இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரணியூர் ஆட்கொண்டநாதர் கோயில் என்பது சிவகங்கை மாவட்டம் இரணியூரில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். அதிகமான சிற்பங்கள் அமைந்திருப்பதால் இச்சிவாலயத்தினை சிற்பக் கோயில் என்றும் அழைக்கின்றார்கள்.[1] ஆலையத் தூண்களில் அஷ்டலட்சுமி, வல்லப கணபதி, வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், நவதுர்க்கை, இரணிய சம்ஹாரம் போன்ற சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இச்சிவாலயத்தின் மூலவர் ஆட்கொண்ட நாதர் எனவும், அம்பிகை சிவபுரந்த தேவி எனவும் அழைக்கப்படுகிறார். இச்சிவாலயத்திற்கு சிவாகமப் படி பூசைகள் செய்யப்படுகின்றன. தலவிருட்சமாக வில்வ மரம் அமைந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி, திருவாதிரை, கார்த்திகை மற்றும் சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

தல வரலாறு[தொகு]

திருமால் இரணியன் எனும் அசுரனை அழிக்க நரசிம்மர் அவதாரத்தினை எடுத்தார். அந்த அவதாரத்தில் மனித உடலும், சிங்க தலையையும் கொண்டிருந்தார். இரணியனை கூரிய நகங்களால் கிழித்து அழித்தார். மிகவும் உக்கிரமாக இருந்த காரணத்தால் பிரகலநாதன் அவரை பாடல்கள் பாடி குளிர்வித்தான். இரணியனைக் கொன்ற பாவத்திற்காக இத்தலத்தில் சிவபெருமானை நரசிம்மர் வழிபட்டார்.[1]

திருமாலின் உக்கிரம் கண்டு அம்பிகையும் உக்கிரமடைந்தார். அதனால் நவகாளியாக வெளிபட்டு சிவனை வணங்கினார்.[1] சிவனை வழிபட்டு சாந்தம் அடைந்தமையால் சிவபுரந்த தேவி என்று அழைக்கப்படுகிறார்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 சிவகங்கை சீமையில் சிற்பக் கோயில் - சக்தி விகடன் 19.01.2016

வெளி இணைப்புகள்[தொகு]