இந்தியாவில் பேரிடர் மேலாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை என்பது இந்தியாவில் இயற்கை அல்லது மாந்தரால் உருவாக்கப்படும் செயற்கைப் பேரிடர் காலங்களில் வளப் பேணுதலுக்காகவும் உயிர்கள், சொத்துகளை பேரழிவில் இருந்து மீட்கவும் கையாளும் கொள்கைகள், சட்டங்கள், இயல்பு நடவடிக்கைகள், செயல்நெறிமுறைகளையும் பொறுப்புகளையும் குறிக்கிறது. பேரிடர் மேலாண்மைத் திட்டங்கள் பல தளங்களில் அமையும். இவை பெருவெள்ளங்கள், புயல்கள், சூறாவளிகள், தீ, பயன்பேரமைப்புகளின் பொய்த்தல், பெருந்தொற்று பரவல் போன்றவற்றின் சிக்கல்களைச் சந்திக்க திட்டமிடுகிறது.

பேரிடர் மேலாண்மைத் திட்டம்[தொகு]

இத்திட்டம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் 2016 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாள் முதன்முதலாக வெளியிடப்பட்டது. இது பேரிடர்களைத் தவிர்க்கவும், தடுத்து நிறுத்தவும், திறம்பட மேலாளவும் அரசு முகமைகளுக்கு வேண்டிய சட்டக உருவரையையும் நெறிகாட்டலையும் தர முயல்கிறது. 2005 ஆம் ஆண்டில் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றிய பிறகு மேற்கொண்ட முதல் தேசிய அளவுத் திட்டமாகும்.[1]

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005[தொகு]

பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 நவம்பர் 28 இல் நாடாளுமன்றத்திலும் 2005 திசம்பர் 12 இல் மேலவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது 2006 ஜனவரி, 9 இல் குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. சட்டம் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை இந்திய முதன்மை அமைச்சரின் தலைமையில் நிறுவ வழிவகுக்கிறது. இந்த தே.பே.மே.ஆ துணைத்தலைவர் உட்பட, ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினரின் கால வரம்பு 5 ஆண்டுகளாகும். இந்த தே.பே.மே.ஆ முதலில் ஒரு செயல் ஆணையால் 2005 மே 30 இல் நிறுவப்பட்டது. பிறகு இது பேரிடர் மேலாண்மைச் சட்டம், பிரிவு-3(1) இன் கீழ் 2005 செப்டம்பர் 27 இல் அமைக்கப்பட்டது. இந்த தே.பே.மே.ஆ "பேரிடர் மேலாண்மைக்கான கொள்கைகள், திட்டங்கள், வழிகாட்டுதல்கள்" ஆகியவற்றை வகுக்கும் பொறுப்புகளைக் கொண்டதாகும். மேலும் இது பேரிடரின்போது தக்க நேரத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சரத்தின் 6 ஆம் பிரிவின்படி, "நாட்டின் திட்டங்களை உருவாக்க மாநில ஆணையங்களுக்கு வழிகாட்டுதல்களை வகுக்கும்" பொறுப்பும் கொண்டதாகும்.

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005, 11 அத்தியாயங்கள் மற்றும் 79 பிரிவுகள் கொண்டதாகும். இச்சட்டம் இந்தியா முழுவதற்கும் பொதுவானதாகும். இந்தச் சட்டம் "பேரிடா்களின் திறமையான மேலாண்மை" அதனுடன் தொடர்புடைய தவிா்த்தலுக்கான பிற நடவடிக்கைகள் குறித்தும் விளக்குகிறது.[2]

ஆணைய உரிமை பற்றி[தொகு]

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NDMA) என்பது உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிறுவனமாகும். இதன் பிரதான நோக்கம் இயற்கை அல்லது மனிதா்களால் உருவாக்கப்பட்ட பேரிடா்களின் போதும், நெருக்கடி காலத்தின் போதும் விரைந்து பணியாற்றத் தேவையான செயல்திறன் மேம்பாடு மற்றும் பேரழிவு மீட்பு பொறுப்புகளையும் செயல்படுத்துவதாகும். இம்முகமை டிசம்பர் 2005 இல் இந்திய அரசால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டதாகும். பிரதம மந்திரி இதன் (NDMA) முழுமையான அதிகாரம் பெற்ற தலைவர் ஆவார். இந்நிறுவனம் கொள்கைகளை வடிவமைத்தல், வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்வதுடன், மாநில பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் (SDMAs) முழுமையான மற்றும் பகிா்ந்தளிக்கப்பட்ட அணுகுமுறையை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவற்றுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பணிகளையும் செயல்படுத்துகிறது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prime Minister Narendra Modi releases country's first-ever National Disaster Management Plan", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 1 June 2016
  2. "Prime Minister Narendra Modi releases country's first-ever National Disaster Management Plan", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 1 சூன் 2016
  3. Aparna Meduri (2006), "The Disaster Management Act, 2005", The ICFAI Journal of Environmental Law, The ICFAI University Press, pp. 9–11, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2017-05-17
  4. Parliament of India (23 திசம்பர் 2005), "Disaster Management Act, 2005, [23rd திசம்பர், 2005.] NO. 53 OF 2005" (PDF), உள்துறை அமைச்சகம் (இந்தியா), archived from the original (PDF) on 2016-01-29, பார்க்கப்பட்ட நாள் 2017-05-17