இடைச்சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது, பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் சில வகைகள் வருமாறு:

1.வேற்றுமை உருபுகள்- வேற்றுமையில், உருபுகள் இல்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் நீங்கலாக எஞ்சிய ஆறு வேற்றுமைகளுக்கும் உரிய அசை உருபுகள். 2.விகுதிகள்- அன், அள், உம், து போன்றன. 3.இடைநிலை- த், ட், ற், ன், கிறு, ப் போன்றன. 4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன. 5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன.

சில எடுத்துக்காட்டுகள்:

  • கவிதாவைப் பார்த்தேன் - ஐ
  • மற்று அறிவாம் நல்வினை - மற்று
  • மலர் போன்ற கை - போன்ற
  • வந்தான்- ஆன்
  • அக்காளை, இக்காளை - அ, இ
  • சென்றானா?- ஆ

மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் -

  • ஐ என்பது வேற்றுமை உருபு.
  • மற்று என்பது பொருள் குறிக்காது வரும் அசைச்சொல்.
  • ஆன் என்பது ஆண்பால் உணர்த்தும் விகுதி.
  • போன்ற என்பது உவமையை உணர்த்தும் உவமை உருபு.
  • அ, இ என்பன சுட்டெழுத்துகள்
  • ஆ என்பது வினா எழுத்து

இவை எல்லாம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ இடமாகக் கொண்டு வருகின்றன. இவை யாவும் தனித்து வருவதில்லை. இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைச்சொல்&oldid=3850122" இலிருந்து மீள்விக்கப்பட்டது