Anandabazar Patrika (in Bengali). 18 February 2017. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  2. "Rathindranath Tagore". www.visvabharati.ac.in. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
  3. "Santoshchandra Majumdar". www.visvabharati.ac.in. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
  4. "Pratima Devi (1893-1969)". Visva-Bharati. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.
  5. "Rathindranath Tagore (1888-1961)". Visva Bharati. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
  6. 6.0 6.1 আপনি তুমি রইলে দূরে [You yourself stayed away] (in Bengali). Kali O Kalom. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  7. 7.0 7.1 (in bn)Anandabazar Patrika. http://archives.anandabazar.com/archive/1111126/27rabipro.html. 
  8. "What's love got to do with it?". The Telegraph. 4 December 2011. பார்க்கப்பட்ட நாள் 1 June 2019.
  9. "Museum and book in memory of Rathindranath Tagore, son of Rabindranath Tagore". Jagran Josh, 1 July 2013. பார்க்கப்பட்ட நாள் 26 July 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரதிந்திரநாத்_தாகூர்&oldid=2991539" இலிருந்து மீள்விக்கப்பட்டது