ஒரு கல்வெட்டின் படி (அம்புக்குறியைப் பார்க்க.), சாஞ்சியிலுள்ள பெருந்தூபியின் தென்புற வாயில் "மன்னன் சதகர்ணியின்" ஆட்சியின் கீழ் நன்கொடையாக அளிக்கப்பட்டது.
தூபியின் பின்புறத்தின், மேல் விதானத்தின், நடுப்பகுதியில் காணப்படும் கல்வெட்டு. இது, முன்னைப் பிராமி எழுத்தில் மூன்று வரிகளில் தூபியின் குவிமாடத்தின் மேல் இச் செதுக்கலில் காணப்படுகிறது.[2] அண்ணளவாக கி.மு 50 - கி.பி. 0 எனத் திகதியிடப்பட்டுள்ளது.
Text of the inscription: 𑀭𑀸𑀜𑁄 𑀲𑀺𑀭𑀺 𑀲𑀸𑀢𑀓𑀡𑀺𑀲 / 𑀆𑀯𑁂𑀲𑀡𑀺𑀲 𑀯𑀸𑀲𑀺𑀣𑀻𑀧𑀼𑀢𑀲 / 𑀆𑀦𑀁𑀤𑀲 𑀤𑀸𑀦𑀁 ராணோ சிரி சாதகணிச / ஆவேசணிச வாசிதிபுதச / ஆனந்தச தானம் "வசிதியின் மகனும், ராசன் சிரி சதகர்ணியின் கைவினைஞர்களின் பொறுப்பாளருமான ஆனந்தவின் அன்பளிப்பு"[2]
இரண்டாம் சதகர்ணி (Satakarni II, பிராமி எழுத்துமுறை: 𑀲𑀸𑀢𑀓𑀡𑀺, சாதகணி) என்பவர் இந்தியாவின் தக்கணப் பகுதியை ஆண்ட சாதவாகன அரசர்களில் நான்காமவராவார். இவரது ஆட்சிக்காலம் பொதுவாக கி.மு. 50-25 எனக் கொள்ளப்படுகிறது.[1]
முன்னைய சாதவாகன அரசர்கள் மேற்கு மால்வாப் பகுதியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இரண்டாம் சதகர்ணி கிழக்கு மால்வாப் பகுதியை சுங்கர்களிடமிருந்தோ அல்லது கண்வர்களிடமிருந்தோ கைப்பற்றினார்.[3] இதன் மூலம், பௌத்த வழிபாட்டிடமான சாஞ்சியை அவரால் அணுக முடிந்தது. இங்கு, மௌரியப் பேரரசு மற்றும் சுங்கர்களால் அமைக்கப்பட்ட மூலத் தூபிகளைச் சுற்றி அலங்கரிக்கப்பட்ட நுழைவாயில்களை அமைத்தார்.[4]
புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்கால மன்னர்களின் பட்டியலின்படி, "சந்திரகுப்த மௌரியன் ஆட்சிபீடமேறி 137 ஆண்டுகளின் பின், சுங்கர்கள் 112 ஆண்டுகளும், கண்வயனர்கள் 45 ஆண்டுகளும் ஆட்சிபுரிவர். கண்வயனரின் இறுதி மன்னனான சுசர்மன் ஆந்திர சிமுகனால் கொல்லப்படுவான்". சந்திரகுப்த மௌரியனின் ஆட்சித் துவக்கம் கி.மு. 324 எனக் கணித்தால், சிமுகன் 294 ஆண்டுகளுக்குப் பின், அதாவது கி.மு. 30ல் ஆட்சிபீடமேறியுள்ளான்.[5] சிமுகன் 23 ஆண்டுகளும், அவனுக்குப் பின் ஆட்சிபுரிந்த கண்கன் 18 ஆண்டுகளும் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இதன்படி, கண்கனுக்குப் பின் அரியணையேறிய சதகர்ணியின் ஆட்சித் துவக்கம் கி.பி 10ம் ஆண்டாகும்.[5]
சாஞ்சியில் காணப்படும், "மன்னன் சதகர்ணி" எனும் பெயரிலான நன்கொடைக் கல்வெட்டு இரண்டாம் சதகர்ணியின் காலப்பகுதிக்குரியதெனக் கருதப்படுகிறது.[6] பிராமி எழுத்துக்களிலுள்ள சிரி-சதகணி கல்வெட்டு, சாதவாகன அரசன் இரண்டாம் சதகர்ணியின் கைவினைஞர்களால், தென்புற வாயிலின் மேல்விதானம் நன்கொடையாக அளிக்கப்பட்டமை பற்றிக் குறிப்பிடுகிறது.:[6]
இரண்டாம் சதகர்ணியின் ஆட்சிக்காலத்தின் பின் சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மேலும், மேற்குச் சத்ரப ஆட்சியாளரான நாகபாணன் இப்பகுதிகளை வென்றார்.[1] சாதவாகனப் பேரரசு கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சியின் கீழ் மீண்டும் புத்துயிர் பெற்றது.[1]