இந்திய உளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய உளவியில் (Indian psychology) என்பது பன்னெடுங்காலமாக இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவிய உளவியல் அடிப்படையிலான கோட்பாடுகளைக் குறித்தும், மெய்யியல் கருத்துக்களைக் குறித்தும், சமயம் சார்ந்த கொள்கைகள் குறித்தும் சீர்தூக்கி பார்க்கும் உளவியலின் ஒரு பிரிவு ஆகும். இதனை இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் மனிதர்களின் உளவியல் நிலைகளை அலசும் அறிவியல் பிரிவு என எண்ணுதல் தவறு ஆகும்.[1] இந்திய உளவியல் இயக்கம்(The Indian Psychology Movement) என்பது இதுசார்ந்தவைகளை மட்டும் ஆராயும், வளர்ந்து வரும் உளவியலாளர்களின் செயல்களை குவியப்படுத்தும், தெரிவிக்கும் இயக்கம் என அழைக்கிறோம்.[2] இந்தியாவில் பலவிதமான சமய வழிமுறைகளுக்கு ஏற்ப, இந்த உளவியல் கொள்கைகள் தோன்றி, மாறி, வளர்ந்து வந்துள்ளதன. அவற்றில் சிலவற்றினை இங்கு காண்போம்.[3]

பௌத்தம்[தொகு]

பௌத்த வழிமுறைப்படி, ஆன்மாவுக்கு இடம் கிடையாது. ஒன்றன்பின் ஒன்றாக நீரோட்டம் போல் வரும், அகநிகழ்ச்சிகள் இணைந்து நிற்றலே உள்ளம் என்றும், 'அகம்' அல்லது 'தான்' என்றும் அழைப்பர். இது நிலையான ஒன்றல்ல என்றும் கூறுவர். நீரோட்டத்தில் தொடர்ச்சி உண்டேயன்றி, ஒருமைப்பாடு கிடையாது. நனவு நிலையில் நனவு, நனவின் அடிப்பாகம், நனவின் மேற்பாகம் என மூன்று படிகள் உண்டு. சாதாரணமான நனவு என்னும் 'காமசித்தம்', ஆசைக்கு இடமான பொருள்களை உணர்வது ஆகும். நாவின் மேற்பாகம் ரூபலோகம், அரூபலோகம், லோகுத்தரம் ஆகிய மூன்றையும் உணர்வது என குறிப்பிடப்படுகின்றன. நனவு என்பது, பாவாங்கம் எனப்படும். நனவின் அடிப்பாகத்தின் உயிர் ஓட்டத்தினின்றும், முளைத்து நனவின் அடிப்பாகத்தில் போய் முடியும். ஆகவேயுங்கூறும் வாழவேண்டும் என்னும் சக்கற்பமாகிய லிபிடோ என்னும் கருத்தும் உண்டு.

பிராய்டு கூறும் பால் இயல்பூக்கம் என்னும் கருத்தும், ஆடலர் கூறும் அதிகாரம் வகிக்க வேண்டும் என்னும் சங்கற்பம் என்னும் கருத்தும், பௌத்தர்கள் முன்னாலேயே கண்டவை தாம் என்று அறிகிறோம் . காமதிருஷ்ணை (பால் இயல்பூக்கம்), பாவ திருஷ்ணை (வாழ வேண்டுமென்ற சங்கற்பம்), விபவதிருஷ்ணை (அதிகாரம் வகிக்க வேண்டும் என்ற சங்கற்பம்) ஆகிய மூன்றும் மனித இயல்பின் அடிநிலை உந்து சக்திகள் ஆகும். சிந்தனை இயற்றி நிலையைப் பிறப்பிக்கிறது. இயற்றிநிலை செயலைப் பிறப்பிக்கிறது. ஆகவே ஆதியில் பின்பற்றப் பெற்ற பௌத்த மதத்தில் கருத்துத் தொடர்பு-உளவியலின் விதையும், பகுப்பு-உளவியலின் விதையும் காணப் பெறுகின்றன.

ஜைனம்[தொகு]

ஜைன மதம் அறிவுநிலை, உணர்ச்சி நிலை, இயற்றி நிலை ஆகிய மூன்று நனவு நிலைகளையும் ஏற்றுக்கொள்கிறது. ஞானம் என்பதும் தரிசனம் என்பதும் அறிவுநிலைகளாம். அவைதாம் ஆன்மாவின் சாரம். உணர்ச்சி என்பது கர்மபல சேதனங்களாகிய இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிப்பதாகும். இயற்றிநிலையும் செயலும் உலகத்தில் உழலும் ஆன்மாவிடம் காணப்பெறும். அவற்றை உண்டாக்குவன விருப்பும், வெறுப்பும், திரிபுணர்வும் ஆகும். சிந்தனையால் எழும் செயல்கள் ஆன்மா தானாகச் செய்யும் செயல்கள்; உள்ளக்கிளர்ச்சியால் எழும் செயல்கள் ஆன்மா தானாகச் செய்யாமல் செய்யும் செயல்கள், ஆனால் பரிபூரணம் அடைந்த சித்த ஆன்மா செய்யும் செயல்கள் அனைத்தும் ஆன்மாவின் தூய்மை காரணமாக எழுந்தவைகளாக இருக்குமாதலால் தானாகச் செய்யும் செயல்களேயாகும். விடுதலை பெற்ற ஆன்மா எல்லையற்ற அறிவும், எல்லையற்ற உணர்வும், எல்லையற்ற ஆனந்தமும், எல்லையற்ற ஆற்றலும் படைத்ததாகும். அதனிடம் செயல் எதுவும் காணப்பெற மாட்டாது. இந்தக் கர்ம பந்தங்களை அழித்தால் எல்லையற்ற அறிவும், உணர்வும், ஆனந்தமும், ஆற்றலும் ஆன்மாவிடம் பொங்கி எழுந்து எல்லாம் அறியும் தன்மையை உண்டாக்கும்.

யோகம்[தொகு]

பதஞ்சலி மனத்தை மன இயக்கங்களின் ஓட்டமாகவே கூறுகிறார் அந்த மன இயக்கங்கள் நிச்சய அறிவு, திரிபுக்காட்சி, கற்பனா சக்தி, நித்திரை, ஞாபகம் என ஐவகைப்படும்.

  1. பொய் அறிவு என்பது திரிபுக் காட்சி.
  2. ஆணவம் என்பது புத்தியை ஆன்மா தவறாக எண்ணிக்கொள்வது ஆகும்.
  3. பற்று என்பது முன்னால் இன்பம் தந்ததை, இப்பொழுது நினைவு கூர்ந்து அசைப்போடுதல்.
  4. துவேஷம் என்பது முன்னால் துன்பந்தந்ததை, நினைந்து, அதனிடம் கோபங்கொள்வது ஆகும்.
  5. மரண பயம் என்பது இயற்கை ஊன்றலால் ஏற்படுவது ஆகும்.

செயல்கள் புண்ணிய பாவங்களை உண்டாக்குகின்றன. சென்ற பிறப்புக்களில் பெற்ற, மனப்போக்குக்களும் உண்டு. மனநிகழ்ச்சிச் சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டிருக்கிறது. அதை அறவே நிறுத்துவதே யோகத்தின் குறிக்கோள் எனக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உளவியல்&oldid=3781575" இலிருந்து மீள்விக்கப்பட்டது