இயூசூப் அலி கேச்சேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயூசூப் அலி கேச்சேரி (ஆங்கிலம்: Yusufali Kechery) (16 மே 1934 - 21 மார்ச் 2015) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த கவிஞரும், திரைப்பட பாடலாசிரியரும், திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமாவார். மலையாளக் கவிதைகளின் நவீன சகாப்தத்தின் முன்னணி கவிஞர்களில் ஒருவரான இவர் ஓடக்குழல் விருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வள்ளத்தோள் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

அவர் 1934 இல் கொச்சின் இராச்சியத்தின் திருச்சூர் மாவட்டத்தில் கேச்சேரி என்ற ஊரில் பிறந்தார் (இப்போது இந்தியாவின் கேரளாவில் உள்ளது). சட்டத்தில் இளங்கலை பட்டம் முடித்த பின்னர், வழக்கறிஞராகவும், பகுதி நேர எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பேராசிரியர் கே. பி. நாராயண பிசாரோடி, மிகவும் மதிப்பிற்குரிய அறிஞர், யூசுப் அலியின் சமசுகிருத ஆசிரியராக இருந்தார். இவருக்கு நான்கு ஆண்டுகள் இலவசமாக சமசுகிருதத்தைக் கற்பித்தார். கேச்சேரி நவீன யுகத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவரது முக்கிய கவிதைப் படைப்புகளில் சைனபா, ஆயிரம் நாவுள்ள மௌனம், அஞ்சு கன்யகாக்கள், நாதபிரம்மம், அமிர்து, கேச்சேரி புழா, அனுராககானம் போலே, ஆலில, கதயெ பிரேமிச்ச கவிதா, பேரறியாத்த நொம்பரம், அகைந்தவம் போன்றவைகள் அடங்கும். [1]

கேரள சங்கீதா நாடக அகாதமியின் உதவி செயலாளர், நிர்வாக உறுப்பினர், திருச்சூர் அகில இந்திய வானொலியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி போன்றவற்றை இவர் வகித்துள்ளார். கேரள சாகித்ய அகாடமியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இயூசுப் அலி, மலையாள படங்களுக்கு சில பாராட்டப்பட்ட பாடல்களை எழுதிய சிறந்த பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். தயாரிப்பாளராக அவரது முதல் படம் சிந்தூரச்செப்பு (1971)என்பதாகும். இதை பிரபல நடிகர் மது இயக்கியுள்ளார். இவரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பாடல் வரிகளை இவர் எழுதியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வனதேவதா (1977), நீலதாமரா (1979) ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். புகழ்பெற்ற இசைக்கலைஞர் நௌசாத் இசையமைத்த துவனி படத்தில் இடம் பெற்ற பாடல்களை எழுதியுள்ளார். 2000 ஆமாவது ஆண்டில் மலையாள திரைப்படமான மழா (மழை) என்றப் படத்திற்காக எழுதப்பட்ட சமஸ்கிருத பாடலுக்காக தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இவர் 2015 மார்ச் 21 அன்று கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் தனது 81 வயதில் காலமானார். [2] அவர் நீண்டகால நீரிழிவு நோயாலும், மூச்சுக்குழாய் நிமோனியாவாலும் பாத்திக்கப்பட்டிருந்தார். அவரது குரு கே.பி.நாராயண பிசரோடியின் 11 வது நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து இவரது மரணம் ஏற்பட்டது. இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள பட்டிக்காரா ஜும்மா மசூதியின் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு கதீஜா என்ற மனைவியும் மற்றும் ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

விருதுகள்[தொகு]

இலக்கிய விருதுகள்[தொகு]

1985: கேரள சாகித்ய அகாடமி விருது - ஆயிராம் நாவுல்லா மௌனம் [3]
1987: ஓடக்குழல் விருது - கேச்சேரி புழா
1988: ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம் - கேச்சேரி புழா [4]
1990: ஆசான் ஸ்மராகா கவிதா புரஸ்காரம்
2012: வள்ளத்தோள் விருது [5]
2012: பாலமணி அம்மா விருது [6]
2013 : கேரள சாகித்ய அகாதடமி சக ஊழியம்[7]

திரைப்பட விருதுகள்[தொகு]

1993: சிறந்த பாடல்களுக்கான கேரள மாநில திரைப்பட விருது - கசல்
1994: சிறந்த பாடல்களுக்கான கேரள மாநில திரைப்பட விருது - பரிணயம்
1998: சிறந்த பாடல்களுக்கான கேரள மாநில திரைப்பட விருது - சினேகம் 1999: சிறந்த பாடலாசிரியருக்கான ஆசியநெட் திரைப்பட விருது - தீபஸ்தம்பம் மகாச்சர்யம்
2000: சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய திரைப்பட விருது - மழா

  • பிரேம் நசீர் விருது
  • குஞ்சாக்கோ நினைவு விருது

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயூசூப்_அலி_கேச்சேரி&oldid=3723211" இலிருந்து மீள்விக்கப்பட்டது