இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள மாநிலங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தியாவைப் பொறுத்த வரை பெரும்பான்மையாக உள்ளவர்கள் இந்து சமயத்தினர் ஆவர். இருப்பினும் மாநில வாரியாக பார்க்கும் போது 5 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பகுதிகளில் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். 1992-ஆம் ஆண்டின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் பிரிவு 2(c) & (f) இன் கீழ் அறிவிக்கப்பட்ட சமயத்தைச் சேர்ந்த இசுலாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்தம், சமண மற்றும் பார்சி சமயத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களுக்கு சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களில் சலுகைகள் வழங்கப்படுகிறது.[1]இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள கீழ்கண்ட மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகள் சலுகைகள் வழங்குவதில்லை.[2]

இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள மாநிலங்கள் & ஒன்றியப் பகுதிகள்[தொகு]

  1. நாகாலாந்து - இந்துக்கள் 8.75% - (கிறித்தவர்கள் 87.93%)[3]
  2. மேகாலயா - இந்துக்கள் 11.53% - (கிறித்தவர்கள் 74.59%)[4]
  3. மிசோரம் - இந்துக்கள் 2.75% - (கிறித்தவர்கள் 87.16%)[5]
  4. அருணாச்சலப் பிரதேசம் - இந்துக்கள் 29.04% - (கிறித்துவர்கள் 30.26% & பிறர் 26.20%)[6]
  5. பஞ்சாப் - இந்துக்கள் 38.49% - (சீக்கியர்கள் 57.69%)[7]
  6. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக், (ஒன்றியப் பகுதிகள்) - இந்துக்கள் 28.44% - (இசுலாமியர்கள் 68.31%)[8]
  7. இலட்சத்தீவுகள், (ஒன்றியப் பகுதி) - இந்துக்கள் 2.77% - (இசுலாமியர்கள் 96.58%)[9]

வழக்கு[தொகு]

6 மாநிலங்கள் மற்றும் மூன்று ஒன்றியப் பகுதிகளில் வாழும் இந்து சமயச் சிறுபான்மை இன மக்களுக்கு, சிறுபான்மையோர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தின்[10]சட்டப் பிரிவு 2 (f) தகுதி குறித்து புது தில்லி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்தியாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மே 2022ல் வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளித்த சிறுபான்மை விவகார அமைச்சகம், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992ன் பிரிவு 2சியின் கீழ் 6 சமயத்தினர் சிறுபான்மை சமூகங்களாக இந்திய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றும், இந்துக்கள் உட்பட எந்தவொரு மத அல்லது மொழிவழி சமூகத்தையும் தங்கள் எல்லைக்குள் சிறுபான்மையினராக அறிவிக்க அரசாங்கங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியது.

உபாத்யாயா தேசிய சிறுபான்மை கல்வி நிறுவன சட்டம், 2004 இன் பிரிவு 2(f) இன் செல்லுபடியை சவால் செய்தார். இது இந்திய அரசுக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளிக்கிறது என்று குற்றம் சாட்டி, "வெளிப்படையாக தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது மற்றும் புண்படுத்தும்" என்று குறிப்பிட்டது. சட்டத்தின் பிரிவு 2(f) இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களை அடையாளம் காணவும் அறிவிக்கவும் நடுவண் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. மனுவின்படி, உண்மையான மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு சிறுபான்மையினரின் உரிமைகளை மறுப்பது, அரசியலமைப்பின் 14 மற்றும் 21 வது பிரிவுகளை மீறுவதாகும்

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு சமூகங்களை சிறுபான்மையினராக அறிவிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பல உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை மாற்றக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் இந்திய அரசு தனது கருத்தை கூற உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டது.[11]இந்த வழக்கில் இந்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியது.[12]24 நவம்பர் 2022ல் அன்று வழக்கு குறித்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்தறிய இந்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் உச்ச நீதிமன்றம் வழங்கியது.[13][14]

இந்துக்கள் 10 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் சிறுபான்மை மக்களாக உள்ளனர் என இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.[15]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]