ஆறாம்திணை (இணைய இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆறாம்திணை - தமிழின் முதல் முழுமையான இணைய நாளிதழ் – ’உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலம்’என்ற பதாகையுடன் மகாகவி பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11, 1998 அன்று தொடங்கப்பட்டது.

தமிழ் வாழ்க்கை திணைப் புல வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து வகைமைப் படுத்தப்பட்டு அதற்குரிய தொழில்கள் மற்றும் பண்பாடு குறிப்புணர்த்தப்பட்டது தமிழுக்கு மட்டுமேயுரிய சிறப்பு. இன்று நவீன யுகத்தின் வாழ்க்கையோடு மற்றொரு அங்கமாக இணையம் செயல்படத் தொடங்கியதைக் காட்டும் வகையில் இணையத்தையும் ஒரு திணையாக்கி இந்த இதழுக்கு ஆறாம்திணை எனப் பெயரிடப்பட்டது. இணையத்தை ஒரு ஊடகமாக, செய்தித் தொடர்புச் சாதனமாக, குறிப்பாக இதழியல் வழியில் பயன்படுத்தமுடியும் என முதன்முதலில் நிரூபித்த இணைய இதழ். தமிழின் முதன்மையான முன்னணி இணைய இதழ்களில் ஒன்று.

தமிழக மக்கள் மத்தியில் இணையம் பிரபலம் ஆகாத ஒரு காலகட்டத்தில் தொடங்கப்பட்ட ஆறாம்திணை குறுகிய காலத்தில் கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் மட்டுமல்லாமல் அரசுத் தரப்பிலும் பாராட்டுதலைப் பெற்றது.[1] அதைவிட, உலகம் முழுவதும் அறிவு நாற்றுகளாகப் பிடுங்கி நடப்பட்ட தமிழர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலமாகச் செய்யப்பட்டது. இதனால் புலம் பெயர்ந்த சூழலில் வாழும் உலகத் தமிழர்களின் முதல் விருப்பமாக இருந்தது. இதன் ஆசிரியராகச் செயல்பட்டவர் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான மூ. அப்பணசாமி.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தென்றல் மாத இதழ் - ஓர் அறிமுகம், அசோக் சுப்பிரமணியம், திசம்பர் 2000
  2. எழுத்தாளர் அப்பணசாமி
  3. இணையத் தமிழுக்கு 25 வயது!, நா. முத்துநிலவன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாம்திணை_(இணைய_இதழ்)&oldid=3392723" இலிருந்து மீள்விக்கப்பட்டது