இந்தியாவில் மகளிர் நலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஒடிசாவில் சமூக நலப்பணியாளர் ஒரு பெண் குழந்தைக்கு தடுப்பூசிப் போட ஆயத்தமாகிறார்.

இந்தியாவில் மகளிர் நலம் (Women's health in India) என்பது புவியியல் கூறுகள், சமூகப் பொருளாதார நிலை, பண்பாடு போன்ற பல்வேறு சுட்டிகள் மூலம் ஆராய்ந்தறியப்படுகிறது. [1] இந்தியாவில் மகளிர் நலத்தை மேம்படுத்த உலகளாவிய நலவாழ்வுச் சராசரியோடு இந்திய ஆண்களின் நலவாழ்வும் ஒப்பு நோக்கப்பட்டு, அதன் பல்வேறு பரிமாணங்களும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.[2] மனித உடல்நலத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் ஒரு முன்னிலைக் காரணியாக மனித நலம் திகழ்கிறது. தற்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் இந்தியாவில் மகளிர் பல்வேறு நலக்குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். மகளிர் நலத்தை மேம்படுத்துவதிலும், தரமான மனித மூலதனத்தை உருவாக்குவதிலும் சேமிப்பு மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்களிக்கக்கூடிய இந்திய மகளிர் நலவாழ்வு பாலின, வகுப்புவாத, இனவாதப் பிரச்சனைகளால் பேரளவில் பாதிப்புக்குள்ளாகிறது. [2]

நலவாழ்வில் பாலினப் பாகுபாடு[தொகு]

முதன்மைக் கட்டுரை:இந்தியாவில் பாலினப் பாகுபாடு

ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவை நடுத்தர வருவாய் கொண்ட நாடாகத் தரப்படுத்தியுள்ளது.[3] உலகப் பொருளாதாரக் கருத்துக்களம் ஒன்று இந்தியாவை பாலினச் சமத்துவமற்ற மிக மோசமான நாடாகக் குறிப்பிட்டுள்ளது.[4] ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட 2011 ஆம் ஆண்டைய மனித வளர்ச்சி அறிக்கை, பாலினச்சமத்துவமற்ற 187 நாடுகளில் இந்தியாவை 132 ஆவதாகத் தரவரிசைப்படுத்தியுள்ளது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இந்தப் பாலினச் சமத்துவமின்மைக் குறியீடானது (GII) பேறுகாலத் தாய்சேய் இறப்பு வீதம், இளவயதில் கருத்தரித்தல் வீதம், கல்விச் சாதனையடைவுகள் மற்றும் பெண்தொழிலாளர் பங்கேற்பு வீதம் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இந்தப் பாலின சமத்துவமின்மை இந்தியாவில் பெண்களின் கல்வி வாய்ப்புகள் குறைவாயிருத்தல், பெண்கள் தொடர்ந்து உயர்கல்விகற்றலில் தேக்கம், குறைவான பெண் தொழிலாளர் பங்களிப்பு ஆகிய நிலைமைகளைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. [4]

இந்திய சுகாதார அமைப்பின் சிக்கல்கள்[தொகு]

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்திய சுகாதார அமைப்பு குறிப்பாக ஊரகப்புறங்களில் அதிகம் கவனம் செலுத்தியது. மருத்துவர், செவிலியர் உட்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக அதிக சுகாதார மையங்கள் இருந்தும் எண்ணிக்கை அடிப்படையில் மிகுந்த சிரமத்திற்கு ஆளானது. இதன் விளைவாக சிற்றூர்களில் உடல் ஆரோக்கியம் பேண தகுந்த பயிற்சியற்ற, தகுதியற்ற தனிநபர்களிடம் கூட சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏறத்தாழ 25% அலோபதி மருத்துவர்கள் மருத்துவப் பயிற்சியற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டனர். இது புவியியல் அமைப்பு ரீதியாக வேறுபட்டிருந்தது.[5] புவியியல் சார்ந்த தற்போதைய சுகாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியப் பெண்கள் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதிலும் உள்ள சுகாதாரப்பணியாளர்களுள் மூன்றில் இரண்டு பங்கு ஆண்களும், வெறும் 6% மட்டுமே பெண்களுமாக் இருந்தனர். கிராமப்புறங்களில் 10,000 பேருக்கு சுமார் 0.5 பெண் அலோபதி மருத்துவர்களே இருந்தனர். இது குறிப்பாக ஊரகப்புறங்களில் உள்ள பெண்களை மிகவும் பாதித்தது.[5]

நகரத்தின் மக்களடர்த்தி காரணமாக நகர்ப்புற மருத்துவ அமைப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியயிருக்கிறது. இதனால் தாய்சேய்நலப் பராமரிப்பு தொடர்பான அனுகுமுறையில் நகர்ப்புறத்திற்கும் கிராமப்புறத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது.[6] இந்திய குடும்பநல ஆய்வறிக்கை(NFHS II, 1998-1999)யின்படி நகர்ப்புரங்களில் பேறுகால இறப்புவிகிதத்தை விட கிராமப்புறங்களில் பேறுகால இறப்பு விகிதம் 132 விழுக்காடு அதிகமாக உள்ளது.[6]

இந்திய அரசாங்கம் இந்தப் பாலின சமத்துவமின்மையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. 1992 இல் இந்திய அரசாங்கள் “தேசிய பெண்கள் ஆணையத்தை நிறுவியது. இந்த ஆணையம் பெண்களின் குறிப்பாக பெண்களுக்கிழைக்கப்படும், கற்பழிப்பு, குடும்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய சமத்துவமின்மைப் பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கானதாக உள்ளது. ஆயினும் இந்திய நீதி அமைப்பு முறையின் வேகமின்மையும், இந்தியக் கலாச்சார நெறிமுறைகளும் ஆண்கள், பெண்களிடையே சமத்துவத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தடுக்கக்கூடியதாயிருக்கின்றன.[7]

இந்தியாவில் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் (NRHM) 2005 இல் இயற்றப்பட்டது. குழந்தைகளின் இறப்பு விகிதம், பேறுகாலத்தில் தாய் இறப்பு விகிதம் ஆகியற்றைக் குறைப்பதே இதன் முக்கியக் குறிக்கோளாகும். மேலும் உலகளாவியப் பொதுச் சுகாதார சேவைகளை அணுகுவதும், பாலின வேறுபாடுபாடுகளைச் சமப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.[8] 2011 இல் நாயர் மற்றும் பாண்டா ஆகியோரின் ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 2005-இல் தேசிய ஊரக சுகாதாரத்திட்டம் தொடங்கி, ஊரக தாய்சேய் நலம் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பிறகும் வளரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்னோக்கிய நிலையிலேயே உள்ளது.[9]

விளைவுகள்[தொகு]

பழங்குடியினப் பெண்களின் நலப்பிரச்சனைகள்[தொகு]

தெலுங்கானாவில் ஆதிலாபாத்தில் பழங்குடியினப் பெண்களிடையே மார்பகக்கட்டிகள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள இங்குள்ள மக்களுக்கு மிக மோசமான நலக்கேடு ஏற்பட்டுள்ளது. பழங்குடியினரான கோண்டு, பார்தன், கோலம், தொட்டி ஆகிய பழங்குடியினத்தவரிடையே மார்பகப் புற்றுநோயோ அல்லது வேறு எந்தவகைப் புற்றுநோயோ, சாதாரணமான பிற மந்தமான தொற்றுகள் கூட கானப்படுவதில்லை எனத் தன்னைக் கோண்டு இனத்தைச் சேர்ந்தவராகக் கூறும் மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலரும் மருத்துவருமான தோட்சம் சந்து குறிப்பிடுகிறார்.[10]

ஊட்டச்சத்துக் குறைபாடும் நோய்களும்[தொகு]

வறுமையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளாகும்.

ஒவ்வொரு தனிநபருக்கும் ஒட்டுமொத்த நலம் பேணுவதில் ஊட்டச்சத்து பெரும் பங்காற்றுகிறது. உளவியல், உடல்நல நிலையைப் பேணுவதில் ஊட்டச்சத்துக் குறைபாடானது வியக்கத்தக்க அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.[11] வளரும் நாடுகளுள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்கள் மிக அதிகம் காணப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது. [12] 2000 ஆமாண்டு வெளியிட்ட ஒரு ஆய்வானது 70 விழுக்காடு கருவுறாத பெண்களும், 75 விழுக்காடு கருவுற்ற பெண்களும் இரும்புச்சத்துக் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[11] ஊட்டச்சத்துக் குறைபாட்டின் முக்கியக் காரணியாக விளங்குவது குறிப்பிட்ட பாலினத்தைத் தேர்ந்தெடுத்து உணவு வளங்களை விநியோகிப்பதாகும்.[11] 2012 இல் டரோசி என்பவரது ஆய்வு, முன்பதின்ம வயதில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம அளவில் உணவு உட்கொள்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது.[11] ஆயினும் பெண்கள் பருவமுதிர்ச்சி அடையும் போது ஊட்டச்சத்து குறைபாட்டு விகிதமான அதிகரிக்கவே செய்கிறது.[12] மேலும் ஜோஸ் என்பவர் ஆய்வின்படி திருமணம் ஆகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது.[12] பேறுகால ஊட்டச்சத்துக் குறைபாடானது தாயின் பேறுகால இறப்பை அதிகரிக்கும் ஆபத்துடன் தொடர்புடையது மேலும் இது குழந்தைக்குப் பிறவிக்குறைபாட்டையும் தோற்றுவிக்கும்.[12] ஊட்டச்சத்துக் குறைபாடுபற்றிய உரையாடல்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்மை பயக்கும்.

மார்பகப் புற்றுநோய்[தொகு]

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிகமாகப் பரவி வரும் புற்றுநோயை இந்தியா எதிர்கொள்ளவேண்டியுள்ளது. [13] வளர்ந்துவரும் நாடுகளில் 2020 இல் உலகில் புற்றுநோய் பாதித்தோர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 விழுக்காடாகவும் அவற்றில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியராகவும் இருக்கலாம்.[13] நாட்டின் மேலைநாகரிக எழுச்சி, மார்பக புற்றுநோய் திடீரென அதிகரித்து வருவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். இது மட்டுமல்லாமல் இதனோடு கூடவே மேற்கத்திய உணவு, பெண்களின் அதிகளவான நகர நாகரிக ஈடுபாடு, தாமதமான கருத்தரித்தல் ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.[13] மேலும், இந்தியச் சுகாதாரப் பராமரிப்பின் உள்கட்டமைப்பில் உள்ள சிக்கலானது, இதனைப் போதுமான அளவு காட்சிப்படுத்துதலையும் பெண்களை அணுகுவதையும் தடுக்கிறது. இறுதியில் பிற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த சுகாதார விளைவுகளையே ஏற்படுத்துகிறது.[14] 2012 இன் படி, இந்தியாவில் பயிற்சிபெற்ற புற்றுநோய் நிபுணர், புற்றுநோய் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட பற்றாக்குறையானது இந்திய சுகாதார அமைப்பில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும்.[13]

இனப்பெருக்க நலம்[தொகு]

கேரளாவில் பேறுகாலச் சுகாதாரம் பற்றி பெண்களுக்கான விழிப்புணர்வு

பேறுகாலச் சுகாதாரமின்மையானது தாய்மார்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் எதிர்கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகளில் பெரும் பங்களிக்கிறது.[15] பேறுகாலத்தில் தாய்க்கு ஏற்படும் நலக்கேடானாது ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தை மிக மோசமாகப் பாதிக்கிறது. மேலும் மகளிரின் பொருளாதார நடவடிக்கைகளில் பங்களிக்கும் திறனையும் குறைக்கிறது. எனவே, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம் (NRHM) மற்றும் குடும்ப நலத் திட்டம் போன்ற தேசிய சுகாதாரத் திட்டங்களை இந்தியா முழுவதும் தாய்மார்களுக்கான சுகாதாரத் தேவைகளை நிறைவு செய்ய உருவாக்கப்பட்டிருக்கிறது.[15]

கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வியத்தகு வளர்ச்சியை கண்டபோதும், பல வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் பேறுகால இறப்பு தொடர்ந்து வளர்ந்துவரும் நிலையே நீடிக்கிறது. [15] ஒரு நாடு என்ற முறையில், 1992 முதல் 2006 க்குமிடையேயான கால அளவில் உலகளாவிய இறப்புகளில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு இந்தியா பங்களித்துள்ளது.[15]

சமூகப் பொருளாதார நிலை மற்றும் கலாச்சாரக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் உடல்நலக் கவனிப்பில் ஏற்படும் தடைகளே பேறுகால இறப்பு அதிகமாக நிகழ்வதற்கு முதன்மைக் காரணமாக விளங்குக்கிறது.[15] இருப்பினும் பேறுகால இறப்பானது இந்திய முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலும் கூட ஒரே போல் இல்லை. போதுமான மருத்துவ வசதி பெற்றுள்ள நகர்ப்புறங்களில் பேறுகால இறப்பு மிகவும் குறைந்துள்ளது.[15] உதாரணமாக, அதிகக் கல்வியறிவு மற்றும் வளர்ச்சிவிகிதங்களைக் கொண்ட மாநிலங்கள், அதிகப் பேறுகால நலமும் குறைவான குழந்தை இறப்பு விகிதமும் கொண்டுள்ளன.

பால்வினை நோய்கள்[தொகு]

ஜூலை 2005 இன் படி இந்தியாவில் ஏறத்தாழ 40 விழுக்காடு பெண்கள் எய்ட்ஸ் எனும் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[7] இந்தியாவில் கலாச்சார நெறிபிறழ்வு, கல்வியறிவின்மை, ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதில் போதுமான அறிவின்மை ஆகிய காரணங்களால் இந்நோய்த் தாக்கமானது அதிகரித்து வருகிறது.[7] இந்திய அரசின் பொதுச்சுகாதார அமைப்பு, ஹெச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய்க் கண்டறிவதற்கான இலவசப் பரிசோதனைகள் போன்ற போதுமான நடவடிக்கைகளை வழங்காததன் காரணமாக இப்பிரச்சனை மேலும் சிக்கலாகி வருகிறது.[16]

இந்தியக் கலாச்சார அம்சங்கள் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றின் பாதிப்பை அதிகரிக்கின்றன. ஒரு பெண் தானாக ஓர் ஆணை ஆணுறை பயன்படுத்த வலியுறுத்த இயலாது. ஏனெனில் அவ்வாறு வலியுறுத்தும்பொழுது அப்பெண்ணின் ஒழுக்கமின்மை குறித்த பிரச்சனைகள் வரலாம். மேலும் இதுபோன்ற கருத்தடைச் சாதனங்கள் புணர்ச்சியின் போது இடையூறை ஏற்படுத்தலாம்.[16] மேலும் வழிவழியாக வரும், பெண்ணிற்குச் செய்யும் கருத்தடை முறையே முதன்மையான கருத்தடை முறையாகவும் இருந்துவருகிறது. ஆயினும் இம்முறையானது எச்.ஐ.வி நோய்ப் பரவுவதை தடுப்பதில்லை.[17]

தற்பொழுது எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களில் ஆண்களின் விகிதத்தை விட பெண்களின் இறப்புவிகதம் அதிகமாக உள்ளது.[16] இந்தியாவில் பெண்களின் நலக் குறைபாட்டிற்கான காரணமானது மற்றவற்றைப் போலவே பல பரிமாணங்களைக் கொண்டதாயிருக்கிறது, மிகக் குறைந்த கல்வியறிவு, பொருளாதாரத்தில் ஆண்களைச் சார்ந்திருத்தல், ஆண்களுடன் ஒப்பிடுகையில் சுகாதாரத் தேவைகளுக்கான மருத்துவத்தைப் பெறுவதில் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான வாய்ப்புகளே இருந்த்தல் ஆகியவற்றை இதற்கான காரணமாகச் சொல்லலாம்.[16] இதுபோன்ற காரணங்கள் எச்.ஐ.வி தொற்று பாதித்த பெண்களுக்கு மேலும் தீவிர சிக்கல்களை உருவாக்குகிறது.[16] மேலும் ஒரு பெண்ணுக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்பட்டால் அது அந்தப்பெண்ணின் திருமணவாய்ப்பைக் குறைப்பதாகவே அல்லது வாய்ப்பில்லாமலோ செய்துவிடுகிறது. இது இந்நோய் பாதித்த ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய களங்கத்தை உண்டாக்கிவிடுகிறது.

இனப்பெருக்க உரிமை[தொகு]

இந்தியாவில் 1970 களின் முற்பகுதியில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.[18] இருப்பினும் நகரங்களில் இதைச் செயல்படுத்துவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மருத்துவர்களின் பற்றாக்குறை மற்றும் தேவையா உபகரணங்கள் இல்லாத காரணத்தால் 20 விழுக்காடு சுகாதாரமையங்களில் மட்டுமே கருக்கலைப்புக்கான சேவையை வழங்க இயலும். [19]

இந்தியாவில் பொதுவாகக் கருக்கலைப்பு செய்யப்படுபவை பெண்சிசுக்களாகும். பெண்கரு கருக்கலைப்பு செய்யப்படுவதற்கு பல்வேறு காரனங்களைச் சொல்லலாம். சான்றாக உயர்கல்வி கற்ற ஒருபெண்ணுக்கு முதலின் ஒரு பெண்குழந்தை பிறந்திருந்தால் அடுத்ததும் பெண்கருவாயின் கலைக்க விரும்பலாம்.[20]பெண்கரு கருக்கலைப்புச் சட்டமானது பெண்களை விட ஆண்கள் விகிதத்தை அதிகப்படுத்தியுள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 0-6 வயதுள்ள குழந்தைகளில் நீண்டகாலமாக ஆண்களே அதிகம் காணப்படுகின்றனர்.[11]

பொருளாதாரம், மதம் ஆகிய காரணங்களால் இந்தியச் சமூகத்தில் பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளைத் தேர்ந்தெடுப்பது வேரூன்றியிருக்கிறது.[21] பெண்கள் வருவாய் ஈட்டுபவர்களாக இல்லாத நிலை காரணமாக அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு குறைவு எனப் பெரும்பாலும் நம்பப்படுகின்றது.[11] நிதி ஆதரவு, முதிய வயதில் பாதுகாப்பு, சொத்துரிமை. வரதட்சணை, சடங்குகள் சூழ்ந்த மத நம்பிக்கைகள் ஆகிய அனைத்தும் ஒருவர், பெண்குழந்தையை விட அதிகமாக ஆண்குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தில் பங்களிக்கின்றன. [21] மேலும் பெண்குழந்தைகளைப் பெற்றால் அவர்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து நல்வாழ்க்கை அமைத்துக்கொடுத்தல் என்பது மிகவும் சுமையான பணியாகக் கருதுவதால் ஆண்குழந்தைகளை விரும்புவதற்கு முதன்மைக் காரணங்களில் ஒன்றாக அமைகிறது.[21]இந்தியக் குடும்பங்களில் ஆணுக்குக்கான திருமணச்செலவை விட பெண்களுக்கு பெருமளவில் வரதட்சனை கொடுத்து அனைத்து செலவுகளையும் ஏற்று நடத்துதல் என்பது பெரும்பாலும் வழக்கமாக உள்ளது.[21]

இதய நோய்களுக்கான பராமரிப்பு[தொகு]

இந்தியாவில் இதய நோய்களால் பெண்கள் அதிகமாக உயிரிழக்கின்றனர். [18] உலக மக்கள் தொகையில் இது 20 விழுக்காடாயினும், இந்தியாவில் இதய நோய்களால் 60% பெண்கள்உயிரிழந்துள்ளனர். இந்தியப்பெண்களுக்கு இதய நோய்களால் மிக அதிக அளவில் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அரசு சாராத நிறுவனமான இந்திய இதய சங்கம் இப்பிரச்ச்சனை குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறது. [22] இந்தியாவில் மருத்தவ சுகாதர வசதிகளைப் பெறுவதில் நிலவும் பாலினப் பாகுபாட்டின் காரணமாகவே இந்தியப்பெண்கள் அதிக அளவில் இதய நோய்களால் உயிரிழக்கின்றனர்.[18] இந்தியாவின் சமூகக் கலாச்சார நெறிமுறைகள் பெண்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைப் பயன்படுத்துவதில் ஏற்படுத்தும் தடைகளே இந்த அதிகமான வேறுபாட்டிற்கு ஒரே காரணமாகும்.[23] சான்றாக பிறவி இதயநோய் ஏற்பட்டுள்ளவர்களில் பெண்களைவிட ஆண்களுக்கே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஏனெனில் அறுவை சிகிச்சையால் ஏற்படும் வடு முதலான காரணத்தால் பெண்களுக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு குறைகிறது என குடும்பத்தினர் கருதுகின்றனர். [24]

மேலும் சில குடும்பங்களில் மருத்துவ சிகிச்சையினால் எதிர்மறையான விளைவுகளை ஏற்பட்டுள்ளதைத் தொடர்புபடுத்தி, சமூகத்தில் இழுக்கேற்பட்டு விடுமோ என அஞ்சி, தங்கள் மகளுக்கு முறையான மருத்துவசிகிச்சையளிப்பதில் தவறிவிடுகின்றனர். 2011 இல் பதேன்கர் என்பவரின் ஆய்வின்படி பிறவி இதநோயுள்ள 100ஆண்கள், 100 பெண்களில் 70 ஆண்கள் முறையான அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். ஆனால் 22 பெண்கள் மட்டுமே அதே சிகிச்சை பெறுகின்றனர். [24]

மேலும் , தனக்கு விருப்பமான துணையை வெளிப்படையான பேச்சுவார்த்தை மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் நிலவும் கலாச்சார நிலையானது இந்த வேறுபாட்டில் முதன்மைக் காரணியாக இருக்கிறது. இந்தியக் குடும்பங்களில் மூத்த உறுப்பினரே இளைய பெண்களுக்கு ஏற்ற கணவனைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு பெண் இதய நோய்க்கான மருத்துவச் சிகிச்சை செய்யப்பட்டவள் எனில் அவளுக்கேற்ற மணமகனைத் தேடுவதில் அவர்களின் திறன் குறைவுபடுகிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்குமான மாறுபட்ட சுகாதார விளைவுகளை நோக்கிச் செலுத்துகிறது.

மனநலம்[தொகு]

தற்கொலை[தொகு]

குடும்ப வன்முறை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chatterjee, A, and VP Paily (2011). "Achieving Millenium Development Goals 4 and 5 in India.". BJOG 118: 47–59. doi:10.1111/j.1471-0528.2011.03112.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.14710528.2011.03112.x/abstract;jsessionid=A23A846362BA06FFA44116459030519C.d03t04. 
  2. 2.0 2.1 Ariana, Proochista and Arif Naveed. An Introduction to the Human Development Capability Approach: Freedom and Agency. London: Earthscan, 2009. 228-245. Print.
  3. United Nations. "Sustainability and Equity: A Better Future for All." பரணிடப்பட்டது 2018-10-01 at the வந்தவழி இயந்திரம் Human Development Report 2011. (2011): n. page. Web. 12 April 2013.
  4. 4.0 4.1 Raj, Anita (2011). "Gender equity and universal health coverage in India". Lancet 377: 618–619. doi:10.1016/s0140-6736(10)62112-5. 
  5. 5.0 5.1 Rao, Mohan; Rao, Krishna (2011). "Human resources for health in India". Lancet 377: 587–98. doi:10.1016/s0140-6736(10)61888-0. 
  6. 6.0 6.1 Adamson, Paul; Krupp, Karl (2012). "Are marginalised women being left behind? A population-based study of institutional deliveries in Karnataka, India". BMC Public Health 12: 30. doi:10.1186/1471-2458-12-30. 
  7. 7.0 7.1 7.2 Doshi, Sonal; Gandhi, Bindi (2008). "Women in India: The Context and Impact of HIV/AIDS". Journal of Human Behaviour in the Social Environment 17 (3–4): 413–442. doi:10.1080/10911350802068300. 
  8. Ministry of Health and Family Welfare, . "About NHRM." பரணிடப்பட்டது 2011-09-23 at the வந்தவழி இயந்திரம் National Rural Health Mission. Government of India. Web. 28 April 2013.
  9. Nair, Harish; Panda, Rajmohan (2011). "Quality of maternal healthcare in India: Has the rural health mission made a difference". Journal of Global Health 1 (1): 79–86. 
  10. Singh, S. Harpal (13 April 2015). "Survey of tribal women shows up breast abnormalities" – via www.thehindu.com.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 Tarozzi, Alessandro (2012). "Some Facts about Boy versus Girl Health Indicators in India: 1992—2005". CESifo Economics Studies 58 (2): 296–321. doi:10.1093/cesifo/ifs013. http://cesifo.oxfordjournals.org/content/58/2/296. 
  12. 12.0 12.1 12.2 12.3 Jose, Sunny, and K Navaneetham. "A Factsheet on Women's Malnutrtion in India." Economic and Political Weekly. 43.33 (2008): 61-67. Web. 21 February 2013.
  13. 13.0 13.1 13.2 13.3 Shetty, Anita (2012). "India faces growing breast cancer epidemic". Lancet 378: 992–993. doi:10.1016/s0140-6736(12)60415-2. 
  14. Thorat, Mangesh (2012). "Tackling breast cancer in India". Lancet 379: 2340–2341. doi:10.1016/s0140-6736(12)61017-4. 
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 Pathak, Praveen (2010). "Economic Inequalities in Maternal Health Care: Prenatal Care and Skilled Birth Attendance in India, 1992-2006". PLoS ONE 5 (10): 1–17. doi:10.1371/journal.pone.0013593. பப்மெட்:21048964. 
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 Pallikadavath, Saseeendran; Stones, R (2003). "Women's Reproductive Health Security and HIV/AIDS in India". Economic and Political Weekly 38 (39): 4173–4181. 
  17. Steinbrook, Robert (2007). "HIV in India--A Complex Epidemic". New England Journal of Medicine 356 (11): 1089–93. doi:10.1056/nejmp078009. பப்மெட்:17360986. 
  18. 18.0 18.1 18.2 Chow, Clara; Patel, Anushka (2012). "Women's cardiovascular health in India" (PDF). Heart 98: 456–459. doi:10.1136/heartjnl-2011-300957. http://heart.bmj.com/content/98/6/456.full.pdf. 
  19. Grimes, DavidExpression error: Unrecognized word "etal". (2006). "Unsafe abortion: the preventable pandemic". Lancet 368 (9550): 1908–1919. doi:10.1016/s0140-6736(06)69481-6. பப்மெட்:17126724. 
  20. Raj, Anita (2011). "Sex selected abortion in India". Lancet 378 (9798): 1217–1218. doi:10.1016/s0140-6736(11)61535-3. பப்மெட்:21962555. 
  21. 21.0 21.1 21.2 21.3 Singh, Ashish (2012). "Gender based within-household inequality in childhood immunisation in India: changes over time and across regions". PLOS ONE 7 (4): e35045. doi:10.1371/journal.pone.0035045. பப்மெட்:22509379. Bibcode: 2012PLoSO...735045S. 
  22. Indian Heart Association Why South Asians Facts 26 April 2015.
  23. Ramakrishnan, SivasubramanianExpression error: Unrecognized word "pednekar". (2011). "Gender differences in the utilisation of surgery for congenital heart disease in India". Heart 97: 1920–1925. doi:10.1136/hrt.2011.224410. 
  24. 24.0 24.1 Pednekar, MangeshExpression error: Unrecognized word "etal". (2011). "Illiteracy, low educational status, and cardiovascular mortality in India". BMC Public Health 11: 567. doi:10.1186/1471-2458-11-567. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_மகளிர்_நலம்&oldid=3759005" இலிருந்து மீள்விக்கப்பட்டது