இந்துக் கோயில் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்துக்கோயில் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திராவிடப் பாணியில் அமைந்த தஞ்சைப் பெரிய கோயில்
திராவிடப் பாணியில் அமைந்த விருபாட்சர் கோயில், ஹம்பி
வட இந்தியக் கட்டிடக் கலை நயத்தில் பஞ்சயாதன முறைப்படி கட்டப்பட்ட கந்தாரிய மகாதேவர் கோயில், கஜுராஹோ, மத்தியப் பிரதேசம்

இந்து சமயத்தவருக்கு உரிய வழிபாட்டு இடமான இந்துக் கோயில்கள் தொடர்பான கட்டிடக்கலை இந்துக்கோயில் கட்டிடக்கலை ஆகும். இந்து சமயத்தில் பல்வேறு கட்டிடக்கலைகள் இருந்தாலும் அவை அனைத்திற்கும் ஒற்றுமை உள்ளது. கர்ப்பக்கிரகம், கருவறை, அர்த்த மண்டபம், கலசம் முதலியவை அனைத்து இந்து சமயக் கட்டிடக் கலைகளிலும் பொதுவான அம்சங்களுள் சிலவாகும். இந்து சமயம் தற்போது வழக்கிலுள்ள பல சமயங்களுக்கு மூத்த சமயமாக இருந்தும், இதன் தோற்றம் எப்பொழுது நடைபெற்றது என்று தெரியாத அளவுக்குப் பழமை வாய்ந்த சமயமாக இருந்தும், இதன் அடிப்படையாகக் கருதப்படும் வேதங்கள் பொ.ஊ.மு. 1500 க்கு முன்னரே தோன்றியிருந்தும், இன்று வரை நிலைத்திருக்கின்ற இச் சமயத்துக்குரிய கோயில்கள் பிற்பட்ட காலத்துக்குரியவையே. ஆரம்பகால இந்துக்கோயில் கட்டிடங்கள் பெரும்பாலும் அழிந்து போகக்கூடிய கட்டிடப்பொருட்களால் கட்டப்பட்டு இருந்ததாகக் கருதப்படுகின்றது. எனினும் கிடைக்கக்கூடிய சான்றுகளை வைத்து இந்துக்கோயில்களின் தோற்றம், தொடக்ககால இந்துக்கோயில்களின் அமைப்பு, அதன் வளர்ச்சி என்பன பற்றிப் பலர் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்கள்.

அமைப்பு[தொகு]

இக்கோயில்கள் ஒழுங்கான வடிவவியல் வடிவங்களான சதுரம், வட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி, பாதங்கள் எனப்படும் சதுர வலையமைப்பில் பல வேறுபாடுகளுடன் கூடிய திறந்த, சமச்சீரான வடிவமைப்புக்கொண்டவை. இந்துக் கோயிலொன்றின் முக்கியமான பகுதி கருவறை ஆகும். கோயிலுக்குரிய முதன்மைக் கடவுளின் உருவம் கருவறையிலேயே வைக்கப்பட்டிருக்கும். கருவறைக்கு மேல் கோபுரம்போல் அமைந்திருக்கும் அமைப்பு சிகரம் அல்லது விமானம் எனப்படும்.

வகைப்பாடுகள்[தொகு]

கோயில்கள் கட்டுமானப் பொருட்களின் அடிப்படையிலும், வடிவங்களின் அடிப்படையிலும் பல்வேறு வகைகளாக உள்ளன.

கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில்[தொகு]

இந்துக் கோயில்கள் கட்டுமானப் பொருட்களின் அடிப்படையில் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன மண் தளி, மரத்தளி, கற்றளி, குடைவரைக் கோயில் என்பவனவாகும். தொடக்ககாலத்தில் கோயில்கள் மிகச் சிறியதாக மண் கொண்டு அமைக்கப்பட்டன. கட்டுமானப் பணிகளில் முன்னேற்றம் அடைந்த பிறகு மரம் மற்றும் செங்கல், சுண்ணாம்பினால் செய்யப்பட்டதாக கோயில்கள் மாறின. அரசர்களின் காலத்தில் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கற்றளிகளும், குடைவரைக் கோயில்களும் உருவாக்கப்பட்டன.

மண் தளி[தொகு]

சுடுமண்ணைக் கொண்டு அமைப்பட்ட கோவில்கள் மண்தளிகள் என்று அழைக்கப்பட்டன.

மரத்தினால் செய்யப்பட்ட கோவில்கள்[தொகு]

தொடக்கால கோவில்கள் மரத்தினாலேயே அமைக்கப்பெற்றன. இவை மரத்தினை செதுக்கி அமைப்பதால் எளிமையாக இருந்தன. ஆனால் இயற்கை சீற்றங்களால் விரைவில் பழுதடைந்தன. மரத்தினால் செய்யப்பட்ட கோவில் விமானங்கள் மழையிலிருந்து பாதுகாக்கப்பட்ட செப்பு தகடுகள் வேயப்பட்டன. சில அரசர்கள் கோவில்களுக்கு தங்கத் தகடுகளும் வேய்ந்தனர்.

இதற்குச் சான்றாக சிதம்பரம் நடராஜர் கோவிலை சொல்லலாம். அங்கு சபாநாதர் மண்டபம், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆலயம் போன்றவை மரத்தினால் செய்யப்படிருந்தவை, பிற்காலத்தில் அவைகள் அமைப்பு மாறாமல் கற்களால் செய்யப்பட்டன என்றபோதும், மரத்தினால் செய்யப்பட்டவை போலவே அமைக்கப்பெற்றன. சிதம்பரம் நடராஜர் கோவில் விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

செங்கற் கட்டிட கோவில்கள்[தொகு]

பொ.ஊ. 600 க்கு மேல் கட்டப்பட்ட கோவில்கள் செங்கற் கட்டிடங்களால் கட்டப்பட்டன. மரத்தினால் ஆன கோவில்கள் எளிதில் தீப்பற்றவும், பழுதடையும் அதிக வாய்ப்புகள் இருந்தமையினால் கோவில்கள் செங்கற் கட்டிடங்களாயின. செங்கற் கட்டிடங்களுக்கு மேல் சுண்ணாம்னைபினை பூசும் வழக்கமும் இருந்தது.

குடைவரைக் கோயில்[தொகு]

செங்கல், சுண்ணம், மரம், உலோகம் முதலியவை
இல்லாமலே பிரம, ஈசுவர, விஷ்ணுக்களுக்கு
விசித்திர சித்தன் என்னும் அரசனால் இக்கோயில்
அமைக்கப்பட்டது.

என்று பெருமையாக கல்வெட்டில் செதுக்கியவர் மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் ஆவார். இவர் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவிலாகும்.[1] அத்துடன் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவரும் இவரே. தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர். [2]

கற்றளி[தொகு]

கற்றளி என்பது கற்களால் கட்டப்பெற்ற கோயில்களாகும். சுண்ணம் சேர்க்கப்பெறாமல் கற்களைக் கொண்டு கட்டப்பெற்றன. இவை கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி அமைக்கப்பெற்றமையை குறிக்கின்றன. இவ்வாறு கற்களைக் கொண்டு கோவில் அமைக்கும் முறை பொ.ஊ. 7 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மன் காலத்தில் தொடங்கப்பெற்றவையாகும்.[3]

ஒற்றைக் கற்றளி

கட்டமைப்பு வகைகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251
  2. "Tamil Virtual University".
  3. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

கருவி நூல்[தொகு]

  • தமிழர் வளர்த்த அழகு கலைகள் - அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி